""ஹலோ தலைவரே, அமெரிக்காவுக்கு ரஜினி திடீர் பயணம்னு நியூஸ் ஓடியதைப் பார்த்தீங்களா?''’

""பார்த்தேம்ப்பா... ரஜினி இமயமலைப் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்திலேயே, அவர் திரும்பிவந்ததும் ஹெல்த் செக்கப்புக்காக அமெரிக்கா போகப் போறார்ன்னு நாம் பேசிக்கிட்டோமே, அதுதானே இப்ப நடந்திருக்கு. அவரது பயணப் பரபரப்புக்கு மத்தியிலும் அவரை ஆடிட்டர் குருமூர்த்தி சந்திச்சிருக்காரே?''’

rajini-modi

""நாம் பேசிக்கிட்ட மாதிரியே ரஜினி தன்னோட ஹெல்த் செக்கப்புக்காக 23-ந் தேதி இரவு, தன் மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்கா கிளம்பினார். அன்னைக்குக் காலையில ரஜினியை அவரது போயஸ்கார்டன் வீட்டில், டெல்லி பா.ஜ.க. கொடுத்த அசைன்மெண்ட்படி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திச்சார். அப்ப அவர் ரஜினியிடம், "அரசியல் கட்சி தொடங்கும் விசயத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு தயங்கறீங்க? அறிவிச்ச மாதிரியே தொடங்கிட வேண்டியதுதானே? கர்நாடக தேர்தலுக்குப் பின், தமிழக அரசியல்ல, மோடி ஒரு அதிரடியில் இறங்கப்போறார். அதுக்கு முன்னாடி, நீங்க உங்க அரசியல் கட்சியைத் தொடங்கி, விறுவிறுப்பா இயங்கணும்ங்கிறது மோடியோட விருப்பம். உங்களுடன்தான் தேர்தல் கூட்டணிங்கிற எண்ணமும் மோடிஜிக்கு இருக்கு'ன்னு விரிவாவே சொல்லியிருக்கார் ஆடிட்டர். ரஜினியோ, பல்வேறு மதத்திலும் இருக்கும் தன் ரசிகர்களை மனதில் வச்சிக்கிட்டு, "நான் அமெரிக்கா போய்ட்டு வந்து, இதுதொடர்பா பேசறேன்'னு ஆடிட்டர் குருமூர்த்தியின் பிடியில் சிக்காமல், அவரை வழியனுப்பி வச்சிட்டார்.''’

Advertisment

""கமல் பக்கமும் மத்திய பா.ஜ.க. அரசின் பார்வை திரும்பியிருக்கு போலிருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, மாதிரி கிராம சபைக் கூட்டத்தை நடத்தி, கிராமங்களை மாநகர லெவலுக்குக் கொண்டுவர நினைக்கும் கமலை, டெல்லி பா.ஜ.க. கவனிச்சிக் கிட்டுத்தான் இருக்கு. அவரை தங்கள் பக்கம் இழுக்க முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்ட பா.ஜ.க., அவரை திணறவைக்கும் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கு. கமலைப் பொறுத்தவரை, சினிமாவில் பெருத்த தொழில் நஷ்டத்தில் இருப்பவர். அவரோட சபாஷ் நாயுடுவும் விஸ்வரூபம் 2-ம், ரெண்டு வருடமா முடங்கிக் கிடக்கு. இந்த நிலையில் அவர் எப்படி கட்சியை நடத்துறார்னு, வருமான வரித்துறை மூலம் மத்திய பா.ஜ.க. அரசு கண்காணிச்சிக்கிட்டு இருக்கு. கட்சி தொடங்கிய கமலுக்கு அவரது வெளிநாட்டு, வெளிமாநில நண்பர்கள் நிறைய நிதி உதவிகளைச் செய்யறாங்க. இது பத்தியும் இதை மத்திய அரசு கண்காணிப்பது பத்தியும் ஏற்கனவே "நக்கீரன்' எழுதியிருக்கு. இந்த நிலையில், கட்சி நடத்த அவருக்குத் தரப்பட்ட ஃபாரின் நிதியை, அவர் தன் தொழில் நஷ்டத்தைச் சரிக்கட்டப் பயன்படுத்துகிறாரா? என்கிற கோணத்திலும் மோடி தரப்பு, இன்கம் டாக்ஸ் டீம்கள் மூலம் கண்காணிக்க ஆரம்பிச்சிருக்கு.''’

kamal

Advertisment

""இந்த நேரத்தில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கியா இந்திய அரசியலில் செயல்படும் தருணம் வந்துடுச்சுன்னு, ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ பத்திரிகையில் கட்டுரை வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கே?''’

