லகளவில் ஊடகங்கள் உற்றுப்பார்க்கும் இரண்டு நிகழ்வுகள், சீனாவின் சட்டத்திற்கு எதிரான ஹாங்காக் மக்களின் போராட்டமும், 370-வது பிரிவை நீக்கிய மோடி அரசு தொடர்பான காஷ்மீர் மக்களின் எதிர்வினையும்தான். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும் தலைநகரான டெல்லியில் தி.மு.க. நடத்திய போராட்டம் அகில இந்திய அரசியலிலும் சர்வதேச ஊடகங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. காரணம், காஷ்மீரின் தற்போதைய நிலைமைதான்.

dmk

ஆகஸ்டு 5-ஆம் தேதி இந்திய பாராளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் அரசியலமைப்புச் சட்டம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் திரும்பப்பெறுவதற்கு முன்பே காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு, அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வசதி, தொலைத்தொடர்பு முதலியவை கட்டுப்படுத்தப்பட்டன.

ராணுவக் கெடுபிடி மெல்லத் தளர்த்தப்பட்டு, இயல்பு நிலை நிலவுவதாக அரசு தெரிவித்தாலும், காஷ்மீர் மக்கள் தீரத்துடன் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். கல்வீச்சு சம்பவங்கள் தொடர்கின்றன. படையினரின் தாக்குதலில் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படும் படங்கள் வெளியாகின்றன. இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், இன்னும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்படவில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார் மெகபூபா மகள். 200 பள்ளிகள் திறக்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மாணவர்களோ, ஆசிரியர்களோ வராததால் அவை வெற்றுக் கட்டடங்களாகவே இருக்கின்றன.

ddaf

Advertisment

காஷ்மீரின் சிறப்பு சட்டமும் மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்ட சில நாட்களுக்கு பத்திரிகைகளே வெளிவரவில்லை. இப்போது தணிக்கை மற்றும் மத்திய அரசின் மீதான அச்சம் காரணமாக பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதுவதையே தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கின்றன.

அதேபோல வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் தற்போதும் காஷ்மீருக்கு பல அடுக்கு பாதுகாப்பு தொடர்வதால், சுற்றுலா பயணிகள் வரவில்லை. அவர்களை நம்பியிருக்கும் வணிகர்கள், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையிலும் கடைகளை தன்னிச்சையாக பூட்டியே வைக்கிறார்கள். நாள்தோறும் அவர்கள் கடைகளுக்கு வந்து பூட்டுகள், கதவுகள் சரியாக இருக்கின்றனவா என சோதித்துவிட்டு திரும்பிவிடுகின்றனர்.

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய லடாக் பா.ஜ. எம்.பி. ஜம்யங் செரிங், தற்போது வெளியாட்கள் குடியேற்றம் அதிகரிக்கக்கூடாதெனவும், காஷ்மீர் பழங்குடி மக்களுக்கான சிறப்பு சட்டங்கள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும், வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கே அதிக முன்னுரிமை தரும் இடஒதுக்கீட்டு சட்டங்கள் தேவையென்றும் குரல்கொடுத்திருக்கிறார். பாகிஸ்தானோ காஷ்மீர் விவகாரம்தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில்தான் இந்தியத் தலைநகரான டெல்லியில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் தி.மு.க. ஒருங்கிணைத்த போராட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 15 கட்சிகள் ஆதரவளித்தன. வழக்கமாக தேசியக் கட்சிகளின் போராட்டத்தில் மாநில கட்சிகள் பங்கேற்கும். மாறாக, மாநில கட்சியொன்று ஒருங்கிணைக்கும் போராட்டத்தில் தேசியக் கட்சிகள் பங்குபெற்றது பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

ப.சிதம்பரம் கைதான நிலையில், அடுத்த கைதாக ப.சி.யின் மகன் கார்த்தி சிதம்பரம் இருக்கக்கூடுமென ஊகிக்கப்படும் நிலையில் அவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வின் இந்தப் போராட்டம் குறித்து பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்திய நிலையில், பாகிஸ்தானிய ஊடகங்களில் இது குறித்து வெளியான செய்திகளை பா.ஜ.க. அரசு உன்னிப்பாக கவனித்தது. பாகிஸ்தான் ரேடியோ ஒலிபரப்பை காஷ்மீர் மக்கள் கேட்கமுடியும் என்பதனால், பாகிஸ்தான் ரேடியோக்களில் இச்செய்தி திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் பெரிய எதிர்ப்பிருக்காது என எதிர்பார்த்த மோடி அரசுக்கு தி.மு.க.வின் எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தப் போராட்டமும் அதில் குலாம்நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, பிருந்தாகாரத் உள்ளிட்டோர் பங்கேற்றதும் அதிர்வை ஏற்படுத்தியது. தி.மு.க.வை பிரிவினைவாத சக்தியாக காட்டுவதற்கு சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க. தரப்பினர் முயற்சித்த அதே வேளையில், பா.ஜ.க. தலைமையோ, ஆபரேஷன் ரைசிங் சன் எனும் வியூகத்தை வகுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தி.மு.க. எம்.பிக்களின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் நடந்ததால், தி.மு.க.வைப் பிளப்பதற்கான ஆபரேஷனுக்கு பா.ஜ.க. ரெடியாகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க. அழகிரி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டவர்களை தனித்தனி இலக்காகக் கொண்டு, அவர்களை தொழில் மற்றும் சட்டநெருக்குதலுக்கு உள்ளாக்கி தி.மு.க.வை டேமேஜ் செய்வது, அடுத்தகட்டமாக தி.மு.க.வில் பல அணிகளை உருவாக்கி பலவீனப்படுத்துவது என்பதுதான் ஆபரேஷன் ரைசிங் சன்னுக்கான அஜெண்டா.

-கீரன், தாமோதரன் பிரகாஷ், க.சுப்பிரமணியன்