ஜெயலலிதா இறந்ததற்கு பின்னால்... ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளியான ஓம் பகதூரைக் கொன்று விட்டு, பங்களாவிற்குள் நுழைந்து கொள்ளை அடித்தது 11 பேர் அடங்கிய கும்பல். தமிழகத்தை அதிரவைத்த அந்த நாள், ஏப்ரல் 24. 2017.

போலீஸ் ஸ்மெல் செய்வதற்குள்... கொடநாடு பங்களாவில் ட்ரைவராக இருந்து, கொலையில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்ட கனகராஜ்... தனது சொந்த ஊரான ஈரோட்டில் ஒரு விபத்தில் இறந்து விட்டதாக தெரிய வந்தது. அதே கொலையில் சம்பந்தப்பட்ட சயான் தனது மனைவி, மகளோடு வாளையார் ரோட்டில் ஒரு காரில் சென்று கொண்டிருக்கும்போது டேங்கர் லாரி மோதியது. அந்த விபத்தில் கழுத்தறுபட்ட மனைவியும், குழந்தையும் இறந்து கிடக்க சயான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இது விபத்தல்ல... திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை... என நக்கீரன் வெளியிட்டது.

kk

99 அறைகள் கொண்ட கொடநாடு பங்களாவிற்குள் எந்த வழியாக நுழைய முடியும் என்பதை எல்லாம் பங்களாவிற்கு மிகப் பரிச்சயமான ஒருவனால் மட்டுமே சொல்ல முடியும். அந்த ஒருவன் சஜீவன். ஜெயலலிதா நுழையும் 10- வது கேட் வழியாக சசிகலாவுக்குப் பிறகு சஜீவன் மட்டும்தான் நுழைவான்.

Advertisment

பங்களாவிற்குள் நடக்கும் அனைத்து பர்னிச்சர் வேலைகளையும் செய்வது சஜீவன்தான். அவனது முகத்தையும் அகத்தையும் நக்கீரன் மட்டுமே வெளிக் கொண்டு வந்தது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் நாங்கள் கொள்ளை அடிக்க வந்தோம் என சயானும், மனோஜூம் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க பதறியது தமிழகம். அதற்குப் பிறகு சயான், மனோஜ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் 22வது சாட்சியாக சேர்க்கப் பட்டிருக்கும் சாந்தா என்பவர், ""ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். நான் அதை ஊட்டி கோர்ட்டில் புகாராக அளித்த பின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து நேரும் என்ற அச்சம் வந்திருப்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்...'' என ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

90 நாட்களில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் எனவும், 21-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் 10 பேரும் ஆஜராக வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது.

Advertisment

கடந்த 21ந் தேதி ஊட்டி கோர்ட் நீதிபதி வடமலை முன் சாந்தாவின் புகார் விசாரணைக்கு வந்தபோது, கோவை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த சயானையும், மனோஜையும் போலீசார் ஊட்டி கோர்ட்டிக் ஆஜர்படுத்தி விட்டனர். ஆனால் மீதமுள்ள 8 பேரும் அவர்களது வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. 8 பேருக்கும் பிணையில் வர முடியாத வழக்கில் பதிவு செய்து சிறையில் அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார் நீதிபதி வடமலை.

kk

கோர்ட்டுக்கு வெளியே வந்த சயானும், மனோஜூம் மீடியாக்களிடம்... ""பணம் பத்தும் செய்யும்னு சொல்வாங்க. ஆனா பதவி பதினொண்ணும் செய்யும். இப்ப எங்களை வச்சு செய்யுறாங்க. நீங்களும் பார்த்துட்டுதானே இருக்கறீங்க... அதுனாலதான் இந்த கேஸை சீக்கிரமா முடிக்கப் பாக்குறாங்க'' என சொல்ல... மனோஜோ... ""இந்த வழக்குல சஜீவனுக்கும், அவன் சகோதரனுக்கும் தொடர்பு உண்டு. என்ன தொடர்புங்கறதை அடுத்த வாய்தாவுக்கு வரும் போது சொல்றேன்...'' எனச் சொல்ல மீண்டும் பரபரப்பாகியுள்ளது கொடநாடு கொலை வழக்கு.

அரசு வழக்கறிஞர் பால நந்தகுமாரோ, ""ரொம்ப சென்சிடிவ்வான இந்த வழக்கு கொரோனோ காலத்தால் கடந்த நான்கு மாதங்களாய் நடக்காமல் இருந்தது. இப்போது சூழல் கொஞ்சம் சரியாக இருப்பதால்... இந்த வழக்கை விரைவாய் முடிக்கக் கேட்டிருந்தோம். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை'' என்கிறார் இயல்பாய்.

27-ஆம் தேதி ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வழக்கு வரும்போது, சஜீவனின் ரோல் என்னவென்பதை அறிய பலரும் ஆவலாய் இருக்கிறார்கள்.

சஜீவன்தான் இந்த கொடநாடு கொலை- கொள்ளையில் சூத்ரதாரியாக செயல் பட்டான்... என நக்கீரன் வெளிப்படுத்திய நிலையில், முதல் குற்றவாளியான சயானும், இரண்டாவது குற்றவாளியான மனோஜூம் நக்கீரன் கூற்றை வழி மொழிந்திருக்கிறார்கள். நக்கீரன் புலனாய்வு பொய்யாகாது என்பது இதன் மூலம் நிரூபண மாகியிருக்கிறது.

இது குறித்து சஜீவனைத் தொடர்பு கொண்டு பேசினோம்... ""ஏற்கனவே என்னைப் பற்றி எழுதி இருக்கீங்க... உங்களுடன் பேச நான் தயாராக இல்லை...'' என போனை கட் செய்து விட்டார் கோபமாய்.

-அ.அருள்குமார்