கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மாணவி படுகொலை விவகாரம் கொல்கத்தாவில் மையம்கொண் டாலும் இன்று தேசிய அளவிலான விவகாரமாக உருவெடுத்துள்ளது.
ஆகஸ்டு 9-ஆம் தேதி நள்ளிரவில் சஞ்சய் ராய் என்ற ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தன்னார்வக் காவலரால் மாணவி சூறையாடப்பட் டார் என்கிறது மாநில அரசு. மாநில அரசின் காவல்துறை தந்த விவரங்களில் மாணவியின் பெற் றோருக்கு நம்பிக்கை இல்லை. உயர்நீதிமன்றத்தை அணுக, மாநில காவல்துறையின் விசாரணைப் போக்கு கண்டிக்கப்பட்டு, சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்பும் இதுபோல ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மாணவிகளின் தற்கொலைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2001, ஆகஸ்ட் 25-ல் சௌமித்ர பிஸ்வாஸ் எனும் நான்காமாண்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டாள். அப்போதும் தற்கொலை என முத்திரை குத்தி விஷயத்தை மறைக்கமுயன்றனர். மாணவர்களும், இறந்தவரின் பெற்றோரும் சந்தேகங்களைக் கிளப்ப, சி.ஐ.டி. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சக மாணவி ஆரோமிதா தாஸ் என்பவர் கைதுசெய் யப்பட்டார். பின் அந்த வழக்கு அப்படியே தேங்கிப்போனது.
கோவிட்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், 25 வயது இரண்டாமாண்டு போஸ்ட் கிராஜூவேட் மாணவி பௌலமி, 6-வது தளத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் தற் கொலைக்கான காரணங்கள், கிளம்பிய சந்தேகங்கள் இன்றுவரை தீர்க்கப்படாமலே எஞ்சியிருக்கிறது.
முரண்கள், சந்தேகங்கள்!
மாணவி படுகொலை நடந்த சூட்டோடு சூடாக, மருத்துவக் கல்லூரி மெடிக்கல் சூப்பரிண் டண்ட் சஞ்சய் வசிஸ்ட், "அந்த நடுராத்திரியில் ஏன் அந்த மாணவி நான்காவது மாடிக்கு சென்றார்'' என்ற கேள்வியை எழுப்பினார். மருத்துவக் கல்லூரி மாணவி தொடர்ந்து டூட்டிக்கு மேல் டூட்டியாக 30 மணி நேரம் வேலைபார்க்க நெருக்கப்பட்டிருக் கிறார். கிட்டத்தட்ட இனிமேல் வேலையே பார்க்கமுடியாது என்ற நிலைமையில் நான்காம் மாடியிலுள்ள ஓய்வறைக்குப் போயிருக்கிறார்.
இரண்டாவதாக, தன் அம்மாவிடம் பேசி விட்டுத்தான் தூங்கப்போயிருக்கிறாள். சற்றுநேரத் தில் மாணவியின் அம்மாவுக்கு ஒரு போன் வரு கிறது. தன்னை யார் என்றுகூட அறிமுகப்படுத்திக் கொள்ளாத அந்த அழைப்பு, உங்கள் பெண்ணுக்கு உடல்நலக் குறைவு என்று தகவல் சொல்கிறது. சற்றுநேரம் கழித்து உங்கள் பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்று சொல்கிறது. இதைக் கேட்டு அந்தக் குடும்பம் பதறியடித்து மருத்துவ மனைக்கு ஓடி வருகிறது. இதுபோன்ற வழக்குகளில் வழக்கமாகச் செயல்படுவதுபோல் கல்லூரியும், காவல்துறையும் சரியான விவரங்களையே பெற்றோரிடம் சொல்லமறுக்கிறது. இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட பின்னரே மாணவியின் சடலத்தைக் காட்டுகின்றனர்.
