"கிணத்தைக் காணோம்' என்பது வடிவேலு காமெடி காட்சி. "வீடுகளைக் காணோம்' என்பது தலையாமங்கலம் மக்களின் வேதனைக் குரல்.

h

மன்னார்குடி ஒன்றியம், தலையாமங்கலம் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஏழை பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்ற அ.தி.மு.க பிரமுகர் ராஜ்மோகன் குழுவினர், ""ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பட்டா கொடுங்கள். உங்க ளுக்கு மோடி திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கிறோம்'' என்று வாங்கியுள்ளனர். அதேபோல கழிவறை கட்டவும் விண்ணப்பம் வாங்கிச் சென்றுள்ளனர். விண்ணப்பம் கொடுத்த ஏழை மக்கள் கேட்கும் போதெல்லாம், ""சீக்கிரம் வீடு வரும்'' என்று சொல் லிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் அதைப் பற்றி கேட்கவில்லை. இந்த நிலையில்தான் விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் வீடு கட்டப்பட்டு, அதற்கான பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால்தான் "வீட்டைக் காணவில்லை, கழிவறைகளை காணவில்லை' என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த முறைகேட்டை கட்சிதமாக செய்தவர் உணவு அமைச்சருக்கு வேண்டியவரான தலையமங்கலம் முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் என்பதும், அவரோடு திட்ட மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் தனி அலுவலர் சிலர் கூட்டணி அமைத்து இந்த மோசடியை செய்துள்ளதாக குற்றஞ் சாட்டி அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் ஆதாரத்தோடு 22 பேர் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயனாளிகள் சுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் நம்மிடம் பேசியபோது, ""வீடு கட்டிக் கொடுப்பாங்கன்னு காத்திருக்கிறோம். ஆனால், இப்ப எல்லாருக்கும் வீடு கட்டியாச்சுன்னு அரசாங்க கணக்கில் எழுதி இருக்கிறதா சொல்றாங்க. இங்க பாருங்க...…நாங்க இன்னும் மண் வீட்லதான் இருக் கிறோம்'' என்றனர்.

Advertisment

பயனாளிகளை திரட்டி புகார் கொடுக்க சென்ற ம.தி.மு.க ஒன்றிய பொறுப்பாளர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாசிலாமணி, ""எங்கள் ஊராட்சியில் தலைவர்கள் இல்லாத 2017-2019 காலகட்டத்தில் ஒன்றிய அதிகாரிகளுடன் இணைந்து பலரும் இரண்டரை கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்று மோடி வீடு, மற்றொன்று தனிநபர் கழிவறை. 225 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 1.80 லட் சத்தில் வீடு கட்டிவிட்டதாக அரசாங்க கணக்கில் வெப்சைட்டில் உள்ளது. இதை எங்கள் ஊர் இளை ஞர்கள் பார்த்து சொன்னார்கள். அந்த பட்டியலை எடுத்து வீட்டுக்கு வீடு சென்று ஆய்வு செய்தால் 142 வீடுகள் கட்டவில்லை. ஆனால் போலியாக வங்கி கணக்கு தொடங்கி, வீடு கட்டப்பட்டதாகக் கணக்கு காட்டி பணம் எடுத்திருக்கிறார்கள்.

hh

அதே போல மத்திய அரசின் கிளீன் இந்தியா திட்டத்தில் ரூ. 14 ஆயிரம் மதிப்பீட்டில் 493 தனிநபர் கழிவறைகள் கட்டியதாக கணக்கு இருக்கு. அதில் 50 கூட கட்டவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு இறந்தவர்கள் பெயரில் கூட வீடு, கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஒரே நபருக்கு 4, 5 கழிவறைகள் கட்டப்பட்டதாக கணக்கு உள்ளது. இப்படி எங்கள் ஊராட்சியில் மட்டும் பல கோடி ரூபாய் மத்திய அரசு நிதி தவறாக எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி பொதுமக்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றோம். அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் விசாரணைக்குழு அமைத்து முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை என்பதை கண்டறிந்துள்ளனர். இதே போல மாவட்டம் முழுவதும் மிகப் பெரிய முறைகேடு நடந்து பல கோடிகள் களவாடப்பட்டிருக்கிறது. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும்'' என்றார்.

Advertisment

ஊழல் போராட்டத்தை முன்னெடுத்துள்ள காங்கிரஸ் பிரமுகரான பிரபாகரன் கூறுகையில், ""தலையமங்கலம் ஊராட்சியில் மட்டும் 275 நபர் களுக்கு தலா 12 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட் டுள்ளது. ஆனால் 60 நபர்களுக்கு மட்டுமே கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் எங்கே என்பதுதான் எங்களின் கேள்வி. அதோடு சொந்த பணத்தில் வீடு கட்டியவர்கள் பெயரிலும் வீடு கட்டியதாக காண்பித்துள்ளனர். இறந்தவர்களின் வங்கிக்கணக்கிலும் பணம் வரவு வைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது, மாவட்டம் முழுவதும் உள்ள முறைகேட்டை கண்டுபிடித்து, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்.

