அ.ம.மு.க.வுக்கெல்லாம் தண்ணி கிடையாது!

mla-sathyaஆளும் கட்சியான அ.தி.மு.க.வினருக்கும் தினகரனின் அ.ம.மு.க.வினருக்கும் தமிழகம் எங்கும் முட்டலும் மோதலும் நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. சில ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அ.ம.மு.க.வினரை அமுக்கி எடப்பாடி கேம்புக்கு கொண்டு போகின்றனர். தங்கள் வழிக்கு வராத தினகரன் ஆட்களுக்கு பல்வேறு டெக்னிக்குகளில் இம்சையைக் கொடுக்கின்றனர். சென்னை தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட 130-ஆவது வட்டத்தில் உள்ளது பஜனை கோவில் முதல் தெரு. இத்தெருவின் ஆரம்பத்தில் ஒன்றும் கடைசியில் ஒன்றும் என இரண்டு சிண்டெக்ஸ் டேங்குகள் வைத்து, லாரி மூலம் மாநகராட்சி சார்பில் மக்களுக்கு குடிநீர் நிரப்பி வருவது வாடிக்கை. தெருவின் கடைசியில் வசிக்கும் சிலர் தினகரன் ஆதரவாளர்கள் என்பதால், கடந்த சில நாட்களாக தண்ணீர் நிரப்பவில்லையாம். இது குறித்து பகுதிவாசிகள் மாநகராட்சி ஏ.சி.யிடம் கேட்ட போது, "தொகுதி எம்.எல்.ஏ. சத்யாவிடம் ஓ.கே. வாங்கிட்டு வாங்க' என்கிறாராம். எடப்பாடியின் தீவிர விசுவாசியான சத்யாவின் அக்கப்போரால் அல்லாடுகின்றனர் டி.டி.வி. விசுவாசிகள்.

-பரமேஷ்

இதுவும் நலத்திட்டம்தானாம்!

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது "ஜவ்வாது மலை' வட்டம். இதற்கான பாராட்டு விழாவையும், ஜெ.வின் எழுபதாவது பிறந்தநாள் விழாவையும் 30-04-18 அன்று ஜம்னாமாத்தூரில் நடத்தினார் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம்.

அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விழாவிற்கு வந்திருந்தனர்.

இப்படிப்பட்ட விழாக்களில் தானாக வந்து கலந்துகொள்வதற்கு மலைமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் ஆட்களைக் கூட்டத்திற்குத் திரட்ட வேண்டும் என்று நினைத்த அதிகாரிகள் ஊராட்சிமன்றச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் "நலத்திட்ட விழா' என்று கூறி தலா 200 தாய்மார்களை அழைத்துவர வேண்டுமென்று சொல்லியிருந்தார்கள். அவர்களும் அழைத்து வந்தார்கள். விழா முடிந்து நலத்திட்ட உதவி அளிக்கப்பட்டது. என்ன அது? விலையிலா மரக்கன்று!

Advertisment

-து.ராஜா

ஒவ்வொரு அதிகாரிக்குப் பின்னாலும்...!

மாணவிகளிடம் ஒரு மதிப்பெண்ணுக்கு ஐந்து முத்தம் கேட்டவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிலிப்.

philip

பிலிப் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை இல்லை. அதுமட்டுமல்ல, பல்கலையின் விரிவாக்க கல்வித்துறை இயக்குநர் என்ற உயர்ந்த பதவியிலும் தொடர்கிறார் பிலிப். இதற்கெல்லாம் விளக்கம் கேட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமிக்கு கடிதம் வந்திருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை. ஆனால், சஸ்பெண்ட், டிரான்ஸ்பர், பனிஷ்மென்ட் என்று எந்த நடவடிக்கையும் இல்லாமல் "ஐந்து முத்தம்' பிலிப் எப்படி, யாரால் பாதுகாக்கப்பட்டார்?

பிலிப்பின் மனைவி ஷெரின்பிலிப் கோவையில் உள்ள சமூகநலத்துறையின் முக்கிய அதிகாரி. கோவை மாவட்ட முந்தைய ஆட்சியர் சந்தானத்தின் பர்சனல் அசிஸ்டெண்ட்டாக இருந்தவர். அதன் மூலமாதான் தன் கணவருக்கு எதுவும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

-அருள்குமார்

ஓட்டுநராய் மாறி நெகிழ வைத்த ஆட்சியர்!

collector

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் கார் ஓட்டுநராக கடந்த 35 வருடங்களாகப் பணியாற்றிய பரமசிவன், கடந்தவாரம் ஓய்வுபெற்றார்.

ஓட்டுநர் பரமசிவத்திற்கான வழியனுப்பு பாராட்டுவிழா ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

""போக்குவரத்து விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றியவர். இரவு பகல் பாராமல் முகஞ்சுழிக்காமல் பணியாற்றியவர், மிகப்பாதுகாப்பான ஓட்டுநர்...'' என்றெல்லாம் ஆட்சியர் அன்பழகன் உட்பட பலரும் பாராட்டினார்கள்.

விழா முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட ஓட்டுநர் பரமசிவத்தையும் அவர் துணைவியாரையும் தடுத்து நிறுத்திய ஆட்சியர், ""இதுநாள்வரை ஆட்சியர்களை உட்கார வைத்து நீங்கள் ஓட்டிச் சென்றீர்கள். இன்றைக்கு உங்கள் இருவரையும் பின் சீட்டில் உட்கார வைத்து, உங்கள் வீடுவரை நான் ஓட்டி வருவேன்'' என்று கூறி ஓட்டிச்சென்றார். ஓட்டுநர் வீட்டில் தேநீர் அருந்தினார். நிழற்படங்கள் எடுத்துக்கொண்டார்.

ஓட்டுநருக்கும், ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கும் மட்டுமின்றி, கரூர் மக்களுக்கும் வியப்பூட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது இந்நிகழ்ச்சி.

-ஜெ.டி.ஆர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடூரம்!

இரவு 11 மணிக்கு வேளச்சேரியில் இருந்து, கடற்கரை நிலையம் சென்றுகொண்டிருந்த பறக்கும் ரயில் சிந்தாதிரிப்பேட்டையில் நின்று கிளம்பியபோது... ""ஐயோ... காப்பாத்துங்க... காப்பாத்துங்க...'' ஒரு பெண்ணின் பலகீன அலறல் கேட்டது.

சிந்தாதிரிப்பேட்டை நிலையத்தில் பணியிலிருந்த மத்திய ரயில்வே போலீஸ்காரர் சிவாஜி, அலறல் வந்த பெட்டிக்குள் பாய்ந்து ஏறினார். இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுகொண்டிருந்த வேளச்சேரி லட்சுமி நகரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவனை தாக்கி, பிடித்துள்ளார். உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். குற்றவாளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

ஆடைகள் கிழிந்து, கடுமையான தற்காப்புப் போராட்டத்தால் மிரண்டு போயிருந்த அந்தப் பெண் எந்த ஆணைக் கண்டாலும் அலறினார். இவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்த டாக்டர்களோ கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொன்னார்கள். அங்கே சோதித்த டாக்டர்கள் "மனநலம் சரியாகத்தான் இருக்கிறது, பயத்தில் நடுங்குகிறார்' என்று திருப்பிவிட்டார்கள். இப்போது அந்தப் பெண் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரை சந்தித்து விசாரித்து ஆறுதல் கூறியிருக்கிறார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல்.

-அரவிந்த்