சட்டமன்றப் பேரவை நடவடிக்கை கள் குறித்து நக்கீரன் போன்ற இதழ்களில் படித்தும், காட்சி ஊடகங்களில் பார்த்தும் தெரிந்து கொண்ட நான், இப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினராக எனது நேரடியான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலையை அடைந்திருக்கிறேன்.
புனித ஜார்ஜ் கோட்டையில் பாரம் பரியமும் பொலிவும் கொண்ட அந்தப் பேரவையில் அமர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
2022-2023ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் விவாதம், ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 11-04-2022 அன்று உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். பா.ஜ.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் அந்தத் தீர்மானத்தை ஆதரித்தன.
பா.ஜ.க. சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எழுந்து அந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினார். பின்னர் பா.ஜ.க.வினர் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டின் நலன் சார்ந்து சட்டமன்றத் தில் ஒரு முடிவு எடுக்கப்படும்போது, ஒட்டுமொத்த கட்சிகளும் அதை ஆதரித்து ஓரணியில் நிற்பதையும், பா.ஜ.க. மட்டும் அதில் முரண்பட்டு எதிர்ப்பதையும் பார்க்க முடிந்தது.
பின்னர், கல்வி மானியக் கோரிக்கை யின் மீது விவாதம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்போர் விழுக்காடு 51.4 என்ற உயர்ந்த நிலையை எட்டியதற்கு காரணம் தி.மு.க.வா அ.தி. மு.க.வா என்று காரசாரமாக கருத்துக்கள் பகிரப்பட்டன. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ""தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும்; வேறு எவராலும் இங்கு ஆள முடியாது'' என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். அவரது பேச்சுக்கு அவையில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அப்போது குறுக்கிட்ட பேரவைத்தலைவர் மு.அப்பாவு, ""தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரு புள்ளியில் மிகவும் சரியாக உள்ளீர்கள்'' என்று பாராட்டு தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினராக முதல்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான், கடந்த ஆண்டு கல்வி மானியக் கோரிக்கையில்தான் எனது அறிமுக உரையை ஆற்றினேன். இப்போதும் கல்வி மானியத்தில்தான் பேசினேன். ""சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது போல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தேன்.
""எந்தத்துறைக்கு செலவு செய்தாலும் கணக்குப் பாருங்கள். ஆனால், கல்வித்துறைக்கு செலவு செய்ய கணக்கே பார்க்காதீர்கள். கூடுதல் நிதியை ஒதுக்குங்கள்'' என்று நிதியமைச்சரை நோக்கி வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அவர் சிரித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதை ரசித்தார்.
மேலும் பல உறுப்பினர்கள் உரையாற்றிய பின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உயர்கல்வித் துறை அமைச்சரும் பதிலுரை வழங்கினர். அன்பில் மகேஷ் பேசும்போது, கையில் குறிப்புகள் ஏதுமின்றி சுமார் 30 நிமிடங்கள் பேசியது வியப்புடன் பார்க்கப்பட்டது. பேரவை முடிந்ததும் முதலமைச்சரை சந்தித்து மகேஷ் வாழ்த்துபெறச் சென்றார். அப்போது மகேஷ் கையில் ஒரு துண்டுச்சீட்டைக் கொடுத்தார் முதலமைச்சர். அதில், ""தம்பி மகேஷ்... அருமை! அற்புதம்! அபாரம்'' என்று பாராட்டி எழுதியிருந்தார்.
