முன்னூறுக்கும் அதிக மான மனித உயிர் களை பலிகொண்ட கேரள, வயநாடு நிலச் சரிவு... தேசத்தையே உலுக்கி எடுத்திருக் கிறது. மிக மோசமான விளைவுகளையும் துயரங்களையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. கேரள மாநிலத்தை சூழ்ந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து அதிகப்படியான மழையை பொழிந்து வருகிறது. குறிப்பாக, வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்கு உட்பட்ட சூரல்மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களில் மட்டும் 70 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், இந்த பகுதிகள் கடுமையான நிலச்சரிவை சந்தித்து பல நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. ஜீரணிக்கவே முடியாத இந்த துயரத்துக்கு என்ன காரணம்? கேரளாவில் அடிக்கடி நிலச் சரிவு ஏன் ஏற்படுகிறது? என்பது குறித்தெல்லாம் சூழலியல் அறிவிய லாளர்கள், புவியியல் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் அமைப்புகள் பல எச்சரிக்கைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
தற்போதைய நிலச்சரிவு குறித்து சூழலியல் அமைப்பின் செயற்பாட்டாளரான "பூவுலகின் நண்பர்கள்' சுந்தரராஜனிடம் நாம் பேசியபோது, "இயற்கைச் சீற்றம் எனச்சொல்லி இந்த துயர நிகழ்வை எளிதில் நாம் கடந்துவிட முடியாது. இந்த நூற்றாண்டில் அதீத வெப்பம், அதீதப் பேய்மழை, காட்டுத் தீ, பெரும் புயல்கள், கடல் மட்டம் உயர்வு, கொள்ளை நோய்கள் என எதிர்கொள்ளும் இயற்கைப் பேரிடர்களுக்கு மனிதத் தவறுகளே காரணமாக இருக்கின்றன.
நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல் காரணங்கள், உருவவியல் காரணங்கள், தட்பவெட்பம், நீரியல் மாற்றங்கள், நிலநடுக்கம் மற்றும் மனிதச் செயல்பாடுகளும் காரணிகளாக அமைகின்றன. பல சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களின் கூட்டு விளைவுகளால் இப்படிப்பட்ட நிலச்சரிவுகள் ஏற்படும்.
வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை முன்கூட்டியே பல ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.
வயநாட்டில் கோடைமழை, கும்ப மழை, விஷ்ணு மழை, மிதுன மழை, சிங்க மழை, துலா மழை என 6 வகையான மழைப் பொழிவு நிகழ்ந்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த நடைமுறையில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, 2013 முதல் 2017 வரை வயநாட்டில் மழைப் பொழிவின் அடர்த்தி குறைந்து வந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதேபோல அந்த ஆய்வில், வயநாட்டில் மிதமாக மழை பொழியும் நாட்களின் எண் ணிக்கை குறைந்தும், அதிகமாக மழைபொழியும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்தும் இருப்பதாகக் கூறுகிறது. அது மட்டுமல்ல, பெருமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அந்த ஆய் வறிக்கை சொல்கிறது. இதன்படி ஆராய்ந்தால் குறைவான நேரம் அல்லது குறைவான நாட்களில் அதிகப்படியான மழை பெய்யும் நிகழ்வுகள் அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் பகுதிகளில் ஏற்படும் நிலச் சரிவுகளுக்கு பெருமழை ஒரு காரணமாக இருந்தாலும், மலைப்பகுதிகளில் அறிவியல்பூர்வமற்ற வகையில் ஏற்படுத்தப்பட்ட கட்டடங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் வைத்திரி தாலுகா பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் நில பயன்பாட்டில் பெரிய அளவில் மாற்றம் நடந்துள்ளது. இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி கட்டடங்களை கட்டி அந்த பகுதியில் நில அமைப்பையே மாற்றியிருக்கிறார்கள். இந்த கட்டடங்கள் கட்டுவதற்காக வானுயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப் பிடிக்கும் வேர்கள் அழிக்கப் பட்டுள்ளன.
வேர்கள்தான் நிலச்சரிவை தாங்கும் சக்தி. வேர்கள் அழிக்கப்பட்டதால் அந்த திறனை மண் இழந்து நிற்கிறது. இந்த தன்மையையும் திறனையும் இழக்கும் பகுதியில் அதீத மழை பொழிந்தால் நிலச்சரிவும், மண் சரிவும் அடிக்கடி நடக்கும். அப்படிப்பட்ட விளைவுகள்தான் வைத்திரி பகுதிகளில் நடந்துள்ளது. மலைகளை வெட்டி, பிளந்து, தோண்டி அதன் இயற்கையான அமைப்பையே மாற்றியதால் அதிக அளவு மழையைத் தாக்குப் பிடிக்காமல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வைத்திரி தாலுக்கா சூழல் கூருணர்வு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மண்டலத்தில் உள்ள நிலப்பரப்பினை காடு பாதுகாப்பு சாராத திட்டங்களுக்காகவும், வேளாண் சாராத பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தவோ மாற்றம் செய்யவோ கூடாது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட ஆய்வு அறிகைக்களை கேரள அரசு இன்றுவரை ஏற்கவில்லை.
ஆக, தொடர்ச்சி யாக நில பயன்பாட் டில் மாற்றம், வரையறையற்ற கட்டுமானங்கள், காடுகள் அழிப்பு, காலநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மழைப்பொழிவு ஆகியவைகளே இந்த பேரழிவுகளுக்கு காரணம். இப்படி நிலம் வலுவிழப்பதை காடுகளை அழிப்பதுடனும், நிலச்சரிவுகளைப் பெருமழை மற்றும் கால நிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்தி ஆராயாமல் இனியும் அரசுகள் தவறிழைக்குமானால் இதுபோன்ற தேசியப் பேரிடர்களையும் பேரழிவுகளையும் தடுக்க முடியாது.
தமிழகத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், வால்பாறை, கொடைக்கானல் மலைப் பிரதேசங்களிலும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதை கவனத்தில்கொண்டு வயநாடு சம்பவத்தினை தமிழக அரசும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.
மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவரும், சூழலியல் கணித ஆய்வாளருமான மாதவ் காட்கில், மேற்குத் தொடர்ச்சி மலையின் நிலச்சரிவுகளைத் தடுக்கவும், மலையை பாதுகாக்கவும் தாக்கல் செய்த அவரது ஆய்வறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டு 13 ஆண்டு களாகியும் அவரது பரிந்துரைகளை கேரளா, கர்நாடகா அரசுகள் இப்போதுவரை ஏற்க மறுத்து புறக்கணித்து வருகின்றன.
"இத்தகைய இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் அரசாங்கங்கள் முன்னெச்சரிக்கை காட்டுவதில்லை என்பதும், பாடம் கற்பதில்லை என்பதும் துரதிர்ஷ்டமானது' என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.