எங்கெங்கு காணினும் தமிழர்கள்! மலேயா பல்கலைக்கழகத்தில் மணந்தது தமிழ்! வெவ்வேறு நாட்டினர், வெவ்வேறு கருத்தினர், வெவ்வேறு கட்சியினர். எனினும் அனைவரையும் இணைத்தது அந்தத் "தமிழ்' என்னும் ஒற்றைச் சொல்!
கடந்த 21, 22, 23 ஆகிய நாள்களில், மலே சியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேயா பல்கலைக்கழகத்தில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது அந்த நாட்டு அரசின் ஆதரவோடு. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாரிமுத்து, ஓம்ஸ் தியாகராஜன், கலைஞன் பதிப் பகம் நந்தன், மாசிலாமணி ஆகியோரைக் கொண்ட குழு, அம்மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். 1966ஆம் ஆண்டு எந்த மலேசிய மண்ணில் உலகத்தமிழ் முதல் மாநாடு நடைபெற்றதோ, அதே மண்ணில் நான்காவது முறையாக, 11ஆவது உலகத் தமிழ் மாநாடு இப்போது நடைபெற்று முடிந்திருக்கிறது!
அந்நாட்டின் பிரதமர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் விளையாட் டுத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி, இணைய வழியில் வாழ்த்து களைத் தெரிவித்தார். தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் மகேந்திரன், பாலபாரதி, மதுக்கூர் ராமலிங்கம், ம.தி.மு.க.வின் பொருளாளர் செந்திலதி பன், ஊடகவியலாளர் நக்கீரன் கோபால், பழ கருப்பையா, மணியரசன், நான் உள்படப் பலர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினோம்.
பொது அரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், 6, 7 ஆய்வு அரங்குகளில், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த ஆய்வு கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரும்போது, தமிழுக்கு மேலும் புதிய வளம் சேரும்!
தமிழ் மொழி, இனம், நாடு என்று பல்வேறு வகைகளில் தமிழுக்கு அணி சேர்க்கத்தக்க சிந்தனைகளும், செய்திகளும் அங்கு மலர்ந்தன. வெவ்வேறு தளங்களில் இருந்துவந்த சிந்தனைகள், பல்வேறு மலர்களைக் கொண்ட ஒரு மாலையைப் போலக் காட்சி தந்தது!
பெரிய விழா என்பதால், அதில் சிறிய குறை களும் இல்லாமல் இல்லை. நிறையப் பேர் பங் கேற்றதால், நேர நெருக்கடி தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டது! தமிழக மக்களின் திணை ஒழுக்க வாழ்வு பற்றி, இந்த நூற்றாண்டில் வெளிவந்திருக்கும் கவிதைகள் பற்றி, பெண் விடுதலையின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சி பற்றி, தமிழ்த் தேசியம் இன்று எப்படி உள்ளது என்பது பற்றி, ஊடகத்துறையில் புதிய பாய்ச்சல் பற்றி எல்லாம் 15 நிமிடங்களில் பேசி விடுவது என்பது வித்தையிலும் வித்தையாகவே அமைந்தது!
அதே நேரத்தில் ஆதினகர்த்தர்கள் ஐவரை அழைத்து ஒரு மணி நேரம் அவர்களுக்குக் கொடுத்தனர். அவர்கள் ஐவரும், குரல் மாற்றி, குரல் மாற்றி ஏறத்தாழ ஒரே செய்தி யைத்தான் பேசினார்கள். ஆனால் அவர்களை அடுத்து, மிக முதன்மையான கீழடி பற்றிப் பேச வந்த அமர்நாத் அவர்களுக்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை. இன்னொரு செய்தியையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழ் என்னும் பரந்த வட்டத் திற்குள் சமயமும் அடங்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் எத்தனையோ சமய மரபுகளும், சமய வாழ்வினரும் இருக்க, சைவ மதம் மட்டுமே அங்கு முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆசிவகம், வைணவம், பௌத்தம், சமணம், கிறித் தவம், இஸ்லாம் என்று பல்வேறு மதங்கள் தமிழுக் குக் கொடைகள் பலவற்றை தந்துள்ளன என்பதை யாரால் மறுக்க முடியும்! அவற்றுக்கெல்லாம் அம்மாநாட்டில் ஓர் இடமும் வழங்கப்படவில்லை.
அந்த மாநாட்டில் எத்தனையோ நல்ல செய்திகள் நடைபெற்றிருக்க, எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேசும்போது ஏற்பட்ட மிகச்சிறு சலசலப்பு ஒன்றை மட்டும் இங்கு சில ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றன!
திருமாவளவனின் பேச்சு முதல் நாள், முதல் அமர்வில் நடைபெற்றது. மிகத் தெளிவாகவும், பரந்துபட்ட பார்வையோடும் அவர் தன் உரையை வெளிப்படுத்தினார். தமிழ்த் தேசியம் என்பது சாதி, மதம் கடந்தது என்பதும், பிற தேசிய இனத்தினர் மீது பகையையும், வெறுப்பையும் உமிழாதது என்பதும் அவர் பேச்சின் சாரமாக இருந்தது.
3000 பேர் அமர்ந்திருந்த அந்த அரங்கில், யாரோ மூன்று பேர் பின்னால் இருந்து குரல் கொடுத்து, ஒரு சலசலப்பை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். அரங்கம் அதனைப் பொருட்படுத்த வில்லை. அந்தக் கூச்சலும் அரை நிமிடத்தில் அடங்கி விட்டது. ஆனால் அங்கு நடந்த எல்லா வற்றையும் விட்டுவிட்டு, இதனைப் பெரிதுபடுத்தி இங்கு சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர் என்றால், அவர்களின் மனநிலை என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடி கிறது!
அவருடைய பேச்சுக்கு மறைமுகமாக, அந்த மேடை யில் உரையாற்றிய அந்நாட்டின் இணையமைச்சர் சரஸ்வதி அவர்களும், மலேயா பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜேந்திரனும், ஆய்வு அரங்கில் திரு மணியரசனும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
திருமாவளவன் உரையில் இருந்த நேர்த்தி யை, முதல் நாள் மாலை நிறைவுரை ஆற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், பெயரைக் குறிப்பிடாமல் அருமையாக விளக்கியும், தெளிவுபடுத்தியும் உரையாற்றினார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. அவர்களின் பேரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், தப்பும் தவறுமாகச் சில தகவல் பிழைகளை அந்த மேடை யில் பேசினார். சூடான அரசியலைத் தவிர்த்து, சுவையான இலக்கியத்தை மட்டுமே பேசவேண்டும் என்று கருதிச் சென்ற நான், ஸ்ரீகாந்திற்கு அடுத்துப் பேசியதால், சில மறுப்புகளை எடுத்துச் சொல்லியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டது!
இப்படிச் சில குறைகள் இருந்தாலும், எழுச்சி மிகுந்த, ஒற்றுமையை உருவாக்கக்கூடிய உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி முடித்த குழுவினருக்கும் அந்த ஏற்பாடுகளுக்குத் துணை நின்ற மலேசிய அரசுக்கும் நன்றி பாராட்டுவதே சரியானதாக இருக்கும்!
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் பொறுப்பில் இருக்கும்போது, பன்னிரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்துவது, நமக்கும், நற்றமிழ் மொழிக்கும் பெருமைகளைத் தேடித்தரும்!