Tackle put up by DMK!

கள்ளச்சாராய மரணத்தால் சோகம், வேதனை, துயரம், பதட்டம், பரிதவிப்பு, பயம் என பல்வேறு உணர்வுகளைத் தாங்கிநிற்கிறது கள்ளக் குறிச்சி.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசின் கடமையை தடையின்றி செய்துவரும் முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராயம் என்கிற சமூகவிரோத குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துவந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் களையெடுத்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், கள்ளச்சாராய மரணம் தமிழக சட்டமன்றத்தில் கடுமையான அமளி துமளிகளை ஏற்படுத்தியது. தி.மு.க. ஆட்சியின் மீது குற்றம் காணமுடியாத சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவம் அ.தி.மு.க.வுக்கு அல்வா கிடைத்தது போலாகிவிட்டது.

சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகளையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தர்ணா, முதல்வர் பதவியை ராஜினாமா செய் என்கிற முழக்கம், பேரவைக்கு வெளியே போராட்டம் என சட்டமன்றத்தின் மாண்புகளுக்கு எதிரான நடவடிக்கையில் குதித்தனர் அ.தி.மு.க.வினர்.

Advertisment

மரபுகளை மீறியும், பேரவை விதிகளை மதிக்காமலும் நடந்துகொண்ட எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபையில் இருந்து வெளியேற்றினார் சபாநாயகர் அப்பாவு. அவையில் அவர்கள் ஒருநாள் கலந்துகொள்ள தடையும் விதிக்கப்பட்டது. பேரவைக்கு வெளியே பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, "கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி பேச எங்களுக்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை' என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, "எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். கேள்வி நேரத்தில் அவர்கள் பிரச்சனைகளை எழுப்பினர். இப்படி எழுப்ப விதிகளில் இடமில்லை. கேள்வி நேரம் முடிந்ததும் வாய்ப்புத்தருவதாக சபாநாயகர் சொன்னபோதும் அதை ஏற்காமல், சபாநாயகரை கேரோ செய்தனர்.

உள்ளே பேசும் வாய்ப்பை விட்டுவிட்டு வெளியே சென்று பேசுகிறார்கள். அவைக்குள் வந்து பேசுங்கள் என முதல்வர் வேண்டுகோள் வைத்தும் அவர்கள் வரவில்லை. அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார்கள்'' என்று அ.தி.மு.க.வின் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோல, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷச்சாராய முறிவுக்கான மருந்து தட்டுப்பாடுள்ளது என்று பேரவைக்கு வெளியே நின்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த குற்றச்சாட்டு பொது வெளியில் பதட்டத்தை ஏற்படுத்த, இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’ஓமிபுரோசல்' (Omeprazole) மருந்து இல்லை என 20-ந் தேதி சொன்ன எடப்பாடிக்கு, ஓமிபுரோசல் மருந்து 4.42 கோடி கையிருப்பில் உள்ளது என பதில் தந்தேன்.

உடனே, இரண்டு நாள் கழித்து (22-ந் தேதி) ஃபோமிபிசோல் (Fomepizole) மருந்து இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி. ஆனால், ஃபோமிபிசோல் இன்ஜெக்சன் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. மேலும், நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள், மூக்கு வழி பிராணவாயு செலுத்துதல், பேண்டோபிரசோல் ஊசி, ஹிமோடையாலிசிஸ், சோடா பை கார்பனேட் ஊசி, செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைகள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிச்சாமி, வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுப்பிடித்து சொன்னாலும், அது சரியாக இருந்தால், அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்'' என்று பதிலடித் தந்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

எடப்பாடி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் தந்த பதிலடி இப்படியிருக்க, பா.ம.க. வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரின் கொந்தளிப்பும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, "கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அறிவிக்கப்படாத முதல்வராகவே செயல்பட்டு வந்த வசந்தம் கார்த்திக்கேயனும், உதயசூரியனும்தான் கள்ளச்சாராய வணிகர்களின் பாதுகாவலர்கள்' என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றம்சாட்டினார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். டாக்டர் அன்புமணி ராமதாசும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலடித்தரும் வகையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், "எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை நிருபித்தால் பொதுவாழ்விலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம். நிரூபிக்கத் தவறினால் அவர்கள் அரசியலிலிருந்து விலகுவார்களா?'' என்று சவால் விடுத்துள்ளனர். மேலும், ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். பொய் குற்றச்சாட்டு கூறிய அவர்கள், முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆதாரங்களைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறது பா.ம.க.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் தனது வருத்தத்தையும் துயரத்தையும் பகிர்ந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், "மக்களைப் பாதுகாக்க எந்தவிதமான கடும் நடவடிக்கையையும் எடுப்பேன்'' என்றிருக்கிறார். கள்ளச்சாராய பலிகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை இந்தவாரம் தாக்கல் செய்யப்பட விருக்கிறது. அதன் பரிந்துரைகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயாராகிவரும் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து, உங்களுக்கு நான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கையை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களை வெற்றிபெற்ற தி.மு.க.வின் மக்கள் செல்வாக்கை பாரீர் என அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் சவுக்கடி கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்திருந்த நிலையில்... அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை காப்பாற்றிவிட்டது கள்ளக்குறிச்சி மரணங்கள்!