""அந்த பத்திரிகையை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் சந்திரசேகர்தான் பார்த்துக்கறார். அந்தக் கட்டுரையைப் பார்த்து அதன் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் மருது அழகுராஜ் தயக்கம் காட்ட, பரவால்ல ஓகே பண்ணுங்கன்னு அமைச்சர்தான் சொல்லியிருக்கார். அதன்பிறகுதான் அந்தக் கட்டுரை அந்தப் பத்திரிகையில் அச்சாகியிருக்கு. இதைப் படித்த எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், இப்படி பப்ளிக்காவா இதை எழுதறதுன்னு கோபப்பட, அதன்பின் 2 துணை ஆசிரியர்களே அந்தக் கட்டுரைக்குக் காரணமானவர்கள்ன்னு சொல்லி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.க.வுக்கு மறைமுக சேவகம் செஞ்சாலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் மீது ஒட்டுமொத்த தமிழக மக்களும் கொதிப்பில் இருக்கும் போது, இப்படியொரு கட்டுரை வருவதை எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் விரும்பவில்லையாம்.''’

""அதே சமயம் மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பாதுகாப்புச் சுவரா, அ.தி.மு.க. எம்.பி.க்களை எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் நிறுத்தறாங்களே.''’

""உண்மைதாங்க தலைவரே, காவிரிக்காக இங்க இருக்கும் அத்தனை கட்சிகளும் தெருவில் இறங்கிப் போராடும் போது, கெடு தேதி முடியும்வரை காத்திருப்போம்னு அ.தி.மு.க. சொல்லுது. ஆனா, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கொண்டுவர இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற விடாமச் செய்ய, மோடி ஏற்பாட்டில், நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை முன்னிலையில், அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளிதுமளியை நடத்தினாங்க. இந்த அ.தி.மு.க. எம்.பி.க்களை தம்பிதுரை, தன் கண்ட்ரோல்ல வச்சிருப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அவங்க, எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவனின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டவங்களாத்தான் இருக்காங்க. அவர்தான் அ.தி.மு.க. எம்.பி.க்களை தன் கண்ட்ரோல்ல வச்சிக்கிட்டு எடப்பாடி சார்பில் இயக்கிக்கிட்டிருக்காராம்.''’

""தமிழ்நாட்டில் காவிரி உரிமைக்கான போராட்டம் இன்னும் வீரியம் குறையாமல் நடக்குதே?''’

stalin

""ஆமாங்க தலைவரே, பொதுமக்களும் விவசாயிகளும் தமிழக அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி, உண்ணாவிரதம், கறுப்புக்கொடி, சாலை மறியல், ரயில் மறியல், நடைபயணம், கடையடைப்புன்னு பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், தி.மு.க. உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் இணைந்து 23-ந் தேதி தமிழகம் தழுவிய அளவில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தியிருக்கு. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் புதுக்கோட்டையில் பங்கேற்க, தி.க. வீரமணி, சி.பி.எம்., பாலகிருஷ்ணன், கனிமொழி ஆகியோர் சென்னையில் கலந்துக்கிட்டாங்க. தஞ்சையில் வைகோவும், திருவாரூரில் சி.பி.ஐ. முத்தரசனும், கிருஷ்ணகிரியில் சிறுத்தைகள் திருமாவும் இந்த மனிதச் சங்கிலி அறப்போரில் பங்கேற்றாங்க.''’

""காவிரி தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மே 3-ந் தேதி வர இருக்கும் நிலையில், தமிழக அரசு இது தொடர்பா என்னதான் செய்யப்போகுது?''’

""மே 2-ந் தேதி டெல்லிக்குப் போகும் திட்டத்தில் இருக்காராம் முதல்வர் எடப்பாடி. ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டத்தின் போது, அப்போதைய முதல்வரான ஓ.பி.எஸ். டெல்லியில் தங்கி, ஜனாதிபதியிடம் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் வாங்கிவந்த மாதிரி, காவிரிக்காக டெல்லியில் எதையாவது செய்யமுடியுமான்னு எடப்பாடி பார்க்கப் போகிறாராம். அதோடு, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினிடம் கவர்னர் கொடுத்த வாக்குறுதிப்படி, பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் கிடைக்குமானால், தன் தலைமையில்தான் அவர்கள் பிரதமரை சந்திக்கவேண்டும் என்ற கோரிக்கையை, மோடி தரப்பிடம் வலியுறுத்தவும் இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக்க நினைக்கிறாராம் எடப்பாடி. ஆனால் எந்தப் பச்சை விளக்கும் இதுவரை அவர் கண்களுக்குத் தெரியவில்லை.''’

