தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீது ரகசிய விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த விவகாரத்தில், சோனியாகாந்தியின் மருமகனும் பிரியங்காகாந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு தொடர்பிருக்கிறதா? என்கிற கோணத்திலும் விசாரிக்கத் திட்டமிடுவதாக தகவல்கள் கசிகின்றன.
காங்கிரசின் 20,000 கோடி சொத்து!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்காக அக்கட்சியின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை 1956-ல் உருவாக்கினார் பெருந்தலைவர் காமராஜர்.
சென்னையிலுள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்யமூர்த்தி பவன் வளாகம், தேனாம்பேட்டையி லுள்ள காமராஜர் அரங்கம் அமைந்துள்ள நிலம், அதனையொட்டியுள்ள மைதானம் உட்பட நிறைய சொத்துக்கள் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமானவை. அந்த வகையில், இந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு சுமார் 20,000 கோடி.
இந்தச் சொத்துக்களை நிர்வகிக் கவும், சொத்துக்கள் மூலம் கிடைக் கும் வருவாயில் கல்வி உள்ளிட்ட சமூகப் பணிகளுக்கு செலவிடவும் உருவாக்கப்பட்டதுதான் அறக் கட்டளை. ஆனால் இந்த சொத்துக்களின் வருவாயில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருகின்றன.
சொத்துக்களை கபளீகரம் செய்ய சோனியா முயற்சி?
அறக்கட்டளையின் சட்ட விதிகளின்படி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அறக்கட்டளையின் தலைவராக வந்துவிடுவார். உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பர். ஆனால், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மோதிலால் வோரா, அறக்கட்டளை யின் ட்ரஸ்டியாக கடந்த 2020-ல் இணைக்கப்படுகிறார். சோனியா- ராகுலின் உத்தரவின்படியே வோரா இணைக்கப்பட்டதாக அப்போதே சர்ச்சை எழுந்தது. அறக்கட்டளையின் 20,000 கோடி சொத்துக்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதனை மறைமுகமாக கபளீகரம் செய்ய சோனியா முயற்சித்தார் என்றும், இதற்காக, ட்ரஸ்ட் உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்து கையெழுத்துக்கள் பெறப்பட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்தன. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அப்படியே கைவிடப்பட்டது.
சொத்து வருவாயில் முறைகேடுகள்!
அறக்கட்டளைக்கு சொந்தமாகக் காலி நிலங்களும், வணிக கட்டடங்களும் தமிழகம் முழுவதும் இருக்கின்றன. வணிகக் கட்டடங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு வருவாய் ஈட்டுகிறது காங்கிரஸ். இந்த வருமானத்தை சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும் என்பது தான் அறக்கட்டளையின் சட்டவிதி. ஆனால் இதில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. வணிக நிறுவனங்கள் கொடுக்கும் வாடகைத் தொகை முழுவதும் அறக்கட்டளைக்கு வருவதில்லை. வாடகைத் தொகை, குத்தகைத் தொகை கொடுக்காமல் ஏமாற்றுபவர்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இருப்பதுதான் இந்த விவகாரத்தில் அதிர்ச்சி!
தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட 1,000 கோடி சொத்து!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.சுப்பிரமணியம், அறக்கட்டளையின் தலைவராக 1996-ல் இருந்தார். தேனாம்பேட்டையில் மட்டும் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக 201 கிரவுண்ட் நிலம் இருக்கிறது. இதில் 20 கிரவுண்ட் நிலத்தில் காமராஜர் அரங்கம் கட்டப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 181 கிரவுண்ட் காங்கிரஸ் மைதானத்தில், பயன்படுத்தப்படாமல் இருக்கும் 100 கிரவுண்ட் நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் காங்கிரஸுக்கு வருமானத்தை ஈட்டலாம் என சி.சுப்பிரமணியத்தின் மகன் ராஜசேகர் மூலமாக ரியல் எஸ்டேட் பிசினெஸில் உள்ள சில மார்வாடிகள் சி.சுப்பிரமணியத்தை அணுகுகின்றனர். இதனை யடுத்து அறக்கட்டளை மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் ஒரு அடுக்குமாடி வணிக வளாகம் (மால்) கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சென்னையை சேர்ந்த பசந்த்குமார் ரங்காவின் என்பவரின் ஸ்கைஹை பில்டர்ஸ், கோபி சந்த்தின் ஹீராலால் கண்ஸ்ட்ரக்ஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள் ளப்படுகிறது. பிறகு, இந்த ப்ராஜெக்ட்டிற்காக உருவாக்கப்பட்ட புதிய நிறுவனமான ப்ளூ பேர்ல் டெவலப்மெண்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்தை 18.01.1999-ல் இணைத்துக் கொள்கின்றனர். இதற்காக 1996-ல் 3 கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது. அதாவது, 1996-ல் ஒரு கிரவுண்டு 3 லட்சம் என்கிற ரீதியில் 100 கிரவுண்ட் நிலத்தையும் 3 கோடிக்கு அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளது. இதற்காக, இரண்டு வங்கி கணக்கிலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் 3 கோடியையும் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, காங்கிரஸ் மைதானத்தில் அடுக்குமாடி வணிக வளாகம் (மால்) கட்டுவதற்கான ப்ராஜெக்ட் திட்டமிடப்பட்ட நிலையில், சிலர் இதில் தலையிட்ட தன் பேரில் ப்ராஜெக்ட் அப்படியே கிடப்பில் வைக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக மார்வாடிகளிடமிருந்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீட்கப்படாமல் இருக்கும் காங்கிரஸ் சொத்தின் இன்றைய மதிப்பு சுமார் 1,000 கோடி ரூபாய்!