மன்னார்குடி தி.மு.க. எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா, திருவாரூர் தி.மு.க மா.செ பூண்டி கலைவாணன் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் கண்டன அறிக்கை கொடுத்திருப்பதுடன் முழு ஆய்வும் விசாரணையும் செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில், ஊராட்சி மன்றத் தலைவரான தி.மு.க. பாலு, தனது சொந்த ஊரான தலையாமங்கலத்தில் இந்த விவகாரம் கிளம்பியும் பெரிதாக கவனம் செலுத்த வில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முறைகேட்டில் ஈடு பட்டவர்கள் மாவட்ட அமைச்சரின் உறவினரை நாட, அவர் மூலம் அமைச்சருக்கும் தகவல் போயுள்ளது. ஆதாரங்களுடன் புகார் கொடுத்திருப்பதால் அமைச்சர் தரப்பு இதில் தலையிட மறுத்துவிட்டது. அதையடுத்து, போராட்டத்தை முன்னெடுக்கும் ம.தி.மு.க மாசிலாமணி தாக்கியதாக அவர் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டோம். ""தமிழகம் முழுவதும் இந்த கொள்ளை நடந் துள்ளது, திருவாரூர் மாவட்டத்தில் மிக அதிகமாகவே நடந்துள்ளது. ஒரு வீட்டிற்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், அதில் பயனாளிகளுக்கு பணமாக 1 லட்சத்து 10 ஆயிரமும், 70 ஆயிரத்திற்கு கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட

hh

மெட்டீரியலும் கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் பல ஊராட்சிகளில் இறந்தவர்கள், ஊரில் இல்லாதவர், பெரும் செல்வந்தர்களின் ஆவணங்களை இணையதளம் மூலம் எடுத்து, மொத்தமாக சுருட்டியதும் உண்டு. கிராமத்தில் ஏழையாக இருப்பவர்களுக்கு வீடு தருகிறோம் எனச் சொல்லி, அவர்களின் அக்கவுண்ட்டில் 20ஆயிரம் மட்டும் போட்டுவிட்டு மற்றவற்றை கொள்ளையடித் துள்ளனர். வங்கியில் போட்ட சிறுஅளவு பணத்தை இடத்துக்காரர் செலவழித்துவிட்டு வீடு கட்டாமல் விட்டிருப்பார். இது முறைகேடு செய்பவர்களுக்கு சாதகமாகிவிடும். இப்படிப்பட்ட கூப்பாச்சி கோட்டை, பாமினி, குளசேந்திரபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிகமாகவே ஊழல் நடந்துள்ளது. ஆளும் கட்சியினர், ஊராட்சி எழுத்தர்கள், உள்ளூர் பிரமுகர்களோடு பி.டி.ஒ. ஓவர்சியர்கள் நட்பு வைத்துக் கொண்டு, பயனாளிகளின் ஆவனங்களை வாங்கிக் கொண்டு, பணத்தை அவர்களது வங்கிக்கணக்கில் ஏற்றிவிட்டுவிட்டு மெட்டீரியலை கொள்ளையடிப்பது, திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலிவலம், புதுபத்தூர், தப்ளாம்புலியூர், திருதுவரைமங்கல், உள்ளிட்ட ஊராட்சிகளில் நடந்துள்ளது. இதைவிட கழி வறைகளில் நடந்துள்ள ஊழலோ பலகோடி இருக் கும். இவை அனைத்துமே தனி அலுவலர்கள் இருந்த காலகட்டத்தில் நடந் துள்ளது. மன்னார்குடி யூனியனில் மூன்று ஆண்டு களில் மூன்று அதிகாரிகள் மாறிவிட்டனர், யார் இருக்கும் போது நடந்தது என்பது விசாரனை குழு கண்டுபிடித்த பிறகே தெரியவரும், தமிழக அரசு மாநிலம் முழுவதும் தனி விசாரணை ஆணையம் அமைத்து விரிவாக விசாரித்து முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் அ.தி.மு.க. அரசே ஆட்டம் கண்டுவிடும்'' என்கிறார் ஆதங்கமாக.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் இதுகுறித்து நாம் கேட்டபோது, ""முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வருகிறது. அதற்கான ஆவணங்களை திரட்டி வருகிறோம். மூன்று குழுக்களை விசாரனை நடத்த அனுப்பியுள்ளேன். விரைவில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர் உறுதியாக.

""முந்தைய ஜெ ஆட்சியில் தொட்டில் குழந்தை முதல் சுடுகாட்டு கூரை வரை ஊழல் நடந்ததுபோல எடப்பாடி ஆட்சியில் வீடு முதல் கழிப்பறை வரை ஊழல் நாறுகிறது. அதுவும் மத்திய அரசின் திட்டத்தில் நடந்த ஊழல் என்பதால் டெல்லிக்கும் ரிப்போர்ட் போயுள்ளது. அதனால் தான், மாவட்ட அமைச்சர் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட மறுத்திருப்பதுடன், அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜ் மோகனையும் அவரது தம்பியும் ஒப்பந்த காரருமான பாஸ்கரனையும் கட்சியில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளார்'' என்கிறார்கள் சொந்தக் கட்சிக்காரர்களே.

- இரா.பகத்சிங், செல்வகுமார்