""பா.ஜ.க.வின் பார்வை முழுக்க கர்நாடகத் தேர்தலிலேயே மையம் கொண்டிருக்குதே.''’

""உண்மைதாங்க தலைவரே, கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியை அமைத்தே தீரணும் என்பதில் தீவிரமா இருக்காரு பிரதமர் மோடி. அங்கிருக்கும் 30 மாவட்டங்களிலும் மோடி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதேபோல் கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரசை எப்படியெல்லாம் டேமேஜ் பண்ணலாம்ன்னு பா.ஜ.க. வியூகம் வகுத்து செயல்படுது. அங்கிருக்கும் பொ.ப.து. அமைச்சர் மகாதேவப்பா மூலம்தான் வாக்காளர்களுக்கு அதிகமாய் கரன்ஸி விநியோகம் பாயும்ன்னு கணக்குப் போட்டு, அவர் வீட்டிலும் அதிரடி ரெய்டை நடத்த வச்சிருக்கு பா.ஜ.க. அதேபோல் லிங்காயத்தைத் தனி மதமா அங்கீகரிச்சி, அந்த சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமா, அதிலே ஒரு பிரிவினரான வீர சைவத்தைச் சேர்ந்த 2 சாமியார்களுக்கும் கர்நாடக பா.ஜ.க. சீட் கொடுத்திருக்கு.''’

""பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை வலுப்படுத்தும் புதிய முடிவை சி.பி.எம்.மின் அகில இந்தியத் தலைமை எடுத்திருக்கே?''’

sitaram""உண்மைதாங்க தலைவரே, ஹைதராபாத்தில் நடந்த சி.பி.எம்., மாநாட்டில், கட்சியின் பொதுச் செயலாளரா இரண்டாவது முறையாக சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர், பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு அணியை உருவாக்கணும்ன்னு கருதுகிறவர். ஆனால் கட்சியின் சீனியரான பிரகாஷ் காரத்தோ, பா.ஜ.க.வும் காங்கிரஸும் இல்லாத புதிய அணியே தேவைன்னு வலியுறுத்தி வந்தார். இதைக் கட்சியின் தீர்மான வரைவாகவும் அவர் கொண்டுவந்தார். இந்த நிலையில் சி.பி.எம்., திரிபுராவில் தனது ஆட்சியைப் பா.ஜ.க.விடம் இழந்த நிலையில், கட்சியில் யெச்சூரியின் கருத்துக்கு ஆதரவு திரண்டது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழலுக்கு ஏற்ப, காங்கிரஸோடும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கு.''’

""உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரணும்ன்னு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீஸை, போனமுறை நாம பேசியபடியே ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு தள்ளுபடி பண்ணியிருக்காரே?''’

""ஆமாங்க தலைவரே, துணை ஜனாதிபதி இந்த நோட்டீஸைத் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலேயே இது குறித்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் ரெடியாயிடிச்சி. இது தொடர்பாகக் கருத்து தெரிவிச்சிருக்கும் காங்கிரஸ் சீனியர் கபில்சிபல், துணை ஜனாதிபதி வெங்கையா எங்கள் நோட்டீஸைத் தள்ளுபடி செய்யறதுக்கு முன், கொலீஜியத்திடம் கருத்து கேட்டிருக்கணும். இருந்தாலும் விவகாரத்தை விடப்போறதில்லை. இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டிலேயே மேல் முறையீடு செய்வோம். அப்போது அதில் தலைமை நீதிபதி மிஸ்ரா தலையிடக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.''’

""கோட்டையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் சலசலப்பு கேட்குதே?''’

""ஆமாங்க தலைவரே, சென்னை மெட்ரோ வாட்டர் எம்.டி.யா இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சத்யபிரதா சாகு, அண்மையில்தான் தமிழக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதனால் அவர் தானாகவே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டுவிட்டார். அப்படி இருக்க, கடந்த 20-ந் தேதி, தேர்தல் அதிகாரியாக இருக்கும் அவரையே மீண்டும் சென்னை மெட்ரோ வாட்டர் எம்.டி. பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்துக் கொள்ளும்படி பணி கொடுத்திருக்கிறது எடப்பாடி அரசு. மத்திய அரசின் கண்ட்ரோலுக்கு போய்விட்ட அவருக்கு, மாநில அரசு எப்படி இப்படி ஒரு பொறுப்பை கொடுத்தது? என்று கேள்வி எழுப்பும் கோட்டை அதிகாரிகள், இதை மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டுபோயிருக்கிறார்கள்.''’