இதற்குள் விஷயம் பரவி, மேற்கு வங்கமே கொதிநிலைக்குப் போனது. காவல்துறை சொல்லும் விஷயங்களில் நம்பிக்கையிழந்த அந்தக் குடும்பம் நீதிமன்றத்தை நாடுகிறது. ஒரு மாணவி, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிலையிலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரே அளித்திருக் காதது உள்ளிட்ட குளறுபடிகள் தெரியவர, நீதிமன்றம், மேற்கு வங்க காவல்துறையிடமிருந்து வழக்கை மாற்றி சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.
ஆகஸ்டு 9-ஆம் தேதி இரவு மாணவி ஓய் வெடுக்கப் போனது, மருத்துவமனையின் ஓய்வறைக்கு. ஆனால் உடல் கண்டெடுக்கப்பட் டது, செமினார் அரங்கில். உடலெங்கும் காயங்கள். கண்களில் ரத்தம். இடுப்பில் காயம். இதைவிடக் கொடுமை, கண்டெடுக்கப்பட்ட போது மாணவி யின் கால்கள் விரிக்கப்பட்ட நிலையிலே விறைத் திருந்தது. பலாத்காரத்துக்காக சிலர் பெண்ணின் கால்களை விரித்துப்பிடித்த நிலையில் வல்லுறவு நிகழ்ந்து, அவர் இறந்தால் மட்டுமே கால்கள் அந்த நிலையில் காணப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனிப்பவர் கள், வழக்கில் காவல்துறையால் குற்றம்சாட்டப் பட்ட சஞ்சய்ராய் மட்டும்தான் குற்றவாளி என் பதை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். மாணவியின் பெற்றோரும், மாணவியின் சடலத்தையும், அவள் உடலெல்லாம் இருந்த காயத்தையும் பார்த்துவிட்டு கூட்டுப் பாலியல் பலாத்கார சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதையும் இணைத்துப் பார்க்கவேண் டும். மாணவியின் பெற்றோர், சில பயிற்சி மருத்துவர் கள், மருத்துவர்களுக்கு இந்த கூட்டுப் பலாத்காரத் தில் தொடர்பிருக்கலாம் என சில பெயர்களை சி.பி.ஐ.யிடம் தெரிவித்துள்ளனர். இதனால் எங்கே தங்கள் பெயர் அதிலிருக்குமோ என ஆர்.ஜி. கர் மருத்துவமனை மருத்துவர்களுக்கு நடுக்கம் எழுந்திருக்கிறது. மாணவியின் பெற்றோர், “"இங்கே சேர்ந்த பிறகு, என் மகள் இந்த மருத்துவமனைக் குப் போவதையே விரும்பியதில்லை. ஏதோ ஒரு நெருக்கடியில் அவள் இருந்தாள். அதை எங்களிடம் வெளிப்படுத்தவில்லை. நாங்கள்தான் சமாதானப்படுத்தி அனுப்பினோம். ஒற்றை நபர் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்க முடியாது''’என சந்தேகமெழுப்புகின்றனர்.
தவிரவும், ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் இருவர், சி.சி.டி.வி. புட்டேஜ்கள் எப்படி சிதைக்கப்பட்டிருக்கலாம், உயர் தொடர்புகளுள்ள சக மருத்துவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
சம்பவம் நடந்த மறுநாள் காலை ஏழரை மணிக்கு அந்த மாணவியின் இன்டெர்ன் அவளது செல்போனுக்கு அழைத்திருக்கிறார். அது பதிலளிக்கப்படாது போகவே மற்ற மாணவிகளைக் கேட்டிருக்கிறார். அதன்பிறகே அவளுக்கு என்ன நடந்ததென்பது தெரியவந்திருக்கிறது. மாணவியின் உடலைப் பார்த்த சக மாணவிகளில் ஒருத்தி, "அவளது உடல் செமினார் அரங்கின் மேடையில் கிடந்தது. அவளது குர்தா தாறுமாறாகக் காணப்பட, பேண்ட் காணப்படவில்லை. அவளது லேப்டாப், நோட்புக், செல்போன், தண்ணீர்ப் பாட்டில் போன்றவை அவளுக்கருகே காணப் பட்டன''’என்கிறார்.
