"ஹலோ தலைவரே, ஒரு வாட்ஸப் கடிதம் அ.தி.மு.க. தரப்பில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தி வருகிறது.''”
"ஆமாம்பா, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான நாளேடான ’நமது அம்மாவில்’ ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் எழுதிய கடிதத்தைத்தானே சொல்றே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த மருது அழகுராஜ், ஒரு கவிஞரும் கூட. அவரது கவிதை நடைக் கட்டுரை களை ரசிப்பதற்கு அ.தி.மு.க.வில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அப்படிப்பட்டவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள் கடிதத்தை எழுதியிருக்கிறார். ’கொடநாடு திரில்லரும், சீரியல் கில்லரும்’ என்ற வாசகத்தோடு தொடங்கும் அந்த வசன நடைக் கடிதத்தில், நம் நக்கீரன் அம்பலப்படுத்திய, கொடநாடு குற்றவாளிகளுடன் சேலம் இளங்கோவன் பேரம் பேசிய உரையாடல் கேசட்டைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட இளங்கோவனுக்கு எடப்பாடி மா.செ. பதவி கொடுத்தார் என்று வேதனைப்பட்டு இருப்பதோடு, அந்த அரக்கனை சீக்கிரமாய்ப் பிடித்து சிறையில் அடையுங்கள், உங்களுக்கு புண்ணியமாகப் போகும்’ என்று எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கும் படி உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதுதான் அ.தி.மு.க.வையே அதிரவைத்திருக்கிறது.''”
"தி.மு.க. உட்கட்சித் தேர்தல் குறித்த புகார் இன்னும் அடங்கலையே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. நடத்திய உட்கட்சித் தேர்தலை மா.செ.க்கள் பலரும், முறையாக நடத்தவில்லையாம். தேர்தல் பொறுப்பாளர்களாக வந்தவர்களையும் கையில் போட்டுக்கொண்டு, தங்களுக்கு விருப்பமானவர்களை எல்லாம் பதவியில் உட்கார வைத்திருக்கிறார்களாம். அடிமட்டத் தொண்டர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், மா.செ.க்கள் பலரும் கட்சிப் பதவிகளைக் கூறுகட்டி விற்றார்கள் என்கிற குற்றச்சாட்டு இப்போது சூறாவளியாக எழுந்து அறிவாலயத் தைத் திகைக்க வைத்திருக்கிறது.''”
"தி.மு.க. எம்.பி. கனிமொழி தூத்துக்குடியில் ’நெய்தல்’ விழாவை நடத்துகிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, கலைஞர் இருந்தப்ப தி.மு.க. ஆட்சியில் பொங்கல் விழாவைத் தொடர்ந்து ’"சென்னை சங்கமம்'’என்கிற நிகழ்ச்சி யை கனிமொழி தொடர்ந்து நடத்தினார். அந்த நிகழ்ச்சியின்போது சென்னையின் மூலைமுடுக்கில் எல்லாம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார். அதேபோல், இப்ப தனது தொகுதியான தூத்துக்குடியில் நெய்தல் விழாங்கிற பெயரில், வருகிற 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அதே மாதிரியான பாரம்பரியம் மிக்க கலை நிகழ்ச்சிகளை, புகழ்பெற்ற கலைஞர்களை எல்லாம் பங்குபெறவைத்து பிரமாண்டமாக நடத்துகிறார். இவரது முயற்சியில் ஸ்பிக் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் சில கைகொடுக்கின்றன.''”
"காங்கிரஸுடன் அ.தி.மு.க. ரகசிய நட்பு மலர்வதாக வந்த செய்தியை காங்கிரஸ் மறுத்திருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் - எடப்பாடிக்கும் இடையில், ஒரு ரகசிய நட்பை, காங்கிரஸின் தேர்தல் வியூக ஆலோசகரான சுனில் அண்மையில் ஏற்படுத்த முனைந்தார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி களின் பொதுவேட்பாளரான யஸ்வந்த் சின்ஹா வை ஆதரிப்பதற்கான முயற்சி என்ற பெயரில்தான் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்தது. இரு தரப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை, எதிர்காலக் கூட்டணிக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதை நமது நக்கீரன் சுட்டிக்காட்டி இருந்தது. இதையே இன்னும் சில ஊடகங்களும் வெளியிட் டன. இதைப் பார்த்த காங்கிரஸ், அப்படி எதுவும் நடக்கவில்லை. இது திமுக-காங்கிரஸ் கூட்டணி யைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில், உலவவிடப் பட்ட செய்தின்னு கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மூலம் மறுப்பறிக்கை விடுத்திருக்கு.''
"இதை இவ்வளவு திட்டவட்டமாக காங்கிரஸ் ஏன் மறுக்கணும்?''
