கொடநாடு வழக்கில் ஆறுகுட்டி அனுபவ் ரவியைத் தொடர்ந்து சசிகலாவை விசாரிக்க விருப்பதாக இந்த வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி.யான சுதாகர் அறிவித்துள்ளார். ஏன் திடீரென கொடநாடு வழக்கில் சசிகலா உள்ளே வருகிறார் என விசாரித்த போது... பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.
நமது நக்கீரனில் கடந்த இதழில் சசிகலா, எடப்பாடி, சஜீவன், முன்னாள் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா, முன்னாள் கலெக்டர் சங்கர் ஆகியோரை இந்த வழக்கில் விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் விஜயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதில் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது எனவும் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். சசிகலாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்ததற்கு அந்த வழக்குதான் காரணமா? என வழக்கறிஞர் விஜயனைக் கேட்டோம். நூறு சதவிகிதம் அந்த வழக்குதான் காரணம் என்கிறார் வழக்கறிஞர் விஜயன்.
மேலும், கொடநாடு போலீஸ் ஆய்வாளர் பாலசந்திரன், "கொள்ளை நள்ளிரவு நடந்தது. நான் அந்த இடத்திற்கு அதிகாலை சென்றேன். நான் போகும்போது அந்தப் பகுதி கிராம நிர்வாக அதிகாரி மோகன்குமாரும் வந்தார்'' என்றார். மோகன்குமார் அளித்த சாட்சியத்தில் "நான் அங்கு செல்வதற்கு முன்பே மாவட்ட எஸ்.பி. முரளிரம்பாவும், கலெக்டர் சங்கர் ஆகியோர் வந்திருந்தனர்'' என்றார். கோர்ட் ரெக்கார்டுகளும் ஆவணங்களாக உள்ளன. காவல்துறையின் கூடுதல் விசாரணையின் ஐ.ஜி.யான பாரியும், எஸ்.பி. முரளிரம்பாவும், "ஏற்கனவே கொடநாட்டி-ருந்து தங்கத்திலான குருவாயூரப்பன் சிலையை எடுத்துச் சென்றார்கள் என எஸ்டேட் மேனேஜர் நடராஜன் கூறியதாக செய்திகள் வந்தது'' என்று வழக்கறிஞர் விஜயன் தொடர்ந்தார்.
உண்மையில் கொடநாடு கொள்ளை யில் என்ன நடந்தது என்பதையறிய, குற்றவாளிகளுக்காக ஆஜராகும் நான் மனு போட்டேன். அதில் பழைய எஸ்.பி. முரளிரம்பா, கலெக்டர் சங்கர் மற்றும் கொடநாடு எஸ்டேட் உரிமையாளர் சசிகலா, சஜீவன் ஆகியோருடன், அங்கு கொள்ளை நடந்தபோது போலீசும், மின்சாரமும் இல்லாதததால் அதற்குப் பொறுப்பான அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஊட்டி நீதிமன்றம் நிராகரித்தது. உயர்நீதிமன்றத்தில் மனு போட்டேன்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வேளையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞரான அய்யப்பராஜ் திடீரென்று சசிகலா, எடப்பாடி சார்பில் பதில் மனு போடுகிறேன் என கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. நீதிமன்றம் எப்படியும் சசி, எடப்பாடி, சஜீவன் மற்றும் போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிடும் என்ற முடிவுடன் சசிகலாவை விசாரிக்க ரெடியாகியுள்ளனர்'' என்கிறார் விஜயன்.
கொடநாட்டின் உரிமையாளர் என்ற முறையில் சசிகலாவைத்தானே முதலில் விசாரித்திருக்க வேண்டும்? 2017-ல் நடந்த கொள்ளை பற்றி 5 வருடங்கள் கழித்து விசாரிப் பார்களா?
கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார். முத-ல் கொள்ளை வழக்கை விசாரித்த எடப்பாடி போலீஸார், சசியிடம் கொள்ளை பற்றி சிறையிலேயே விசாரித்திருக்கலாம். அப்பொழுது டி.டி.வி.தினகரனும் இரட்டை இலை வழக்கில் திஹார் சிறையில் இருந்தார். கொடநாடு நிர்வாகத்தை கவனித்து வந்த அதன் மேனேஜர் நடராஜன், அப்போது நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்த இளவரசியின் மகன் விவேக்கிடம் பேசியிருக்கிறார். நடராஜனையும் விவேக்கையும் போலீஸ் விசாரிக்கும்போதே சசிகலாவை விசாரித்திருக்க வேண்டும் என்கிறார்கள் வழக்கைப் பற்றி நன்கு அறிந்த சமூக ஆர்வலர்கள்.
"விசாரணையில் சசிகலா என்ன சொல்வார்?'' என கேட்டதற்கு, "எதுவும் திருட்டுப் போகவில்லை எனச் சொன்னால் குற்றத்தை மறைத்ததற்காக அவர் குற்றவாளியாக்கப்படுவார். ஏனென்றால், இந்த வழக்கில் சசிகலா, எடப்பாடி, சஜீவன் என பலர் வருகிறார்கள். அவர்கள் குற்றவாளிகள் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என எடப்பாடி அரசின் காலத்திலேயே போலீசாரின் கருத்தாக கோர்ட் ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது'' என்கிறார் வழக்கறிஞர் விஜயன்.
அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் எடப்பாடி மேல் செம கோபத்தில் இருக்கிறார் சசி. விசாரணையில், கொள்ளை பற்றியும் கொடநாட்டில் இருந்த ஆவணங்கள் பற்றியும் அதிகம் சொல்லவில்லை என்றாலும் அதில் எடப்பாடியின் ஆவணம் இருந்தது. அதை எடுக்கத்தான் கொள்ளை நடந்தது என கூறினால் கொடநாடு வழக்கு வேகம் பெறும். அடுத்ததாக சஜீவன், எஸ்.பி. முரளிரம்பா, கலெக்டர் சங்கர், எடப்பாடி, அவருக்கு நெருக்கமான இளங்கோவன் என வழக்கு பாயும். சசி அதை நிச்சயம் செய்வார் என்கிறார்கள் சசிக்கு நெருக்கமானவர்கள்.
இதற்கிடையே "சசிகலா, "நான் கொடநாடு வழக்கில் சாட்சியமளிக்கிறேன்' என முன்பே போலீசாரிடம் தெரிவித்துவிட்டார். அதன்படி பல நாட்களுக்கு முன்பே சம்மன் அனுப்பி போலீஸ் விசாரிக்கிறது' என்கிறது போலீஸ் வட்டாரம்.
ஆறுகுட்டி, அனுபவ் ரவி உட்பட இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்தவற்றை கேள்விகளாக்கி சசிகலாவிடம் கேட்க, போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
எடப்பாடியை சிக்க வைக்குமா சசியின் ஸ்டேட்மெண்ட் என்பதுதான் தற்போதைய கேள்வி.