சமீபகாலமாக மருத்துவமனையில் சட்ட விரோதமாக நடந்த ஏதோவொன்றை அந்த மாணவி அறியவந்திருக்கிறார். அதை வெளியே சொல்லிவிடலாம் என்பதற்காக பழிதீர்க்கப் பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. விவகாரம் கைமீறிப்போன நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா மூர்க்கமாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க. என அனைவரின் மேலும் குற்றம்சுமத்துகிறார்.
கம்யூனிஸ்ட்டுகளின் பிடியிலிருந்து மேற்குவங்கம் நழுவியது முதல் இன்று வரை மேற்கு வங்கத்தைத் தன் பிடியில் வைத்திருக்கிறார் மம்தா. அதனாலேயே கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.க. போன்றவை இத்தகைய பிரச்சனை எழும்போது லேசில் விடாதுதான்.
ஆனால் மாணவிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தைக் கண்டு மக்கள் தன்னிச்சையாகவே போராட்டத்தில் இறங்கினார்கள். எதிர்காலத்திலாவது மருத்துவர், பயிற்சி மாணவர்கள், செவிலியர்கள் யாருக்கும் இந்தக் கொடூரம் நடக்கக்கூடாதென மருத்துவத் துறை ஒன்றுதிரண்டது. மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு எழுந்தது. போராடியவர்களும் பெரும்பகுதி அமைதியாகவே போராடினர்.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி கொல்கத்தா போராட்டத்தில் ஆர்.ஜி. மருத்துவமனையிலும் வேறுசில இடங்களிலும் ரவுடிகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் மருத்துவமனை வளாகம், பொதுமக்களின் வாகனங்கள் சேதமாகின. தாக்குதல் நடத்தியவர்கள் குறிப்பாக ஊடகத்தினரையும், வீடியோ கேமரா வைத்திருந்த ஒளிப்பதிவாளர்களையும், கண்காணிப்பு கேமராக்களையும் குறிவைத்துத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, போராட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர்கள், பெண் மருத்துவர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இருந்தாலும் போராட்டத்திலிருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
ரவுடிகள் மம்தா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்கிறது பா.ஜ.க. பா.ஜ.க.வால் திரட்டிவரப்பட்டவர்கள் என்கிறார் மம்தா. ஆனால், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "உளவுப் பிரிவு போராட்டம் குறித்து தகவல் தரவில்லையா, அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துவிட்டதா' என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது அரசுக்குப் பின்னடைவாக அமைந்தது.
வன்முறையில் பயிற்சி மருத்துவர் உடல் கண்டெடுக்கப்பட்ட செமினார் அரங்கு வரை சேதமடைந்துள்ளதாகவும், போராட்டக் காரர்கள் மாணவி விவகாரத்தில் முக்கிய சம்பவ நிகழ்விடமான செமினார் அரங்கையும், அங்கு எஞ்சியிருக்கும் ஆதாரங்களை யும் அழிக்கும் நோக்கிலே, இந்த தாக்குதலை ஒருங்கிணைத்த தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பதிலுக்கு, உடல் கண்டெடுக் கப்பட்ட இடம் சேதமடைய வில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
மாணவியின் மரணத் துக்குப் பின் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பல்வேறு மாநில தலைநகரங்களி லும் முக்கிய நகரங்களிலும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கு வேலையிடத்தில் பாதுகாப்பு வேண்டுமெனக் கோரியும், அதற்கென சட்டம் கொண்டு வரச் சொல்லியும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஆகஸ்டு 16-ஆம் தேதி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் மாணவிக்கு அஞ்சலி செலுத் தும்விதமாக மெழுகுவர்த்தி ஏந்தியும் பேரணிகள் நடை பெற்றன. பல்வேறு நகரங்களில் சில மணி நேரத்துக்கு புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. பதிலடியாக மம்தாவும் போராட்டங்களை நடத்தினார்.
இந்நிலையில், தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை கையிலெடுத்திருப்பது, மம்தாவை அதிர வைத்திருக் கிறது!