12-04-2022 அன்று பேரவை கூடியதும் வினாக்கள் விடைகள் நேரம் நடைபெற்றது. அதில் 100-ஆவது கேள்வி இந்து அறநிலையத்துறை தொடர்பானதாக அமைந்தது. அப்போது பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, இந்த அரசு அமைந்த பிறகு சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளில் 100-ஆவது கேள்வி ஆன்மிகம் தொடர்பானதாக அமைந்ததற்கு தமது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினார். பின்னர், அதில் துணைக்கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் ஜவாஹிருல்லா, ""முருக னின் ஆறுபடை வீடுகளில் 4-ஆம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில், வயதான பக்தர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சிரமப்படுவ தாகவும், அங்கு மின்தூக்கி வசதி செய்துதர வேண் டும்'' எனவும் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அது குறித்து பரிசீலித்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக, இஸ்லாமியரான ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்தது, பேரவையில் பெரும் வர வேற்பை பெற்றது. முதலமைச்சர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் அதை மகிழ்ச்சியுடன் பார்த்தனர். பா.ஜ.க. உறுப்பினர்கள் அதை உற்று நோக்கினர்.
கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு கேட்டார். அப்போது, பேரவைத்தலைவர் மு.அப்பாவு அதை மறுத்தார். இதுவரை 4 முறை உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒருமுறை கூட கேள்வி கேட்காத உறுப்பினர்களுக்கு இன்று முன்னுரிமை வழங்கப் படுகிறது என்றும் கூறினார். அதை ஏற்காத விஜயதாரணி எழுந்து நின்றவாறே பேசிக்கொண்டிருந்தார். அதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தீப்பெட்டி தொழிலை பாதுகாப்பது குறித்து அ.தி.மு.க. உறுப்பினர் கடம்பூர் ராஜு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது, பேரவைத் தலைவருக்கு தீப்பெட்டி தொழில் உள்ளதால், அதன் பிரச்சனைகள் பற்றி நன்கு தெரியும் என்று கூறினார். அதைக்கேட்டதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. சபாநாயகர் அதை மறுத்தார். தனக்கு தீப்பெட்டி தொழில் இல்லையென்றும், ஆனால், அதைப்பற்றிய விபரம் தெரியும் என்றும் கூறினார்.
கொரோனா புதிய பரவல் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், தடுப்பூசிகள் போடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டுள்ளன என்று புள்ளி விபரத்துடன் பதிலளித்தார்.
சென்னை அயோத்யா மண்டபம், இந்து அறநிலை யத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள் ளது குறித்து பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசிய சில வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அவரது பேச்சால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அவருக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அயோத்தியா மண்டபத்தின் முழு வரலாறையும் சொல்லி, சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியே அதை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்றார். பா.ஜ.க. இதில் தேவையில்லாமல் பிரச்சனை செய்வதாகவும், அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றும் எச்சரித்தார். அப்போது எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ""மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பா.ஜ.க.வினர் ஏன் இப்படி வீணான பிரச்சனைகளில் ஈடுபடுகிறீர்கள்? இந்த அரசியல் எல்லாம் இங்கு நடக்காது'' என்று ஒரே போடாக போட்டார்.
அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சேலம் 8 வழிச்சாலை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த விஷயத்தில் தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும், மக்கள் கருத்தின் அடிப்படையிலேயே அதில் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார். கலைஞர் நினைவிடம் கட்டும் வாய்ப்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் தனக்கு கிடைத்திருப்பதாக கூறிய அவர், பேசும்போது கண் கலங்கினார்.
மலையாள மற்றும் தெலுங்கு ஊடகங்கள் எப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளன என்பதை மலையாளம் மற்றும் தெலுங்கில் எடுத்துக்கூறி அசத்தினார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. முதலமைச்சர் அதை ரசித்துக் கேட்டார்.
13-04-2022 அன்று பேரவை கூடியதும் வினாக்கள் விடைகள் நேரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 110 விதியின் கீழ் அறிக்கை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாள் இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவிப்பு செய்தார். அம்பேத்கர் மணிமண்டபத் தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும், அம்பேத் கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பு பேரவை யில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத் தியது. அனைத்துக் கட்சி உறுப்பினர் களும் இதை வரவேற்றனர். முதலமைச்ச ருக்கு நன்றி தெரிவிப்பதற்காக எங்கள் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் சென்று முதலமைச்சரை சந்தித்து நன்றி கூறினோம்.