சொத்துக் குவிப்பு வழக்கில் கொள்ளைக்காரி என ஜெ.வை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய தி.மு.க.வின் ஆ.ராசா எம்.பி.க்கு சவால் விடுத்தார் ஜெ.வின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி..
அத்துடன், ஜெயலலிதா மீது 12 வழக்கு இருந்தது. அந்த வழக்குகளில் ஆஜாராகி 11 வழக்கில் ஜெயித்து விட்டேன். 12-வது வழக்கான சொத்துக் குவிப்பு வழக்கிலும் வெற்றி பெறக் கூடிய சூழலில், சசிகலாவின் சதிச்செயலால் வெளியேற்றப்பட்டேன். வழக்கை குட்டிச் சுவராக்க வேண்டும் என அவர்கள் நினைத்ததாக சந்தேகப்படுகிறேன். ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை கோர்ட்டில் சசிகலா சமர்பித்திருந் தால் ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டிருக்கும். ஏன் அதை அவர் தாக்கல் செய்யவில்லை? முதலமைச்சராவதற் கான முன்னேற்பாடு களில் சசிகலா ஈடுபட்டி ருந்ததால் சுய லாபத்திற்காக அதனை அவர் செய்யவில்லை'' என்று சசிகலாவை வம்புக்கு இழுத்தார்.
இது தினகரனின் அ.ம.மு.க. தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய தென்சென் னை அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வின் முன்னாள் துணைச் செயலாளர் என்.வைத்தியநாதன், ‘""அரசியலுக்காக ஆ.ராசா சில விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அதற்கு பதில் சொல்வதோடு ஜோதி நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். எதற்காக சின்னம்மா சசிகலாவை இழுக்க வேண்டும்? சென்னை மத்திய சிறையில் அம்மாவும் சின்னம்மாவும் அடைக்கப்பட்டபோது, உடல்நிலை காரணமாக அரசு பொது மருத்துவமனையில் அட்மிட்டான சசிகலாவிடம் அப்ரூவராகும்படி தி.மு.க. அரசு வலியுறுத்தியபோது, "அக்கா பக்கம்தான் என்றும் நிற்பேன். எதிராக ஒரு போதும் பேசமாட்டேன்' என்றவர் சின்னம்மா. இப்போது சசிகலா சிறையில் இருப்பதற்கும், இந்த வழக்கில் அம்மா ஜெயலலிதா தண்டனை பெற்றதற்கும் காரணமே ஜோதிதான்.
சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடுவும், துக்கை யாண்டியும் இருந்தனர். துக்கையாண்டி எங்கள் குடும்பத்து நண்பர். அதனால் இந்த வழக்கு பற்றிய விவரம் எனக்குத் தெரியும். 11 வழக்கில் வெற்றி பெற்றதுபோல, சொத்து குவிப்பு வழக்கிலும் கீழமைக் கோர்ட்டிலேயே (ஜார்ஜ் டவுன்) ஜெயிக்கக் கூடிய சூழல் இருந்தது. ஆனால், அதனை சிக்கலாக்கியவர் வழக்கறிஞர் ஜோதி. அதாவது, அனைத்து சாட்சியங்களையும் ஜோதியே குறுக்கு விசாரணை செய்து முடித்து விட்ட நிலையில், வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி யிருந்த போது, அரசு தரப்பு சாட்சி களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என திடீரென்று ஒரு பெட்டிசனை தாக்கல் செய்தார். தீர்ப்பு உல்டாவாகிவிடும் என காரணம் சொல்லி, இந்த பெட்டிஷனுக்காக கார்டனிலும் அனுமதி வாங்கிவிட்டார் ஜோதி. இதனால்தான் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வெவ்வேறு பரிமானங்களுக்குப் பிறகு, தி.மு.க. தொடர்ந்த வழக்கில் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. அதனால்தான் வழக்கு சிக்கலானது. இந்த உண்மை பின்னாளில் ஜெயலலிதாவுக்கு தெரிந்ததினால்தான், கார்டனிலிருந்தும் வழக்கிலிருந்தும் வெளியேற்றப்பட்டார் ஜோதி. வழக்கு முடியாமல் இருந்தால்தான், தனக்கு கார்டனில் மதிப்பு இருக்கும், மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக முடியும் என நினைத்த ஜோதியின் பதவி வெறிதான், தண்டனைத் தீர்ப்புக்கு காரணம்.
கொடநாட்டில் அம்மாவும் சின்னம்மாவும் இருந்த போது ஒருமுறை அங்கு சென்ற ஜோதி, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக உள்ள லண்டன் ஹோட்டல் வழக்கை சொத்துக்குவிப்பு வழக்கோடு இணைத்து விட்டால் வழக்கை இழுத்தடித்து விடலாம் என லாஜிக் பேச, சரி என்றிருக்கிறார் ஜெயலலிதா. இதை கவனித்த தினகரன், பங்களாவிலிருந்து வெளியே வந்த ஜோதியிடம், சொத்துக் குவிப்பு வழக்குக்கும் லண்டன் ஹோட்டல் வழக்குக்கும் என்னய்யா சம்மந்தம்? என சத்தம் போட, தினகரன் தன்னை மிரட்டுவதாக ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்து, லண்டன் வழக்கை இணைப் பதற்கான பெட்டிஷனும் போட்டார் ஜோதி.
இதுபற்றி உளவுத்துறை மூலம் அறிந்த முதல்வர் கலைஞரும் துக்கையாண்டியும் இது பற்றி ஆலோசித்து, லண்டன் ஹோட்டல் வழக்கில் ஃபைன் மட்டும்தான் போடப்படும் சிறை தண்ட னை கிடைக்காது என்பதாலும், சொத்து குவிப்பு வழக்கு மேலும் இழுத்தடிக்கப்படும் என்பதாலும் லண்டன் வழக்கை வாபஸ் பெற்றது திமுக அரசு. ஜோதி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.
ஜோதி மட்டுமல்ல வழக்கை கவனித்த வழக்கறிஞர்கள் சிலர் இந்த வழக்கை சிக்கலாகவே வைத்திருந்த பல ரகசியங்களும் இருக்கிறது. அப்பல்லோவில் அம்மா(ஜெ.) அட்மிட் ஆகறதுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ் செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க இறப்பு சான்றிதழை எப்படி தாக்கல் செய்ய முடியும்? ஒருவேளை தாக்கல் செய்ய சட்டம் அனுமதித்தால் கூட, தமிழக அரசோ, அ.தி.மு.க தலைமையோதான் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஜெயலலிதா இறக்கும் போது ஓபிஎஸ் தலைமையில்தானே ஆட்சி இருந்தது? அவர்களைத் தானே ஜோதி கேள்வி கேட்கவேண்டும்?
சின்னம்மாவுக்கு எதிரான பகையை தீர்த்துக்கொள்வதற்காக ஜோதி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வடிகட்டிய பொய். திமுகவால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஜோதி, மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான முயற்சியில் தான் சின்னம்மாவுக்கு எதிரான பொய்களை அவிழ்த்து விடுகிறார்'' என்று ஆவேசமாக சுட்டிக் காட்டுகிறார் வைத்தியநாதன்.
-இரா.இளையசெல்வன்