1000 கோடி சொத்து! செல்வப்பெருந்தகையின் புதிய திட்டம்!
மார்வாடிகளிடம் சிக்கிய 1000 கோடி சொத்தை சட்டரீதி யாக மீட்கும் முயற்சியில், காங் கிரஸ் தலைவரும் அறக்கட்டளை யின் தற்போதைய தலைவருமான செல்வப்பெருந்தகை முயற்சிக்காத நிலையில், காங்கிரஸ் மைதானத் தின் பிரதான நுழைவு வாயிலை செங்கல் வைத்து சுவர் எழுப்பி மூடிவிட்டார். சுவர் எழுப்பப் பட்ட இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதனையறிந்து, சோனியா காந்தியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் ப.சிதம்பரம். சுவர் எழுப்பப்பட்ட தன் பின்னணி பற்றி விசாரித்தபோது, "இந்தியாவில் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப். நிறுவனத்திற்கு 1000 கோடி சொத்தை தாரைவார்க்கும் முயற்சியில் சில திட்டங்களைப் போட்டுள்ளார் செல்வப்பெருந்தகை. அதன் முதல் கட்டம்தான் பிரதான நுழைவுவாயில் சுவர் வைத்து மூடப்பட்ட சம்பவம்'' என்கின்றனர். இதுகுறித்து கருத்தறிய செல்வப்பெருந்தகையை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது.
அமலாக்கத்துறைக்கு உத்தரவு! ராபர்ட் வதேராவுக்கு குறி?
காங்கிரஸ் அறக்கட்டளையின் 1,000 கோடி மதிப்பிலான சொத்தை டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு விற்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தகவல் கொடுக் கப்பட்டிருக்கிறது. டி.எல்.எஃப் என்றதும் உடனே, உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன், இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன். அமலாக்கத்துறையும் சீக்ரெட்டாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
காங்கிரஸ் அறக்கட்டளையில் அமலாக்கத் துறைக்கு என்ன வேலை? என்று விசாரித்தபோது, "ஹரியானா மாநிலத்தில் சோனியாவின் மருமகன் ராபார்ட் வதேரா இயக்குநராக இருக்கும் ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி என்கிற நிறுவனம், காங்கிரஸ் ஆட்சியின் போது, குருகிராம் பகுதியி லுள்ள 3.5 ஏக்கர் நிலத்தை ஓம்காரேஸ்வர் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடமிருந்து 7.5 கோடிக்கு வாங்குகிறது. பிறகு அந்த நிலம் வதேரா பெயருக்கு மாற்றப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த நிலத்தின் மதிப்பை வீட்டுவசதித்திட்டத்தின் கீழ் உயர்த்து கிறது ஹரியானா காங்கிரஸ் அரசு. இதனால் அந்த 3.5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 700 சத வீதம் உயர்ந்தது. உடனே, 7.5 கோடிக்கு வாங்கப் பட்ட நிலத்தை டி.எல்.எஃப். நிறுவனத்திடம் 58 கோடிக்கு விற்கிறார் ராபர்ட் வதேரா. டி.எல்.எஃப். நிறுவனத்திற்கும் ராபர்ட் வதேராவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு.
ஹரியானாவில் பா.ஜ.க. அரசு அமைந்ததும் டி.எல்.எஃப்.க்கும் ராபர்ட் வதேராவுக்குமுள்ள நெருக்கத்தை உணர்ந்து இந்த நிலபேர விவகா ரத்தை விசாரித்த அமலாக்கத்துறை, இதில் சட்டவிரோத பணப்பரி வர்த்தனை நடந்ததாக வதேராவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இதற் காக பலமுறை அமலாக் கத்துறையின் விசா ரணைக்கு ஆஜரானார் வதேரா. வழக்கு நடந்து வந்த நிலையில், 2019 முதல் 2022 வரை தேர்தல் பத்தி ரங்கள் மூலம் டி.எல்.எஃப். நிறுவனத்திடமிருந்து 170 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது பா.ஜ.க. இதன்மூலம் வதேராவை காப்பாற்ற டி.எல்.எஃப். முயற்சித்துள்ளது. ஆனாலும், வதேராவுக்கு எதிரான வழக்கு முடியாமல் நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்துவருகிறது.
அதேபோல, ஜவஹர்லால் நேரு உருவாக்கிய நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் 2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை, சோனியாவும் ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் நிறுவனம் வெறும் 50 லட்சத்துக்கு கையகப்படுத்தி யது. இதில் அதிகளவில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை, 988 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்தி வருகிறது.
இப்படி சொத்துக்களை கபளீகரம் செய்வதாக சோனியா குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறையின் வழக்குகள் பாய்ந்து வரும் இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துக்களை டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு தாரைவார்க்கத் திட்டமிடுவதாக தகவல் கிடைத்ததால், அதனை அலட்சியப் படுத்தாமல், இந்த விவகாரத்தில் ராபர்ட் வதேராவுக்கு தொடர்பு இருக்கிறதா? என்கிற கோணத்தில் ரகசியமாக விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் நிர்மலா சீதா ராமன். ஆக, உத்தரவின் பின்னணி டி.எல். எஃப்.க்கும் வதேராவுக்கும் ஏற்கெனவே இருக்கும் நெருக்கம்தான். காங்கிரசின் 1000 கோடி சொத்து டி.எல்.எஃப்.க்கு தாரைவார்க்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறையின் வழக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலபேர் மீது பாயும்!'' என்கிறார்கள் அமலாக்கத்துறைக்கு நெருக்கமானவர்கள்.