சிற்றணியான பேரணி!
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியின் உழவனின் உரிமை மீட்புச் சைக்கிள் பேரணி 16.05.18 அன்று கடுமையான போலீஸ் பாதுகாப்போடு திருவையாறில் தொடங்கியது.
இதற்காக புத்தம் புதிய 300 சைக்கிள்களை வாங்கியது பா.ஜ.க. முதல் நாள் பேரணியைத் தொடங்கி வைத்துவிட்டு தலைவர்களும், நிர்வாகிகளும் கார்களில் முன்னால் சென்றார்கள். அன்றைய பேரணி முடிந்தபோது, 250 சைக்கிள்களே அடுத்த ஊர்க்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பாபநாசம், கும்பகோணம் கடந்து 22.05.18 அன்று நாகப்பட்டினத்திற்குள் பேரணி வந்தபோது 300 சைக்கிள்கள், ஐம்பது சைக்கிள்களாகக் குறைந்து போயின.
""அடுத்த ஊர்க்காரர்களிடம் ஒப்படைக்காமல் சைக்கிள்களோடு சென்று விடுகிறார்கள். பேரணி கட்டெறும்பாகி விட்டது'' வேதனைப்பட்டார் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்.
ஐம்பது சைக்கிள்கள் வந்த பேரணியை அறுபது போலீசார் பாதுகாத்தனர்.
-இரா.பகத்சிங்
ரியல் திருடன் போலீஸ்!
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு போலீசாரிடம் டூவீலர் திருடர்களான அரியலூர் மாவட்டம் சிலம்பூர் சண்முகமும் அவன் கூட்டாளியும் அகப்பட்டார்கள்.
கும்பகோணம், காட்டுமன்னார்குடி, சிதம்பரம் பகுதிகளில் 25-க்கும் அதிகமான டூவீலர்களைத் திருடியதையும், அவற்றைத் தலா இரண்டாயிரத்திலிருந்து நான்காயிரம் வரை விற்றதையும், யார் யாரிடம் விற்பனை செய்தோம் என்பதையும் விலாவாரியாக ஒப்புக்கொண்டார்கள் இருவரும்.
ஊர் ஊராய் சென்று அத்தனை டூவீலர்களையும் பறிமுதல் செய்தது போலீஸ். யார், யாரிடம் டூவீலர்களை பறிமுதல் செய்தார்களோ, அவர்களிடமே அந்தந்த வண்டிகளை ஒப்படைத்து தலா மூவாயிரம், நான்காயிரம் பெற்றுக்கொண்டதோடு... திருட்டு வண்டியை வாங்கிய குற்றத்திற்காக என்று அதற்குத் தனியே மொய் வசூலித்துக்கொண்டார்களாம்.
""நாங்க திருடுனது 25 வண்டி. எங்க மேல கேஸ் போட்டது 11 வண்டிதான். ஆனால் திருடி விற்ற எங்களைக் காட்டிலும் திருடாமல் விற்ற போலீசுக்கு நல்ல வருமானம்'' என்று சொன்னானாம் டூவீலர் திருடன் சிலம்பூர் சண்முகம்.
-எஸ்.பி.எஸ்.
அமைச்சர் Vs மா.செ.!
அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கும் திருவண்ணாமலை தெற்கு மா.செ. ராஜனுக்கும் அடிக்கடி முட்டல் மோதல்கள் ஏற்பட்டன. பல விவகாரங்களில் அலுவலக அறைக்குள் காரசாரமாக திட்டிக்கொண்டார்கள்.
""மா.செ. ராஜன் என்ன சொன்னாலும் செய்யாதீர்கள்'' என்று அதிகாரிகளுக்கு சொல்லியிருக்கிறார் அமைச்சர் அறநிலையம்.