"ராகுல்-எடப்பாடியின் ரகசியப் பேச்சை மோப்பம் பிடித்த உளவுத்துறை, அதை பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிவித்திருந்தது. இதையறிந்த நக்கீரனும் இந்த செய்தியைப் பகிரங்கப்படுத்தியது. இதைத் தொடர்ந்து எடப்பாடி மீது பிரதமர் மோடி கோபமாயிட்டாராம். இதனால் மிரண்டுபோன அவர், ஜனாதிபதிக்கான தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கும் முடிவில் இருந்து அபவுட்டர்ன் ஆகிவிட்டார். அதேபோல், அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து தி.மு.க.வும் காங்கிரஸிடம் கொஞ்சம் சீரியஸாகவே கேள்வி எழுப்பியிருக்கு. இதனால் நெருக்கடிக்கு ஆளான காங்கிரஸும் தி.மு.க.வின் உறவை சகஜ நிலைக்குக் கொண்டுவர, இப்படி ஒரு மறுப்பறிக்கையை வெளிட்டிருக்கிறது என்கிறார்கள், இதன் ரகசியம் அறிந்தவர்கள்.''”
"பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வந்தப்ப, அவரை சந்திப்பதில் பா.ம.க. தரப்பு தாமதத்தைக் கடைப்பிடித்ததே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. வேட்பாளரான திரௌபதி முர்மு, அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கேட்பதற்காக சென்னை வந்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு, எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தப்ப, நீங்களும் சேர்ந்து வாங்களேன்னு பா.ம.க. தலைவர் அன்புமணியை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அழைத்தார். இதைக்கேட்ட அன்புமணி, இல்லை இல்லை அவர்கள் சந்தித்துவிட்டுச் சென்றதும் நாங்கள் தனியாக வந்து, முர்முவுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம்னு சொல்லிவிட்டார். அதோடு, எடப்பாடியும் அவரது எம்.எல். ஏ.க்களும் தாஜ் ஓட்டலில் இருந்து கிளம்பும்வரை, தங்கள் எம்.எல்.ஏ.க்களுடன் காத் திருந்தார் அன்புமணி. இதற்குக் காரணம், எடப்பாடியும் ஓ.பி. எஸ்.ஸும் பவர் யுத்தம் நடத்தி வருவதால், இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்வரை, தனியாக ஒரு தரப்பைச் சந்தித் தால் தவறாகி விடும் என்று அன்புமணி நினைக்கிறாராம்.''”
"சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் லஞ்ச அடாவடி குறித்து நாம் பேசியது, ஆரோக் கியமான எஃபெக்டை ஏற்படுத்தி இருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் களின் பல்வேறு முறைகேடுகள் பத்தி நாம் நமது உரையாடலில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த நிலையில், ஆட்சி மேலிடம் இது குறித்து சீரியசாக விசாரித்திருக் கிறது. இதைத் தொடர்ந்து ஒவ் வொரு கவுன்சிலரையும் கண் காணித்து அவர்களைப் பற்றிய ரிப்போர்ட்டை மாநகராட்சி விஜிலென்ஸ் துறை, முதல்வருக் கும் தி.மு.க. தலைமைக்கும் அனுப்பியது. உடனே, குற்றச் சாட்டுகளுக்கு ஆளான கவுன் சிலர்களில், முதல்கட்டமாக 94 பேரை அறிவாலயத்துக்கு வரவழைத் தார் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு. அந்தக் கூட்டத்துக்கு சென்னையில் உள்ள தி.மு.க மா.செ.க்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். பெண் கவுன்சிலர்களின் கணவர் கள், அப்பாக்கள்னு யாரும் நிர் வாகத்தில் இனி குறுக்கிடக் கூடாது. இனி எவர் மீதாவது, மாமூல், கட்டிங்னு புகார்கள் வந்தால் நான் சும்மா இருக்கமாட் டேன்னு கடுமையாக எச்சரித் திருக்கிறார் அமைச்சர் நேரு.''
"பெண் கவுன்சிலர்கள் சிலர் வட்டச்செயலாளர்கள் பற்றி அங்கே புகார் எழுப்பி இருக்காங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, அந்தக் கூட்டத்தில் பேசிய பெண் கவுன்சிலர்கள், வார்டு பிரச்சனைகளைக் கேள்விப்பட்டு நாங்க ஸ்பாட்டுக்கு போனால், எங்களிடம் தெரிவிக்காமல் எப்படிப் போகலாம்னு நம் வட்டச் செயலாளர்களே எங்களை மிரட்டுறாங்க. சரி, அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம்னு அவர்களைத் தொடர்பு கொண்டாலும், அந்தப் பிரச்சினையை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்னு சொல்லி, மக்களைச் சந்திக்கவிடாமல் தடுக்கறாங்க. அதேபோல, ஏகபோகமா கட்டிங்கும் வாங்கறாங்க. கேட்டால், தேர்தலுக்கு செலவு செஞ்சதை எல்லாம் எடுக்கவேண்டாமான்னு எங்களிடமே கேட்கறாங்கன்னு குமுறித் தீர்த்துட்டாங்க. இதைக் கேட்டுத் திகைத்த அமைச்சர், இப்படி யார் செய்தாலும் உடனுக்குடன் எனக்குத் தெரியப் படுத்துங்கன்னு கறார்க்குரலில் சொல்லி இருக்கார்.''”
"சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானங்களும் நீச்சல் குளங்களும் பெரும்புள்ளிகள் சிலரின் ஆக்கிரமிப்பில் இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, மாநகராட்சிக்கு வருவாய் தரும் டென்னிஸ், பேட்மின் டன், ஸ்கேட்டிங் மைதானங்களும், நீச்சல்குளங்களும் பிரபலங்களின் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதையெல்லாம் மீட்டு டெண்டர்கள் மூலம் தனியாருக்குக் கொடுத்து லாபத்தைத் தேடத் தொடங்கியது மாநகராட்சி. இருந்தும் அந்த தனியார் நிறுவனத்தால் சென்னை பெசன்ட்நகர், இந்திரா நகர், அடையாறு காந்தி நகர், எக்மோர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள விளையாட்டுத் திடல்களை மட்டும் தங்கள் வசம் கொண்டுவர முடியாமல் திணறுகிறது. மாநகராட்சி நிர்வாகமும், அந்தப் பெரும்புள்ளிகளிடம் இருந்து அவற்றை மீட்டு, அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிய லைன்னு கை பிசையுது. இந்தப் பிரச்சினையில், முதல்வர் தலையிட்டால்தான் தீர்வை எட்டும்னு மாநகராட்சித் தரப்பே சொல்லுது.''”
"வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பெண் போலீஸாரிடம் இருந்து முணுமுணுப்பு கேட்குதே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னையில் மட்டும் தலைமைச் செயலகம், சி.எம். வீடு, அண்ணா அறிவாலயம், டி.ஜி.பி. அலுவலகம், கமிஷனர் அலு வலகம், ராஜ்பவன்னு வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புப் பணியில் 340 காவல்துறையினர் இருக்காங்க. இவர்களில் 70 பேர் பெண்கள். இதுவரை ஆண்களுக்கு மட்டுமே சபாரி சூட் யூனிபார்ம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போ பெண்களுக்கும் இந்த யூனிபார்மைக் கொடுத்திருக் காங்களாம். இதனால் பணிபுரிவதில் சிரமத்தை அனுபவிப்பதாக அவர்கள் ஃபீல் பண்றாங்க. டி.சி.யும் ஜே.சி.யும் தங்களுக்கு இந்த டிரஸ்ஸைக் கொடுத்து நெருக்கடி ஏற்படுத்துறாங்கன்னு குமுறல் வெளிப்படுது..''”
’"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். வருடா வருடம் குருபூர்ணிமா என்னும் நிகழ்ச்சியை ஏக தடபுடலாக நடத்துவது டுபாக்கூர் சாமியார் நித்யானந்தாவின் வழக்கம். அதேபோல், வரும் 13-ஆம் தேதி கைலாசாவில் அவர் குருபூர்ணிமாவை நடத்த இருக்கிறார் என்றும், அப்போது அங்குள்ள சிஷ்யர்கள்முன் அவர் தோன்றுவார் என்றும் அவரது ஆசிரமத் தரப்பு அறிவித்திருக்கிறது. ஆனால் அவரது சீடர்கள் சிலரோ, சமாதி நிலையில் இருக்கும் அவர் எப்படி கலந்துகொள்வார்? என்று கேட்கிறார்கள். அதனால் 13-ல் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய அனைத்துத் தரப்பும் ஆர்வமாக இருக்கிறது.''”
_________________
சர்வாதிகாரியாக மாறுவேன்! -ஸ்டாலின் சாட்டை!
தி.மு.க.வின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக் கான மாநாட்டை நாமக் கல்லில் ஜூலை 3-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் கிழக்கு மாவட்ட பொறுப் பாளரும் ராஜ்யசபா எம்.பி.யு மான கே.ஆர்.என். ராஜேஷ்குமார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை அசத்தியிருந்தார் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு. பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டபின், தலைமையுரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்த மாநாட்டை முன்னின்று வெற்றிமாநாடாக நடத்திய மாவட்ட கழக செயலாளரும் எம்.பி.யுமான ராஜேஷ்குமாருக்கு முதல் மதிப்பெண் கொடுக்கிறேன்.
எத்தனையோ அவமானங்கள், வீண் பழிகள், தடைகள் அத்தனையும் தாண்டி பெண்கள் இந்தப் பொறுப்பிற்கு வந்திருக்கிறீர்கள். அதே பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். உங்களுடைய கையெழுத்தை மக்களுக்காக பயன்படுத்துங்கள். பெண் பிரதிநிதிகள் உங்கள் கணவரிடம் பொறுப்புகளை கொடுத்துவிடாதீர்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் சர்வதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்'' என்றார் சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஸ்டாலின்.
-ஜீவாதங்கவேல்