நமக்கு நாமே...!
பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது செண்பகபுதூர் நடுப்பாளையம்.
இங்குள்ள தொடக்கப் பள்ளிக் கட்டடம் வலுவாக இருந்தாலும் பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்பட்டது. 200 குழந்தைகள் வரை பயின்ற இப்பள்ளியில் கடைசியாக இரண்டு குழந்தைகள் மட்டுமே பயின்றார்கள்.
""மராமத்து செய்து பெயிண்ட் அடித்தால், கட்டடம் பொலிவு பெறும். குறைந்தது ஐம்பது மாணவர்கள் வருவார்கள்'' அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தார்கள் மக்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை.
தோழர்கள் வழிகாட்டுதலோடு, பக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் உதவியோடு, உள்ளூர் இளைஞர்கள் நிதி திரட்டினார்கள். மராமத்து செய்து பெயிண்ட் அடித்தார்கள்.
இப்போது இப்பள்ளியின் மாணவர் சேர்க்கை ஐம்பதைத் தாண்டிவிட்டது.
-ஜீவாதங்கவேல்
நெல்லுக்கு இறைத்த நீர்!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் ஒரு திருமணம். நூற்றுக்கணக்கான கார்கள். ஆயிரக்கணக்கான விருந்தினர்கள். ஏராளமான பரிசுப் பொருட்கள்.
யாருடைய திருமணம்?
""விழுப்புரம் வடக்கு மா.செ. குமரகுருவோட பி.ஏ. தமிழரசனுக்குத் தான் கல்யாணம். குமரகுரு சாதாரண மா.செ. அல்ல. முதலமைச்சர் எடப்பாடியின் நெருங்கிய நண்பர்னு இங்கே எல்லாருக்கும் தெரியும். சிவனைக் கும்பிடும் முன்னால் நந்தியைக் கும்பிடுவது மாதிரி தமிழரசனைத் தரிசிக்காம மா.செ. குமரகுருவைச் சந்திக்க முடியாதல்லவா? இதுக்குப் பெயர்தான் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது'' கனமாகச் செய்துவிட்டு வந்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் சொல்லிவிட்டுப் போனார். முதல்நாள் வரவேற்புத் தொடங்கி, மறுநாள் திருமணம் முடிந்து மறுவீடு போகும்வரை மா.செ.யும் அவர் துணைவியாரும் பொறுப்போடு நின்று கவனித்துக் கொண்டார்கள்.
-எஸ்.பி.எஸ்.
சுடுகாட்டுச் சுவர்!
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட, ஜமீன் பல்லாவரம் துரைக்கண்ணு சாலையில் (அம்பேத்கர் விளையாட்டு மைதானம் அருகில்) சுடுகாடு உள்ளது. ஒரு காலத்தில் இந்தச் சுடுகாட்டின் பரப்பளவு 179 சென்ட் நிலம். ஆக்கிரமிப்பாளர்கள் விழுங்கியது போக இப்போது வெறும் 30 சென்ட் நிலம் தான் பாக்கியுள்ளது.
இந்த 30 சென்ட் இடத்தையாவது காப்பாற்ற வேண்டும். அலட்சியமாக இருந்தால் ரியல் எஸ்டேட் ரவுடிகள் விழுங்கி விடுவார்கள் என்று, அந்தப் பகுதி மக்களெல்லாம் நன்கொடை வசூலித்து, சுடுகாட்டின் நான்குபுறமும் மதில் சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.
இதைப் பார்த்து அதிர்ந்த 12-ஆவது வார்டு முன்னாள் கவுன்சிலர் அன்னபூரணி நீலகண்டன் ஓடி வந்தார். ""யாரைக் கேட்டு சுவர் எழுப்பறீங்க?'' தகராறு செய்தார். பிரச்சினை பல்லாவரம் காவல்நிலையத்திற்கு சென்றது. ""12-ஆவது வார்டு பழைய கவுன்சிலர் நீங்க, 17-ஆவது வார்டு பிரச்சினையில ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? எப்.ஐ.ஆர். போடணுமா?'' எச்சரித்தார் இன்ஸ்பெக்டர் சரவணன்.""ஸாரி'' சொல்லிவிட்டுக் கிளம்பினார் முன்னாள் கவுன்சிலர்.
-அரவிந்த்
கமிஷன் பசி!
தனது ஊரைச் சேர்ந்த ஐவருக்கு பசுமை வீடுகள் வேண்டுமென்று கூறி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் சிபாரிசுக் கடிதம் வாங்கினார் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தின் முன்னாள் வைஸ் சேர்மன் வீரபத்திரன்.
அந்தக் கடிதத்தோடு அதிகாரிகளிடம் சென்றார். அங்கே அதிகாரிகளோடு பேசிக் கொண்டிருந்த பெரணமல்லூர் அ.தி.மு.க. ஒ.செ. செல்வராஜ், அந்தக் கடிதத்தைப் பிடுங்கி அதிகாரிகளிடம் கொடுத்து ""ஏற்கனவே எனக்கு 10 வீடுகள், இந்தக் கடிதத்திற்கு ஐந்து, ஆக எனக்கே பதினைந்தையும் ஒதுக்கி விடுங்கள்'' என்று கொடுத்துவிட்டு, ""நான்தான் ஒ.செ. நான் தான் முடிவு பண்ணணும் போங்க'' என்று விரட்டி விட்டார். அமைச்சரிடம் வந்து முறையிட்டார் வீரபத்திரன்.
எரிச்சலான அமைச்சர், ""இருவருக்குமே வீடுகள் கொடுக்க வேண்டாம்'' என்று அதிகாரிகளிடம் சொல்லிவிட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் ரேட் வாங்கிய ஒ.செ. மிரண்டு போனார். ""வீரபத்திரனுக்கு 5 வீடுகளை கொடுத்து விடுங்கள்'' என்று இறங்கி வந்திருக்கிறார்.
-து.ராஜா