விலைவாசியைக் காரணம் காட்டி பொருட்களின் விலையைத் தாறுமாறாக ஏற்றுவதைப் பார்த் திருக்கிறோம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வியாபாரிகளோ, அதற்கு வேறொரு காரணத்தைக் கூறி திகைக்க வைக்கிறார்கள்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், 24 மணி நேரமும் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறது. தினமும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இங்கே வந்துபோகிறார்கள். அப்படி வரும் பயணிகளை அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களும் மற்ற கடைகளும் மிரள வைக்கின்றன என்கிறார்கள் பலரும். இது உண்மையா என்று அறிய, களமிறங்கினோம். அங்கே சுகாதாரமும் "உவ்வே'’ரகத்தில் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
பஸ் ஏற காத்திருந்த உமா என்ற பயணியிடம் விசாரித்தபோது, "ஏழை-எளிய மக்கள் அதிகமாக வந்து செல்லும் இந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில், எல்லாமே விலை அதிகமா இருக்கு. குறிப்பாக, உணவகத்தில் உணவு வகைகளின் விலையைக் கேட்டால் பசியே தலைதெறிக்க ஓடுகிறது. நான் கோயம்புத்தூர் செல்லத்தான் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு வந்தேன், பசி வந்ததால், இந்த 4-ஆவது பிளாட்பாரத்தில் உள்ள தோசை கபேயில் புளியோதரை கேட்டேன். முதலில் பில் வாங்கச் சொன்னார்கள். புளி சாதத்தின் விலை 80 ரூபாயாம். ஒரு வடையின் விலை 25 ரூபாய், ஒரு காபியின் விலை 22 ரூபாயாம். கேட்டதுமே தலை சுற்றிவிட்டது. அதிலும் நின்றுகொண்டே சாப்பிடத்தான் இந்த ரேட். இது குறித்து கல்லாவில் இருந்தவரிடம் கேட்டபோது, "ஏய், இங்க எல்லாம் இப்படித்தான். காசு இருந்தா சாப்பிடு, இல்லைன்னா கேள்வி கேட்காம போய்க்கிட்டே இரு' என்று மரியாதை இல்லாமல் சொன்னார். "எதுக்கு இப்படி மரியாதை இல்லாமப் பேசறீங்க''ன்னு கேட்டதுக்கு... அந்த ஆள், "மரியாதை கொடுக்க நீ என்னா கலெட்டரா..? மரியாதை வேணும்னா ஏ.சி.வச்ச ஓட்டலுக்குப் போ. வாசல்லயே சலாம் வச்சு மரியாதையா கூப்பிடுவாங்க. இங்க கடையை நடத்த எத்தனை அதிகாரிங்களைச் சரிக் கட்டணும் தெரியுமா? அதுக்கும் சேர்த்துதான் விலை வைக்கிறோம்’''’என்றார்.
பஸ்ஸுக்கு நேரம் ஆனதால் வேறு வழியில்லாமல் புளி சாதத்துக்கும், காபிக்கும் பில் வாங்கினேன். 80 ரூபாய் கொடுத்து வாங்கிய புளிசாதம், நசநசன்னு தண்ணீர் விட்டு இருந்துச்சு. இதுபற்றி தயக்கமாவே அவர்கிட்ட கேட்டப்ப, பார்வையாலேயே மிரட்டினார். உடனே, அந்த புளிசாதத்தை குப்பையில் வீசிட்டேன். அடுத்ததா பக்கத்துக் கடையில் ஒரு லிட்டர் தண்ணி பாட்டில் கேட் டால், 25 ரூபாய்னு சொன்னாங்க. எம்.ஆர்.பி. ரேட்டுக்கு மேல, விலை வச்சுதான் விக்கிறாங்க. இதையெல்லாம் கேள்வி கேட்க ஆளில்லை. சரின்னு பஸ் ஏறுறதுக்கு முன்னாடி பாத்ரூம் போகலாம்னு போனா, வழில காலங்கார்த் தாலயே துணி விலகிய நிலையில் ஒரு போதை ஆசாமி படுத்திருக்கான். அந்த ஏரியாவே நாறுச்சு. இது என்ன நாடா?'' என்றார் ஆதங்கமாக.
இப்படி பலரும் ஆதங்கத் தைக் கொட்டியதால், இது குறித்து சி.எம்.பி.டி அதிகாரியான ராஜன் பாபுவிடம், "ஏன் இப்படி...?'' என்று கேட்டோம். அவரோ "எம்.ஆர்.பி. விலைக்கு மேல் விற்பனை செய் தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால் சாப் பாட்டுக்கு என்று தனியாக விலை நிர்ணயம் எது வும் செய்யப்படவில்லை. முடிந்த வரை சுகா தாரமாக வைத்திருக்கிறோம்'' முடித்துக்கொண்டார்.
உணவுத்துறை அதிகாரிகளோ, மாநக ராட்சி அதிகாரிகளோ கோயம்பேட்டை கண்டுகொள்ளாமல், அடாவடி வியாபாரிகள் நீட்டும் சில நூறு ரூபாய்களுக்காக சலாம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னைக்குப் பெருமை சேர்க்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை, அருவருக் கத் தக்கதாக மாற்றி வரும் இவர்களை எல்லாம் உரியவர்கள் தட்டிக்கேட்பார்களா?.