ருவாரம் நடைபெற்ற கண்ணகி கோவில் திருவிழா கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு இப்போது ஆறு மணிநேர திருவிழாவாக மாற்றப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு கோவிலுக்குப் போவதே நெருக்கடியாக இருக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

kannagaikovil

தேனி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லையான வண்ணாத்திப் பாறை வனப்பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று திருவிழா நடைபெறும். இருமாநிலங்களுக்கு இடையே கோவில் அமைந்திருப்பதால், இரு மாநில அதிகாரிகள் கலந்து பேசித்தான் திருவிழாவை நடத்துவார்கள்.

ஆனால், கேரள அதிகாரிகளின் அடாவடி ஆண்டுதோறும் அதிகரித்து இந்த ஆண்டு உச்சத்துக்கே சென்றுவிட்டதாக பரவலான குற்றச்சாட்டு எழுகிறது. கடந்த 30-ம் தேதி சித்ரா பௌர்ணமியன்று கண்ணகி கோவில் திருவிழாவிற்கு தேனி மாவட்ட பக்தர்களோடு சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கரூர், கோவை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்தனர்.

Advertisment

இவர்கள், கூடலூர் அருகே உள்ள பலியங்குடி வனப்பகுதி வழியாக செங்குத்தான மலைப்பகுதியில் நடந்து செல்வது வழக்கம். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அதிகாலையிலேயே வந்து மலையேறும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கினார். தமிழக பக்தர்களில் பெரும்பாலோர் குமுளி வனப்பகுதி வழியாக நடந்து சென்றனர். இது கேரளா பகுதியில் உள்ளது.

kannagi-kovil

பத்திரிகையாளர்களுக்கு ஏற்பாடு செய்த ஜீப்புகளை கேரள போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்தனர். காலை ஏழு மணிக்குள் வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றார்கள். இதையடுத்து பத்திரிகையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். பக்தர்களும் இணைந்தனர். டென்ஷன் அதிகரிக்கவே, பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி அனுமதித்தனர். சாலை வழக்கம்போலவே குண்டும் குழியுமாக இருந்தது. எங்கும் புழுதி பறந்தது.

Advertisment

கேரள பகுதியில் உள்ள மங்கல தேவியை வழிபட்டு பிறகு கண்ணகி கோவிலுக்கு வருவதுபோல கேரள அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பாதையில் சென்றாலும், தமிழக பக்தர்கள் கண்ணகியையும், சிவனையும் மட்டுமே வழிபட்டு ஓய்வெடுத்தனர். இரண்டு மாநிலத்தையும் சேர்ந்த 30 ஆயிரம் பேர் குவிந்த இடத்தில் கண்ணகி கோவில் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதைக்கூட ஆங்காங்கே உட்கார்ந்து சாப்பிட அதிகாரிகள் அனுமதி கொடுக்காமல் அடாவடி செய்தனர். கண்ணகியைத் தரிசிக்கவும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர். மாலை 5 மணிக்குள் இடத்தைக் காலி செய்யவேண்டும் என்று கெடுபிடி செய்தனர்.

""எனக்கு மொட்டையடித்து காது குத்தியது இந்த கோவிலில்தான். இப்ப எனக்கு 40 வயதாகிறது. அப்போதெல்லாம் கண்ணகியின் முழு உருவ சிலை இருந்தது. காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் சிலையின் இடுப்புக்கு மேல் பகுதி காணாமல் போனது. பாழடைந்த மண்டபம் போல் காட்சியளிக்கிறது. இந்த நிலை நீடித்தால் கண்ணகி கோவிலே காணாமல் போய்விடும். கோவிலை புதுப்பிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்''’என்றார் கூடலூரைச் சேர்ந்த மங்கலதேவி.

போடியில் இருந்து வந்திருந்த பக்தர் சுருளிராஜனிடம் கேட்டபோது... ""பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால்தான் கேரள வனத்துறையினர் கெடுபிடி செய்கிறார்கள். அதனால்தான் தமிழக பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி வருகிறோம். கூடலூர் அருகே உள்ள பலியங்குடி மேகமலை வனப்பகுதி வழியாக ஆறரை கிலோ மீட்டர் நடைபாதை உள்ளது. இதைத்தான் சாலையாக அமைக்க வேண்டும்''’என்றார்.

kannagi-kovilகுமுளியிலிருந்து கண்ணகி கோவில் வரை இருநூறு ஜீப்புகள் ட்ரிப் அடிக்கின்றன. சாலை இருக்கிற லட்சணத்தில் ஜீப்பில் உட்காரக்கூட முடியாது. அப்படி இருந்தும் கூட ஒரு ஆளுக்கு போக வர 300 ரூபாய் பிடுங்கிவிடுகிறார்கள். அப்படியும் ஒரு ஜீப்புக்கு 15 பேரை அடைத்து வைக்கிறார்கள்''’என்கிறார் மதுரையைச் சேர்ந்த கலையரசன்.

கண்ணகி கோவில் அறக்கட்டளைக் குழு பொருளாளரிடம் கேட்டபோது...

""75 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவாரம் திருவிழாவாக இருந்து வந்த கண்ணகி கோவில் திருவிழா ஐந்து நாட்கள், மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் என குறைக்கப்பட்டு 1985-க்குப் பிறகு ஒருநாள் திருவிழாவாக கேரள அரசு மாற்றிவிட்டது. கடந்த ஆண்டு 12 மணி நேரம் மட்டுமே திருவிழா நடந்தது. இந்த ஆண்டு அதையும் குறைத்து எங்களையும் டார்ச்சர் பண்ண ஆரம்பித்துவிட்டனர். நமது பகுதியில் பாதை அமைப்பதே பிரச்சனைக்கு தீர்வு''’என்றார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது... “""பலியங்குடியிலிருந்து கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்திருக்கிறது. அதுபற்றி துணை முதல்வர் ஆலோசித்து வருகிறார். விரைவில் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும்''’என்றார் உறுதியாக. ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி நேரத்திலும் இப்படி உறுதி வெளிப்படுகிறது. அப்புறம் அது தேய்பிறையாகிவிடுகிறது.

-சக்தி