விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள் படிப்பதற்கான சூழலற்று உள்ளதால், மாணவர்கள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் களத்தில் இறங்கினோம்.

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி யில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் இல்லாததால், வெளியே சாலையோரத்தில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். விளையாட்டு மைதானமோ, ஆய்வக வசதியோ இல்லாத காரணத்தால், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களைக் கட்டி பள்ளியை விரிவாக்கம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வெறும் கோரிக்கை அளவிலேயே இருக்கிறது.

இன்னொரு அரசு மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம் வட்டம், சொக்கநாதன்புத்தூரில் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் நம்மிடம், "சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளில இருந்து 100 மீட்டர் தூரத்துல இருக்கு மேலமலை. இங்கே கல்குவாரி நடத்துறாரு கிருஷ்ணராஜ். ஸ்கூலுக்குள்ள கற்கள் வந்து விழுது. அதனால.. ஆசிரியர், மாணவர்களுக்கு மட்டுமில்ல. பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்ல. கல்குவாரி யை தடை பண்ணனும்னு பத்து, இருபது பேரு உண்ணாவிரதம் இருந்தோம். அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கல''’என்றார்.

kk

Advertisment

சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சிலரை சந்தித்தோம். பள்ளி வளாகத்துக்குள் விழுந்த கற்கள் சிலவற்றை நம்மிடம் காண்பித்துவிட்டு, "கலெக்டர்ல இருந்து சி.இ.ஓ. வரைக்கும் மனு அனுப்பினோம். 900 மாணவர்கள் படிக்கிறாங்க. படிப்புக்கு வேட்டு வைக்கிற கல்குவாரி விதிமீறலை அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டேங்கிறாங்க. மாலை நேர சிறப்பு வகுப்புல படிக்கிற மாணவர்கள், எந்த நேரத்துல தலைமீது கல் விழுமோன்னு பயந்து கிட்டே படிக்கிறாங்க''’என்றனர் வேதனையோடு.

சீதாராமன் நம்மிடம், “"இந்த கல்குவாரி மாரிக்கனி உயிரை பறிச்சிருச்சு. அந்த குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் கொடுத்து செட்டில் பண்ணி முடிச்சிட்டாங்க. கல்குவாரில இருந்து செங்கல்சூளைல 15 கிலோ கல் தெறிச்சு விழுந்துச்சு. இப்படி ஏதாச்சும் ஒண்ணு நடந்துக்கிட்டே இருக்கு. திரும்பவும் சொக்கநாதன்புத்தூர் கல்குவாரிய லீஸுக்கு விடப்போறாங்க. ஆனா.. இங்கே யாருக்கும் தெரியாம.. சேத்தூர்ல போலியான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திருக்காங்க. இதனால அரசாங்கத்துக்கு கெட்ட பெயர்''” என்றார்.

விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் குவாரி குத்தகைதாரருமான கிருஷ்ணராஜுவிடம் பேசினோம். "இது ஏற்கெனவே அஞ்சு வருஷ லீஸ்ல ஓடுன குவாரிதான். நாலு மாசத்துல லீஸ் முடிஞ்சிரும். ஸ்கூல் பெட்டிஷன் விஷயம் எல்லாம் ஆரம்பத்துலயே வந்துச்சு. கலெக்டர் வந்து பார்த்து.. ஷீட் ஒண்ண முன்னால வைக்கணும்னு சொல்லி.. அத பண்ணிட்டோம். ஒரு வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி பிரச்சினை வந்தப்ப.. தாசில்தார் ராமச்சந்திரன் வந்து ஸ்கூல்ல இருந்துட்டே எங்கள பிளாஸ்டிங் பண்ணச் சொல்லி.. செக் பண்ணிட்டு போனாரு. சீதாராமன் எல்லாத்துக்கும் பெட்டிஷன் போடுவாரு. பின்னால இருந்து தூண்டிவிடுவாரு. என்னோட பிரதர் ராஜசிம்மன்கிட்ட பணம் கேட்டிருக்காங்க. அவரு கொடுக்கல. அதான்.. இந்த வேலை எல்லாம் பார்க்கிறாங்க''’என்றார்.

Advertisment

ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரனை தொடர்புகொண்டோம். “"ரூல்ஸ்படி 300 மீட்டர் பாதுகாப்பு இடைவெளில கல்குவாரி இருக்கணும். அந்த ஸ்கூலுக்கும் கல்குவாரிக்கும் இடையே கிட்டத்தட்ட 550 மீட்டர் இடைவெளி இருக்கு. இதை மூணு தடவை போயி அளந்து காமிச்சிட்டோம். ஸ்கூல் பில்டிங் கிராக் ஆனதா சொன்னாங்க. சிவஞானம் சார் கலெக்டரா இருந்தப்ப ஸ்கூலுக்கே போய் பார்த்தோம். அப்படி எதுவும் இல்ல. ரூல்ஸ்படி இல்லைன்னா.. இந்த பொல்யூஷன் கண்ட் ரோல்.. மைன்ஸ் டிபார்ட்மென்ட் கல்குவாரி நடத்தவிடுவாங்களா? இந்த கிராமத்துல ஒவ்வொருத்தரா பெட்டிஷன் போடுவாங்க. ரெண்டு மாசம் கழிச்சு அவங்களே வந்து வாபஸ் வாங்கிருவாங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இதே ஏரியாவுல ஏ.கே.ஆர். கல்குவாரி இருக்கு. அங்கபோயி யாரும் பிரச்சனை பண்ணுறது இல்ல. கருத்துக் கேட்புக் கூட்டத்த சேத்தூர்ல பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டு நடத்துனதுல நியாயம் இல்ல. என்னதான் தடுத்தாலும் கல்குவாரி தூசி ஸ்கூலுக்குள்ள வரத்தான் செய்யுது. சீதாராமன் கல்குவாரிக்கு எதிரான விஷயத்துல தீவிரமா இருக்காரு. அவரு தி.மு.க.காரர். கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சிக்காரங்கள கூட்டிட்டு வந்தாரு. அவரு நியாயமான தம்பிதான். இந்த விஷயத்துல உள் நோக்கத்தோடு செயல்படறாரா, இல்லையான்னு தெரியல''’என்றார்.

அந்தப் பள்ளிக்கு எதிரில் டீக்கடை நடத்தும் கருப்பழகு, "இங்கே உள்ளூர்ல சமூக ஆர்வலர்கள் நெறயபேர் இருக்காங்க. அவங்க வேலையே கிருஷ்ணராஜ்கிட்ட அடிக்கடி பணம் வாங்குறது தான். தப்பு நடந்தா தட்டிக் கேட்கணும்கிற ஒற்றுமை ஊர்க்காரங்ககிட்ட இல்ல''” என்றார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனும், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமனும், நமது லைனுக்கு வராமல் தொடர்ந்து தவிர்த்து வந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளியிடம் பேசினோம். “"நீங்க சொல்லுற ஸ்கூல்ஸ் பத்தி நாலு லைன் வாட்ஸ்-ஆப்ல அனுப்புங்க. நான் செகரட்டரிக்கு பார்வேர்டு பண்ணிடறேன். அடுத்த வாரம் கலெக்டர் கான்பரன்ஸ் நடக்குது. அப்ப விருதுநகர் மாவட்ட கலெக்டர்கிட்ட செக்ரட்டரிய பேச சொல்லிருவோம்''’என்று கூற... விபரங்களை அனுப்பினோம்.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கல்குவாரிகள் குறித்து புகார்கள் எழும்பி அடங்குவதெல்லாம் மாமூலாக நடக்கின்றன.