குமரியில் அதிவேகமாக ஓடும் கனிம வள டேங்கர் லாரிகள் மோதிக்கொள்வதால் ஏற்படும் உயிர்ப்பலிகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். இதைத் தடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 2-ம் தேதி குமாரபுரத்தை சேர்ந்த ஆசிரியை அனிதா, தன் கணவருடன் குலசேகரத்தி லிருந்து வெண்டலிகோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த 14 டயர்கள் கொண்ட டாரஸ் லாரி, அந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கிய அனிதா, தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

ff

Advertisment

அதேபோல் கடந்த 4ஆம் தேதி நாகர் கோவில் -திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜ.க. பிரமுகர் தாணுமாலயபெருமாள் பிள்ளை, நண்பர் அப்பாதுரையுடன் மோட்டார் சைக்கிளில் சுங்கான்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கனிமவளத்துடன் அதி வேகமாக வந்த டாரஸ் லாரி மோதியதில், இருவருமே லாரியின் அடியில் சிக்கிக்கொண்டதில், தாணுமாலயபெருமாள் பிள்ளை சம்பவ இடத்திலே பலியானார். அப்பாத்துரை படு காயத்துடன் சிகிச்சையி லுள்ளார்.

இதற்கடுத்தநாள் மார்த்தாண்டம் மேம் பாலத்தில் நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத் துக்கு சென்றுகொண்டி ருந்த கேரள அரசுப் பேருந்தோடு டாரஸ் லாரி போட்டிபோட்டதில், எதிரே வந்த தமிழ்நாடு அரசு பேருந்தோடு கேரள அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் கேரள பேருந்து டிரைவர் அனீஷ்கிருஷ்ணன் உடல் நசுங்கி இறந்தார். 50 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் கலெக்டர் ஸ்ரீதர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்களிடம் மார்த்தாண்டம் பகுதி மக்கள், ஒன்றிய அரசால் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில், 35க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் இருப்பதால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன என்றும், கனிம டாரஸ் வண்டிகளால்தான் மேம்பாலம் சேதமடைந்துள்ளது என்றும், எனவே டாரஸ் வண்டிகளை வேறு பாதையில் அனுப்ப வேண்டுமென்றும் புகாரளித்தனர்.

Advertisment

நாம் தமிழர் கட்சியின் சீலன் கூறும்போது, "குமரி மாவட்டத்திலுள்ள 20 கல் குவாரிகள், நெல்லை, தூத்துக்குடியிலுள்ள கல் குவாரிகளிலிருந்தும், தினமும் 1700 டாரஸ் வண்டிகளில் கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். சாரைசாரையாகச் செல்லும் இந்த டாரஸ் வண்டிகளால் மற்ற வாகனங்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு, அதிவேகமாகச் செல்வதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

மார்த்தாண்டம் மேம்பாலம் மட்டுமல்லாமல், களியக்காவிளை முதல் காவல்கிணறு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலைகளும் இந்த டாரஸ் வண்டிகளால் பழுதடைந்துள்ளன. வெண்டலிகோட்டில் அதிவேகமாக வந்த டாரஸ் வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் இறந்தவரின் சடலத்தை வைத்து மக்கள் போராட்டம் நடத்தியபோது, குவாரிகள் நிரந்தரமாக மூடப்படும் எனக்கூறிய கலெக்டர், மூன்று நாட்களுக்கு மட்டும் குவாரிகளை மூடிவிட்டு, மீண்டும் திறக்க அனுமதித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

dd

அதேபோல் சுங்கான்கடையில் நடந்த விபத்தில், சம்பந்தப்பட்ட டாரஸ் வாகனத்துக்கு ஆவணங்கள் இல்லாததால் வேறு வாகனத்தைக் காட்டி, இரணியல் போலீசாரை டாரஸ் வாகன டிரைவர் மில்டனும், உரிமையாளர் ஆன்றனியும் ஏமாற்றியுள்ளனர். இங்கு ஓடும் பெரும்பாலான டாரஸ் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் கிடையாது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்வது கிடையாது'' என அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினார்.

பா.ஜ.க. பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, "சமீப காலமாக குமரி மாவட்டத்தில் நடந்த விபத்துக்களைக் கணக்கெடுத்தால், அதில் கனிமவள டாரஸ் வாகனங்கள்தான் பெரும்பங்கு வகிக்கும். ஒன்றையொன்று முந்திச் செல்வதற்காக அதிவேகமாகச் செல்வதால் தான் விபத்துக்கள் பெரும்பாலும் நடக்கின்றன. மேம்பாலத்திலும், தேசிய நெடுஞ்சாலையிலும் பள்ளம் ஏற்படுவதற்கு தமிழக அரசுதான் காரணம். அரசின் ஆதரவோடு இயங்கக் கூடிய குவாரிகளையும், டாரஸ் வாகனங்களையும் நிறுத்தவில்லை என்றால் மக்கள் போராட்டம் வெடிக்கும்'' என எச்சரித்தார்.

"இன்னும் 3 மாதத்திற்குள் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வழக்கம்போல் கேரளாவுக்கு கனிமவளம் கடத்திச் செல்வதை தடுப்போம், குவாரிகளை மூடுவோம், குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலையை சீரமைப்போம் எனக் குறிப்பிட்டு மக்களைத் தேடிவரும் கட்சிகளிடம் கடுமையாகக் கேள்வி கேட்போம்' என கொந்தளிக்கின்றனர் மக்கள்.