மிழ்நாட்டில் கடந்த சில வருடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர் களை குறிவைத்து கஞ்சா கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கஞ்சா போதைக்கு அடிமையாக்குவதுடன், பிறகு அவர்களையே கஞ்சா கடத்தவும், கஞ்சா விற்பனைக்கும் பயன்படுத்தும் கும்பலால், வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக பெற்றோர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இதுபற்றி கடந்த ஜூன் 18-21 நக்கீரன் இதழில் 'பள்ளிச் சிறுவர்களை சீரழிக்கும் கஞ்சா! -பெற்றோர்கள் ஜாக்கிரதை!' என்ற தலைப்பில் விரிவான செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

dd

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவில், உதவி ஆய்வாளர்கள் பாலமுருகன், மாரிமுத்து தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப் பட்டு வருகிறது. இப்படி நடத்தப்பட்ட சோதனையில், சுதர்சன் என்பவனை, ஆலங்குடி ரோடு, அசோக் நகர் பகுதி யில் கஞ்சா விற்பனை செய்யும்போது கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதேபோல, காமராஜபுரம் 26ஆம் வீதியில் ஒரு வீட்டருகே மாணவர்களிடம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஜெகன், ஜெகன் மனைவி பானுமதி, ஜெகன் தந்தை முருகேசன் ஆகியோரைக் கைது செய்தபோது, 3 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகளைக் கைப்பற்றினர்.

Advertisment

dd

கீரமங்கலம் பகுதியில் விற்பதற்காக கஞ்சா கொண்டுவரப்படுவதாக, கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரனுக்கு கிடைத்த தகவலின்படி, அவர் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், தனிப்பிரிவு எசக்கியா ஆகியோர் காசிம்புதுப்பேட்டை அருகே ஒரு சூப்பர் எக்ஸல் வண்டியை மடக்கியபோது, அந்த பைக்கில் 17 பாக்கெட் கஞ்சா இருந்தது. அவரை காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தபோது, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் சரகம் தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது. குமார் பிடிபட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் அதே தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் லெட்சுமணன், "குமாரை விட்டுவிடுங்கள்" என்று பணத்துடன் வந்துநின்றார். அவரை அங்கேயே உக்கார வைத்துவிட்டு எஸ்.பி.யின் சிறப்புக் குழுவுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, குமாரை ஆலங்குடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றம் சென்றபோது, கஞ்சா வியாபாரியை ஜாமீனில் எடுக்க 2 வழக்கறிஞர்கள் காத்திருந்து, உடனே ஜாமீனில் அழைத்துச் சென்றனர்.

உதவி ஆய்வாளர் பாலமுருகனுக்கு திருச்சிற்றம்பலத்தில் ஒரு மாடி அறையில் கஞ்சா பொட்டலங்கள் உள்ளதாக தகவல் கிடைக்க, திருச்சிற்றம்பலம் சென்ற சிறப்புப் படையினர், லெட்சுமணனின் அறையை சோதனை செய்து, 109 கஞ்சா பாக்கெட்டுகள், எடை போடும் தராசு, செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். அப்போது, லெட்சுமணனின் மனைவி என்று சொல்லிக்கொண்டு வந்த பெண், லெட்சுமணன் கல்லீரல், கணைய பாதிப்புக்காக சிகிச்சையெடுப்பதால் அவரை விட்டுவிடச்சொல்லி மருத்துவச் சான்றுகளுடன் வந்திருக்கிறார். பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்யும்போதே 2 வழக்கறிஞர்கள் வந்து அவரை ஜாமீனில் அழைத்துச் சென்றனர். சிறப்புக் குழு உதவி ஆய்வாளர் மாரிமுத்து குழுவினர், பெருங்களூர் கிராமத்தில் வாகனச் சோதனையின்போது சிவக்குமார் என்பவரிடம் 1.450 கிலோ கஞ்சா, காலி பாக்கெட்டுகள், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவருமே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர்கள். விரைவில் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்கிறது காவல்துறை.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத சில போலீசார், “"கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதிக்கு லெட்சுமணன்தான் கஞ்சா அனுப்புகிறார். லெட்சுமணனுக்கு போனில் சொன்னால் 6 கிராம் பாக்கெட் ரூ.250-க்கு குமாரிடம் கொடுத்துவிடுவார். குமார் அந்த பாக்கெட்டை ரூ.300-க்கும், சில்லரை வியாபாரிகள் 500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கிறார்கள். இந்த லெட்சுமணன் அ.தி.மு.க.வில் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்டுத் தோற்றவர். கஞ்சா விற்பனையோடு, குடும்பப் பெண்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து அந்தப் பெண்களையே அபகரிக்கும் நபர். லெட்சுமணன் மேல், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் மட்டும் கடந்த ஆண்டு 7 வழக்குகளுக்கும் அதிகமாக உள்ளது. இவரைப் போன்றவர்கள் பிடிபடும்போது நெஞ்சுவலி வந்துவிட்டதாக நடிக்கிறார்கள். மருத்துவச் சான்றிதழ்களோடு வழக்கறிஞர்கள் வந்து நீதிமன்றத்தில் முறையிட, உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடுகிறது''” என்றார்கள் சலிப்பாக.

இந்நிலையில், கடந்த பத்தாம் தேதி, முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், "போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை பள்ளி மாணவர்கள் எடுக்க வேண்டும்" என்ற முதல்வர், "போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து, அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்'' என்றார். முதல்வரின் உத்தரவுப்படி, புதுக்கோட்டை அரசு பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, "பள்ளியருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்'' என்று கூறி மாணவர்களுக்கு தொலைபேசி எண்ணை வழங்கினார்.

Advertisment