தமிழகத்தில் செயல்படும் பழமையான பல்கலைக்கழகங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 160-க்கும் மேற்பட்ட உதவி, இணைப் பேராசிரியர்களும், 280-க்கும் மேற்பட்ட அலுவலர்களும், 300 தற்காலிக பணி யாளர்களும், தொலைநிலைக் கல்வியில் 300-க்கும் மேற்பட்டோரும் பணிபுரிகின்றனர். இவர்கள் தவிர, சுமார் 1,200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க சுமார் ரூ.12 கோடி தேவை. ஆனால் கடந்த 3 மாதமாக அனைவருக்கும் ஒழுங்காக சம்பளம் வழங்கமுடியாமல் ஊழியர்கள், துணைவேந்தர் அறைவாசலில் அமர்ந்து தர்ணா பண்ணுமளவுக்குப் போய்விட்டது.
என்ன நடக்கிறது என்று பேராசிரியர்களிடம் விசாரித்தோம்
"மொத்த கஜானாவையும் காலி செய்து விட்டார்கள். தற்போது இருக்கும் சூழ்நிலையில் சம்பளம் போட மட்டுமே வருடத்திற்கு 120 கோடி தேவை. கையிருப்பு இல்லாததால் பல்கலைக்கழக சொத்துக்களை விற்கும் முடிவுக்கு வந்துள்ளதாகப் பேசப்படு கிறது''’என்று அதிர்ச்சியைக் கொடுத்தனர் நம்மிடம் பேசியவர்கள்.
சிண்டிகேட்டில் முக்கிய பொறுப்பாளரான பேராசிரியர் முரளி, “"கடந்த 12 வருடங்களாக நிர்வாகத் திறனில்லாமல், தமிழக அரசுக்கு தப்பான கணக்கு வழக்குகளைக் காண்பித்து அதற்கான நிதியைப் பெறாமல், அதைச் சமாளிக்க பல்கலைக்கழக வைப்புநிதி 400 கோடியையும், ஓய்வூதியர்களின் நிதியையும் யாரின் ஒப்புதலும் பெறாமல் தான்தோன்றித்தனமாக எடுத்துச் செலவிட்டு கஜானவை காலிசெய்துவிட்டனர்.
ஒன்றிய அரசும் தன் பங்குக்கு ஆளுநரை வைத்துக்கொண்டு தமிழக பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் தேர்தலை நடத்தவிடாமல் அவர்களது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போதைய நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் இழுத்து மூடப்படும் அபாயத்தில் உள்ளது''’என்றார் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசனோ, "நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ஏற்கெனவே 136 ஒப்பந்தப் பணியாளர் களை வெளியேற்றிவிட்டனர். ஆனாலும், போதிய நிதிவருவாயின்றி ஒவ்வொரு மாதமும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாத சூழலில் சிக்கித்தவிக்கிறது. பல்கலைக்கழகத்திற் கான வருவாயைப் பெருக்க, துணைவேந்தர் ஜெ.குமார் சில நடவடிக்கை எடுத்தாலும், அது கைகொடுக்கவில்லை. இந்த பிரச்சனையே 2012-ல் கல்யாணி மதிவாணன் இருந்தபோது தான் ஆரம்பமானது. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக பட்ஜெட் போட்டு அதை முறையாக தணிக்கை செய்து அரசுக்கு அனுப்பு வார். ஆனால் முறைப்படி பட்ஜெட் கூட்டம் போடாமல் தன்னிச்சையாக அரசுக்கு அனுப்பி யதில் சில குறைபாடுகள் இருந்ததால் அரசு விளக்கம்கேட்டு ஓலையனுப்ப, அதற்கு சரியான விளக்கம் கொடுக்காததால், அரசு சில தொகையை பிடித்தம் செய்துகொண்டு கொடுக்க, இங்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதைச் சமாளிக்க பல்கலைக்கழக கார்பஸ் நிதியிலிருந்த 400 கோடியை எடுத்து சம்பளமும் ஓய்வூதியமும் வழங்கப்பட்டிருக்கிறது.
2004-ஆம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்த பேராசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பிடித்தம் செய்யப்படும் நிதியையும் எடுத்துச் செலவழித்துள்ளது தற்போது அம்பலமாகியிருக்கிறது'' என்றார்.
காமராசர் பல்கலைகழக துணைவேந்தர் குமாரிடம் நமது சந்தேகங்களை எழுப்பினோம். அவர் நம்மிடம், "ஏற்கனவே கடந்த காலங்களில் இருந்த நிர்வாகத்தினர் பல்கலைக்கழக கார்பஸ் நிதியை எடுத்து சம்பளம் மற்றும் இதர செலவினங்களை செய்தது உண்மைதான். தற்போதைய ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் கூடிய விரைவில் போட்டுவிடுவோம். சிண்டி கேட் தேர்தல் ஏன் நடத்தவில்லை என்று தெரிய வில்லை. தற்போது அதற்கான முயற்சி எடுக்கப் பட்டுவருகிறது. பல்கலைக் கழக சொத்தை விற்கும் அதி காரம் நிர்வாகத்திற்கு இல்லை. பல்கலைக் கழக நிலைமையைச் சரிக்கட்ட, வரும் கல்வியாண்டில் 6 புதிய கல்வித் திட்டத்தை கொண்டு வருகிறோம். நிதி நிலைமையைச் சரிசெய்ய அரசின் உதவியைக் கேட்டிருக்கிறோம்'' என்று முடித்துக்கொண்டார்.
காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து உயர்கல்வி நிலையங்களும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இதைச் சரிசெய்ய பல்கலைக்கழகங்களை தமிழக அரசே முழுவதுமாக எடுத்து நடத்த முன்வரவேண்டும்''’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.
___________
இறுதிச் சுற்று!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டிசம்பர் 5, திங்களன்று அ.தி.மு.க.வினர் பல்வேறு அணிகளாகச் சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவாளர்களுடன் காலை 10 மணியளவில் பேரணியாகச் சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் தலைமை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செய லாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் திரளாகக் கலந்துகொண்டனர். காலை 10:30 மணியளவில், ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார். காலை 11 மணியளவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், 11.30 மணியளவில் சசிகலாவும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினர்.