சீர்வரிசை எம்.எல்.ஏ.!
நாகப்பட்டினம் தரங்கை சாலைக்குச் செல்வதற்கு காவிரியின் குறுக்கே நடைபாலம் கேட்டு பல ஆண்டுகளாக காத்திருந்தார்கள் மயிலாடுதுறை தொகுதி மனக்குடி பகுதி மக்கள்.
ஒண்ணரை கோடி செலவில், மனக்குடிக்கும், கஞ்சா நகருக்கும் இடையில் பாலம் கட்டுவதற்கு, பூமி பூஜை போட்டுப் பணியைத் துவக்கி வைத்தார் தொகுதி எம்.எல்.ஏ. அ.தி.மு.க. ராதாகிருஷ்ணன்.
""நாங்க மனக்குடிக்கும் தருமபுரத்திற்கும் இடையில் கேட்டோம். நீங்க நடமாட்டம் இல்லாத வயல்காட்ல யாருக்காக கட்டுறீங்க? மக்களுக்காகவா? தனியார் கல்லூரிக்காகவா?'' மக்கள் முணுமுணுத்தார்கள்.
""இதுவே பெரிய புண்ணியம்!'' பதிலடி கொடுத்தார் எம்.எல்.ஏ.
""மக்கள் கேட்ட இடத்தில் கட்டினால் காண்ட்ராக்டர் கமிஷன் மட்டும்தான். எம்.எல்.ஏ. தேர்வு செய்த இந்த இடமோ, எம்.எல்.ஏ.வுக்கு தனியார் கல்லூரியின் சீர்வரிசையே பெற்றுத் தரும்'' இது பகுதி அ.தி.மு.க.வினர் கமெண்ட்.
-க.செல்வகுமார்
மஞ்சு விரட்டு அமைச்சர்!
தமிழகத்திலேயே அதிகப்படியான மஞ்சுவிரட்டுத் தொழுக்களைக் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. 250-க்கும் அதிகமான தொழுக்கள்.
ஆனாலும் கடந்த பத்தாண்டு நெருக்கடிகளாலும் தடைகளாலும் பல கிராமங்களில் மீண்டும் மஞ்சு விரட்டு நடக்கவில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் 10-ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 56 மஞ்சு விரட்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கரும், மாவட்ட ஆட்சியர் கணேசும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராசும் இணைந்து நின்று நடத்தியுள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கரே முன்னின்று நடத்திய விராலிமலை மஞ்சு விரட்டில் 1700 காளைகள் கலந்து கொண்டன.
கடந்த நான்கு மாதங்களாக காலை எழுந்தவுடன், ஏதாவது ஒரு ஊரில் மஞ்சுவிரட்டைத் தொடங்கி வைக்கப் போய்விடுகிறார். ""குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்'' என்று தி.மு.க.வினர் இரண்டாயிரம் பேர் இலுப்பூரில் உள்ள அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற நேரத்தில், திருவரங்குளம் எனும் ஊரில் மஞ்சு விரட்டை தொடங்கி வைத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
-பகத்
சிற்றணியான பேரணி!
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியின் உழவனின் உரிமை மீட்புச் சைக்கிள் பேரணி 16.05.18 அன்று கடுமையான போலீஸ் பாதுகாப்போடு திருவையாறில் தொடங்கியது.
இதற்காக புத்தம் புதிய 300 சைக்கிள்களை வாங்கியது பா.ஜ.க. முதல் நாள் பேரணியைத் தொடங்கி வைத்துவிட்டு தலைவர்களும், நிர்வாகிகளும் கார்களில் முன்னால் சென்றார்கள். அன்றைய பேரணி முடிந்தபோது, 250 சைக்கிள்களே அடுத்த ஊர்க்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பாபநாசம், கும்பகோணம் கடந்து 22.05.18 அன்று நாகப்பட்டினத்திற்குள் பேரணி வந்தபோது 300 சைக்கிள்கள், ஐம்பது சைக்கிள்களாகக் குறைந்து போயின.
""அடுத்த ஊர்க்காரர்களிடம் ஒப்படைக்காமல் சைக்கிள்களோடு சென்று விடுகிறார்கள். பேரணி கட்டெறும்பாகி விட்டது'' வேதனைப்பட்டார் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்.
ஐம்பது சைக்கிள்கள் வந்த பேரணியை அறுபது போலீசார் பாதுகாத்தனர்.
-இரா.பகத்சிங்
சரத்தின் புதுக்கூட்டணி!
தனது கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்திற்காக 18-05-18 வெள்ளியன்று நெல்லைக்கு வந்தார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
சரத்குமார் காரை சமாதானபுரம் நுழைவுப் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார், ""சார் நீங்க போக வேண்டிய கல்யாணமண்டபம் பாளையங்கோட்டை பக்கத்தில் இருக்கு. அதுவரை கடுமையான போக்குவரத்து நெரிசலா இருக்கு சார்'' என்றனர். சட்டெனக் காரை விட்டிறங்கிய சரத்குமார், ""காலைல நான் வாக்கிங் போகலைனு எப்படித்தான் கண்டுபிடிச்சீங்களோ? வேண்டும் என்றே டிராபிக்கை உருவாக்கி என்னை நடக்கவிடுகிறீர்களே... சரி... சரி... என் உடல் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு நன்றி'' போலீசாரைப் பாராட்டிவிட்டு நடை ராஜா பயணியாய் நடக்கத் தொடங்கினார். அவரிடம், ""சார் தேர்தலில் யாருடன் கூட்டணி?'' என ஒருவர் கேட்க, ""கமலும் ரஜினியும் என் சக பயணிகள். நண்பர் எனில் விஜயகாந்த் தான். அவருடன்தான் கூட்டணி'' வேகமாக நடந்தார்.
-நாகேந்திரன்
ஆளுநரின் தூய்மை இந்தியா!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 18.05.18 வெள்ளி நண்பகல் 2 மணிக்கு விழுப்புரத்துக்கு வந்தார். ஆட்சியர் அலுவலக விருந்தினர் இல்லத்தில் தங்கினார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை சந்தித்தார்.
கழிப்பறை பற்றிய டாக்குமெண்ட்ரி பார்த்தார். கழிப்பறைகள் கட்டிய வரவு-செலவுகளை பார்த்தார். அதற்கு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.
மனு கொடுத்த மக்களோ, ""உடனே தீர்வு கிடைக்கும்னு பார்த்தால் இவர் கலெக்டர்ட்ட கொடுத்திட்டுப் போறாரே. இதைத்தான் நாங்களே திங்கட்கிழமை அன்னிக்கிக் கொடுப்போமே?'' நொந்தபடி போனார்கள்.
விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் ஆளுநர் கூட்டிப் பெருக்குவதற்காக ஈ, கொசு மொய்க்காத குப்பைகளை தூவி வைத்திருந்தார்கள். மாலை 5 மணிக்கு புத்தம் புது துடைப்பம், புது பிளாஸ்டிக் வாளி, புது கிளவ்ஸுடன் வந்த ஆளுநர் நான்கு நிமிடம் குப்பை கூட்டினார், அள்ளிப் போட்டார். பிறகு துப்புரவு பணியாளர்களிடம் ""இதுதான் தூய்மை இந்தியா'' என்றார். எல்லாரும் "ஆமாம்' என்றார்கள்.
-எஸ்.பி.சேகர்