"வாக்கு மையத்தில் மின்தடை. அலறும் வேட்பாளர்கள்' என்ற தலைப்பில் தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தின் நிலையை கடந்த இதழில் வெளிப்படுத்தியிருந்தோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கும் இது கொண்டுசெல்லப்பட, வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் தென்காசி யு.எஸ்.பி. கல்லூரியின் முதல்வரை தொடர்புகொண்ட ஸ்டாலின், வாக்குமையத்தின் பாதுகாப்புத் தன்மைகள், பிற விஷயங்களைப் பற்றி அவரிடம் விசாரித்திருக்கிறார். கவனிப்பதாகச் சொன்னாலும், குழப்பங்களும் சந்தேகங்களும் தொடர்ந்தபடி இருக்கின்றன.
பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரான நயினார்நாகேந்திரன் போட்டியிட்ட திருநெல்வேலி தொகுதி உள்ளிட்ட பாளை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், நெல்லையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் காட்சிகள் கண்ட்ரோல் ரூமிலுள்ள டி.வி. ஒளித்திரையில் தெரியும்படி மானிட்டர் செய்யப்பட்டு அதிகாரிகள், காவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மூன்றடுக்குப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த மையத்தில் அடிக்கடி மின்தடை, சி.சி.டி.வி. கேமராக்கள் பழுது என்பது தொடர் சம்பவமாகியிருக்கிறது. அதுகுறித்து தி.மு.க.வின் வேட்பாளர்கள், மாவட்டக் கலெக்டரான விஷ்ணுவிடம் புகாரும் கொடுத் துள்ளனர். இதனிடையே இந்தக் கல்லூரிக்குள் 170 பேர் தினமும் சென்றுவர கலெக்டரால் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேப்டாப் பையுடன் அந்த நபர்கள் நேரம் காலமில்லாமல் கல்லூரிக்குள் நினைத்த நேரம் வந்து செல்கிறார்களாம். யார், எப்போது எதற்காக வந்து போனார்கள் என்ற குறிப்பும் கிடையாது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியில், இவர்களின் நடமாட்டம் சந்தேகத்திற்கிட மாகிறது என்று தி.மு.க.வின் வேட்பாளர்களும் மா.செ.க்களான ஆவுடையப்பன், அப்துல்வகாப், அப்பாவு மற்றும் கட்சியினர் திரண்டு சென்று மாவட்டக் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
""கொரோனா காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கல்லூரியின் பணியாளர்கள் என்று லேப்டாப்புடன் 170 பேர் அங்கு சென்றுவர அனுமதிக் கடிதம் அளித்துள்ளார் கலெக்டர். அவர்களுக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது என்று தெரியவில்லை. கல்லூரிக்குள் பல வாகனங்கள் வந்து செல்கின்றன. உடனடியாக இவை அனைத்தையும் நிறுத்தவேண்டும் என்று கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவரும் ஒப்புதலளித் திருக்கிறார். தவறினால் கட்சித் தலைமை மூலம் நடவடிக்கை எடுப்போம்'' என்கிறார் வேட்பாளரான அப்பாவு.
தென்காசி மாவட்டத்தின் 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சியின் யு.எஸ்.பி. கல்லூரியில், ஆலங்குளம் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களும் அடக்கம். அந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தி.மு.க.வின் பூங்கோதை, அ.தி.மு.க.வின் மனோஜ் பாண்டியன். அத்தொகுதியின் ஸ்ட்ராங் ரூமில் மின்தடை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கண்ட்ரோல் ரூமில் மின்தடை இல்லை. இது பிரச்சினையாக உருவெடுத்து, பின்பு தி.மு.க. மா.செ. சிவபத்மநாபன் மூலம் கலெக்டரிடம் புகாரும் செய்யப்பட்டு, விளக்கமளிக்கப் பட்டது.
அடுத்தநாள், அங்குள்ள சங்கரன் கோவில் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி.யின் காட்சிகள், கண்ட்ரோல் ரூமில் வைக்கப்பட்டுள்ள டி.வி. திரையில் ஒரு பகுதி மறைப்பது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் போட்டியிட்டவர் அமைச்சர் ராஜ லெட்சுமி. இதனை, சிவபத்மநாபன் மாவட்டக் கலெக் டரின் கவனத் திற்குக் கொண்டு போயிருக்கிறார். அதனைப் பணியாளர்கள் ஆய்வு செய்ததில், கேமராவின் லென்சில் சிறிய சணல் இருந்ததால்தான் காட்சிகள் மறைந்தது என்று அதனை நீக்கியுள்ளனர்.
எனினும் ஸ்ட்ராங் ரூமிற்கு யார் செல்கிறார் என்பதைப் பார்க்கின்ற பகுதியில் மறைவு ஏற்பட்டதை எதிர்க்கட்சியினர் எதேச்சையாக நடந்ததாக நினைக்கவில்லை. மாறாக, வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா எனச் சந்தேகம் கொண் டுள்ளனர். மேலும் சணல் அந்த லென்சிற்கு எப்படி வந்தது என்பது புரியாத மர்மமாக உள்ளது. சங்கரன்கோவில் தொகுதியின் ஸ்ட்ராங் ரூமில் அடிக்கடி மின்தடை ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் நடப்பதை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகச் சொல்கிறார் மா.செ. சிவ பத்மநாபன்.
கோவையில் அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியின் வாக்குப்பெட்டிகள் உள்ள மையத்திற்கு, இரவு நேரத்தில் வந்த ஒரு கண்டெய்னர் லாரியை தி.மு.க.வினர் மடக்கிப் பிடிக்க, நீண்ட நேர விவாதத்திற்குப்பின், அது திறக்கப்பட்டபோது, மொபைல் டாய் லெட்டுகளாக ஏற்றி வந்தது தெரிய வந்திருக்கிறது. இன்னும் பல மையங்களிலும் இதுபோல நடுராத்திரியில் கண்டெய்னர்கள் வருவதும், ஸ்ட்ராங் ரூம் பக்கமாகச் செல்வதும் தொடர்கிறது.
தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் இதயத்துடிப்பு, மே 2 வரை என்ன பாடுபடுமோ, அதற்குள் ஆளுந்தரப்புக் கூட்டணி என்னென்ன வேலைகளைச் செய்யுமோ!