கந்துவட்டி கொடுமை பற்றி தெளிவான திரைக்கதையுடன் "தடையறத் தாக்க', "கனா கண்டேன்' போன்ற படங்கள் வெளிவந்த அதே தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களே கந்துவட்டிக் கொடூரத்தை நிகழ்த்துவதால் திருச்சி பகுதி அலறுகிறது.
சினிமா நடிகர் அலெக்ஸ் ஒரு காலத்தில் திருச்சி ரயில்வே தொழிலாளர்களுக்கு வட்டி கொடுக்கும் தொழில் நடத்தி வந்து பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தினாலும், கால போக்கில் மாஜிக் கலைஞராக மாறி, இறந்தும்விட்டார்.
அவருடைய மருமகன் ஜெரால்டு மில்டன் அதிமுகவில் இணைந்து கவுன்சிலராக மாறி, அரசியல் பலத்துடன் தொடர்ச்சியாக கந்துவட்டி கொடுமை செய்கிறார் எனப் புகார்கள் குவிகின்றன. ஆனாலும், சினிமா, அரசியல், ரவுடிகள் பலத்தால், வழக்குகளை மீறி கந்துவட்டி தொழிலை செய்து வருகிறார். ஜெ.ஆட்சியில் கந்துவட்டிக்காரர்கள் மீது குண்டாஸ் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அவர் காலத்திலேயே அதன் பேரில் நட வடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
திருவரம்பூரில் உள்ள காந்திநகரில் ராகுல் என்கிற பெயரில் மினரல்வாட்டர் கம்பெனி நடத்திய சரவணன் என்பவர், ""நாங்க வாங்கினது அஞ்சு லட்சம்தான்... இன்னிக்கி 25 லட்ச ரூபாய் என்னை கட்டு... கட்டு... கட்டு...கட்டுனு டார்ச்சர் பண்ணுறாங்க'' எனச் சொல்லி, தன்னுடைய காரிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார். இதற்கு காரணம் நடிகர் ஜெரால்டு மில்டன் என்று அவர் வெளியிட்ட லைவ் வீடியோ தமிழகத்தையே உலுக்கியது. ஆனாலும் சட்டத்தின் பிடியில் சிக்கவில்லை ஜெரால்டு மில்டன்.
திரைத்துறையில் பாண்டவர் அணியில் சேர்ந்து அதன் மூலம் திரைத்துறையிலும் பணத்தை முதலீடு செய்தார். அந்த கெத்துடன் வட்டி டார்ச்சர், கடத்தல், அடிதடி என அடாவடிகளைத் தொடர்ந்த நிலையில், புதிய வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.
ஜெரால்டு மில்டன் மீது புகார் கொடுத்த ஆறுமுகத்திடம் பேசிய போது, ""திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் எங்க ஏரியா ரயில்வே தொழிலாளியான எனக்கு உடல் நிலை சரியில்லை, பைபாஸ் சர்ஜரி பண்ண பணத் தேவை இருந்ததால் குறைந்த வட்டி என்று என்னை கூட்டிக்கொண்டு போய் அதிமுகவின் முன்னாள் கவுன் சிலரும், நடிகருமான ஜெரால்டிடம் விட்டார்கள். நான் கடந்த 2019ஆம் ஆண்டு 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். வாங்கும் போது தான் தெரிந்தது 10 ரூபாய் வட்டி, கூட்டு வட்டி, பாண்டு பத்திரத்தில் கையெ ழுத்து வாங்கினார்கள் அப்போதே எனக்கு கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது.
நான் தொடர்ந்து வட்டி கட்டி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, என்னால் வட்டி கொடுக்க முடிய வில்லை. எங்க பணிமனை யில் 160க்கு பேர் மேல் அவரிடம் வாங்கியிருக் கிறார்கள். அவர்கள் தங்கள் நிலைமையை சொன்னபோது மிரண்டு போயிட்டேன்.
பொன்மலையில் இருந்த என்னை கடந்த சனிக்கிழமை வேலையை விட்டு வெளியே வந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அசிங்கமாகத் திட்டி, டூவிலரில் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று திருச்சி தென்னூர் பகுதியில் ஜெரால்டுக்கு சொந்தமான ரியல்எஸ்டேட் அலுவலகத்தில் அடைத்து வைத்து வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணம் திருப்பித் தரணும்னு சொல்லி சரமாரியா அடிச்சாங்க. என் உடல்நிலை மோசமா இருக்குன்னு சொல்லியும் கேட்கலை. நீங்க கேட்குற பணத்தை 20ந் தேதிக்குள் தர்றேன்னு காலில் விழுந்தபிறகுதான் உசுரோட விட்டாங்க. கம்யூனிஸ்டு கட்சி துணையுடன் பொன்மலை காவல் நிலையத்தில் இன்ஸ் சகாய அன்பரசிடம் புகார் கொடுத்தேன். இப்பவும் பயத்தோடுதான் வாழுறேன்'' என்றார் பதட்டமாக.
சி.பி.எம். கட்சியின் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்தி நம்மிடம், ""இந்த பொன் மலை பணிமனையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கந்துவட்டி கொடுமையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் எல்லாம் வெளியே சொல்ல முடி யாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு தலையிட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் எங்கள் அமைப்பின் மூலம் இந்த கந்துவட்டி தொழிலில் பாதிக்கப்பட்டவர்களை திரட்டி புகார் கொடுக்க உள்ளோம்'' என்றார்.
புகாரின் பேரில் நடிகர் ஜெரால்டுமில்டன், மரியம் நகரை சேர்ந்த ஜெஸ்டின் ஜெயராஜ், பாலக்கரை விசு ஆகியோர்மீது வழக்கு பதிந்து முதல் கட்ட நடவடிக்கையாக ஜெஸ்டின் ஜெபராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்கம்போல் தலைமறை வாகியுள்ளார் ஜெரால்டு மில்டன். இது குறித்து கமி ஷனரிடம் புகார் அளித்துள் ளார் ஆறுமுகம்.
கைது செய்யப்பட்ட ஜெஸ்டின் ஜெபராஜ் சென்னையை சேர்ந்த நபர், ஜெரால்டுமில்டனிடம் பணியுரியும் கந்துவட்டி வசூல் கும்பல் பெரும்பாலும் வெளியூர் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து, இனி இந்தக் கொடூரம் நிகழாத அளவிற்கு தண்டனை தர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்களும், கந்து வட்டி கொடுமைக்குள்ளான தொழிலாளர்களும்.
-ஜெ.தாவீதுராஜ்