""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். சென்னை- திருமங்கலம் ஏ.சி. கமீல் பாட்சா அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர், பணத்தைக் கைப்பற்றியது குறித்தும், அப்போது அவரது லஞ்ச டைரியில் அவர் தனது மேலதிகாரிகளுக்குப் பங்கு கொடுத்த விவரம் பற்றிய டைரி சிக்கியதையும் நக்கீரன்தான் சொன்னது. அந்த கமீல் பாட்சா, பட்டம் பெறாமலே பட்டம் பெற்றதாக போலி ஆவணம் மூலம் எஸ்.ஐ.யாய் பணியைத் தொடங்கியவராம். அதோடு 2015-ல் அவர் உயர்நீதிமன்ற ஏ.சி.யாக இருந்தபோது, ஒரு பெண் காவலரோடு ஏடாகூடமாகப் பேசிய செல்போன் பேச்சு லீக்காக, அது தொடர்பான சர்ச்சையிலும் சிக்கியவர்தான் இந்த கமீல் என சக காக்கிகளே, தகவல்களைக் கொட்டுகிறார்கள்.''’

------------------------------------

இறுதிச்சுற்று!

கேப்டன் பாய்ச்சல்!

பத்து நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டம் சீர்காழிக்கு குடும்பத்தினருடன் வந்தார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இங்குள்ள ஓசைநாயகி அம்மன் கோவிலுக்குச் சென்று, தனக்கு நன்றாக பேச்சுவர வேண்டும் என மனமுருக பிரார்த்தனை செய்து, தேன் பிரசாதமும் சாப்பிட்டார். இப்போது தன் பேச்சாற்றலை, மு.க.ஸ்டாலின் மீது, ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் வழியாக பாய்ச்சல் காட்டியிருக்கிறார்.

2006 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, விஜயகாந்துடன் கூட்டணி குறித்து தி.மு.க.தலைவர் கலைஞர் கூறும்போது, “""பழம் நழுவி பாலில் விழும்'' என்றார். அதன்பின் என்னென்னமோ நடந்து தேர்தல் முடிவுகளும் வேறு மாதிரி அமைந்து, தே.மு.தி.க.வும் படுதோல்வியைத் தழுவியது. விஜயகாந்த்தை தி.மு.க. தன் பக்கம் வைத்திருந்திருந்தால் முடிவே வேறு மாதிரி அமைந்து தி.மு.க. ஆட்சி அமைத்திருக்கும் என்ற பேச்சும் பரவலாக ஓடியது.

இப்போது அதுபற்றி வாய்திறந்திருக்கும் விஜயகாந்தோ, ""60 சீட்டும் ஆட்சியில் பங்கும் கேட்டேன், ஸ்டாலின்தான் அதற்கு ஒத்துக்கல. எனக்கு ஸ்டாலினை எப்போதுமே பிடிக்காது'' என சொல்லியிருப்பதுடன், உடல்நலம் குறைந்துள்ள கலைஞரை சந்திக்க அனுமதி கேட்டபோது மு.க.ஸ்டாலின் தரப்பு மறுத்துவிட்டது எனக் குற்றம்சாட்டி, ஸ்டாலினின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் விமர்சித்துள்ளார். ""2006-ல் ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரசின் கோரிக்கையையே ஏத்துக்காதவர் கலைஞர். இப்ப விஜயகாந்த் சொல்ற மாதிரி, அவருக்கு 60 சீட் கொடுத்து ஆட்சியில் பங்கு என்றால் ஏற்றுக் கொள்வாரா? கலைஞர் சற்று தொய்வடைந்திருப்பதாலும் அரசியல் குட்டையைக் குழப்பவும் ஏதேதோ பேசுகிறார் விஜயகாந்த்'' என்கிறது அறிவாலயம்.

-கீரன்

divakaranதிவாகரன் பதிலடி!

டி.டி.வி. தினகரன் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருவாரூரில் மீடியாக்களிடம் பேசினார் திவாகரன், ""தினகரன் அவரோட சொந்தக்காரங்களுக்காக கட்சி ஆரம்பிச்சிருக்காரு. அந்தக் கட்சியில திராவிடம் எங்கே இருக்கு? இனிமேல் தினகரனுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. நாங்கள் அம்மா அணி. தேவைப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவோம்'' என போட்டுத் தாக்கியுள்ளார்.

-பகத்