இந்நிலையில்தான் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் 444 இடங்களில் அ.தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவுசெய்தார் மா.செ.! இதற்கான பேனர், நோட்டீஸ், விளம்பரங்களில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெயருக்குக் கீழ் அதே அளவில் கட்சியின் அமைப்புச் செயலாளர் முக்கூர் சுப்பிரமணியின் பெயரையும் போட்டு, அமைச்சருக்கு இணையாகக் காட்டியிருக்கிறார். இந்தச் செயல் அமைச்சரை ஏகத்துக்கும் கடுப்பாக்கிவிட்டிருக்கிறதாம். அறைக்குள் மோதிக்கொண்டவர்கள், இனி மேடைகளிலும் மோதுவார்கள் என்கிறது இரட்டை இலை வட்டாரம்.
-து.ராஜா
ஆழித்தேரின் அழகைப் பாரு!
"தேரோட்டம் ஒரு கேடா' என்று கேட்டவர், கடவுள் மறுப்புவாதியான கலைஞர். பல ஆண்டுகளாக ஓடாமல், ஓட்ட முடியாமல் நின்றிருந்த திருவாரூர் ஆழித்தேரை சீர்செய்து நவீன தொழில்நுட்பத்துடன் ஆண்டுதோறும் தடையேதுமின்றி ஓடச்செய்ததும் கலைஞர்தான்.
27-05-18 ஞாயிறன்று ஆழித்தேரோட்டத்துக்கு பெரும்கூட்டம் திரண்ட நிலையில்... திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த கனிமொழி எம்.பி., ஆழித்தேரைப் பார்க்க வந்தார். தேரையும், தேர்ச்சிற்பங்களையும் சுற்றிச் சுற்றி வந்து ரசித்தார். தேரைப் பார்க்க வந்த கனிமொழி எம்.பி.யைப் பார்க்க ஒரு கூட்டம் திரண்டது. பலர் ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.
""சாமி கும்பிட வரலை. இவங்க கலையை ரசிக்கவே வந்தாங்க'' எம்.பி.யோடு வந்த நிர்வாகிகள் விளக்கமளித்தார்கள். ""எது எப்படியோ ஆரூர் தியாகேசர் சக்தி வாய்ந்தவர். கடவுளை வணங்காத கனிமொழியை அவர் அழைத்து வந்துவிட்டார்'' என்கிறார்கள் லோக்கல் பா.ஜ.க.வினர்.
தேரோட்டத்திற்காக முதல்நாளே கூட்டம் கூடிய நிலையில்... வழக்கமாக இரவு 10:30 மணிக்கு மூடப்படும் உணவுக்கடைகளை 9 மணிக்கே அடைக்கச் சொல்லி போலீஸ் கெடுபிடி காட்டியதால் வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
-செம்பருத்தி
அமைச்சரின் வாய்ப்பூட்டு!
ஈரோடு, சத்தியமங்கலம், கோபிச்செட்டிப் பாளையம், அந்தியூர் பகுதிகளில் அரசின் எந்த நிகழ்ச்சியானாலும் தவறாமல் கலந்துகொள்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
நிகழ்ச்சியில் பேசினாலும், நிகழ்ச்சி முடிந்து கட்சிக்காரர்களிடம் பேசினாலும் கல்வித்துறை சம்பந்தமாக மட்டுமே பேசுகிறார் செங்கோட்டையன்.
""ஏனுங்க நாங்க என்ன மீடியாகாரங்களா? பிரஸ்கிட்ட பேசுறது மாதிரி எங்ககிட்டயும் பேசலாங்களா? கட்சியைப் பத்தி... நிர்வாகிகளைப் பத்தி... மற்ற கட்சிகளைப் பத்தி எங்கள்ட்ட பேசமாட்டீங்களாங்க?'' கோபியில் நிகழ்ச்சி முடிந்ததும் செங்கோட்டையனிடம் கட்சிக்காரர்கள் கேட்டார்கள்.
""என் துறை தவிர வேற எதைப் பற்றியும் பேசக்கூடாதுனு எனக்கு நானே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டேன். தேவையில்லாமல் பிரச்சினை வரும். எதைப்பற்றியும் பேசுறதுக்காக ஒட்டுமொத்தமா ஜெயக்குமாரை போட்டிருக்காங்க. அவர் பேசட்டும்... நம்ம இலாகா உண்டு... கோயில் குளம் உண்டுனு போகவேண்டியதுதான்'' என்றார் செங்கோட்டையன்.
-ஜீவாதங்கவேல்