ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி ஆணையத்தில், ”ஜெயலலிதாவின் மருத்துவச் சிகிச் சையில் எந்தத் தவறும் நடக்கவில்லை” என்று மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போயஸ்கார்டனில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை சென்னை அப்பல்லோவில் அட்மிட் செய்தவர் சசிகலா. 72 நாட்கள் கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சை பலனளிக்காமல் 2016, டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார் ஜெய லலிதா. அவரது மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது என அ.தி.மு.க. தொண்டர்களும் சந்தேகப்பட்ட னர். சசிகலாவுக்கு எதிரான அரசியலை அன்றைக்கு உயர்த்திப் பிடித்து கட்சியை பிளவுபடுத்தியிருந்த ஓ.பி.எஸ்.ஸும், ஜெயலலிதா மரணத்திற்காக நீதி கேட்டுப் போராடினார்.
இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ்.ஸை சமாதானப்படுத்தி, துணை முதல்வராக்கிய நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஆணையத்தை 2017, செப்டம்பர் 25-ந்தேதி அமைத்தார் முதலமைச்ச ராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி.
இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத் துவமனை நிர்வாகம், சசிகலா, சசிகலா உறவினர்கள், தமிழக அரசின் உயரதி காரிகள், டாக்டர்கள், மருத்துவமனை மற்றும் போயஸ்கார்டன் பணியாளர்கள் என பலரையும் விசாரித்த ஆறுமுகச்சாமி ஆணை யத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டே வந்தது.
இந்த நிலையில், ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், டாக்டர் சந்திப் சேத் தலைமையில் 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழுவை அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் சொன்ன சாட்சிகளின் ஆவணங்கள், அப்பல்லோ மருத்துவமனை யின் அறிக்கைகள், கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள் அனைத்தையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அனைத்துத் தரப்பிலும் ஆராய்ந்த எய்ம்ஸ் மருத்துவக்குழு, தனது 3 பக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்ததோடு, ஆறுமுகச்சாமி ஆணையத் திலும் தற்போது தாக்கல் செய்திருக்கிறது.
அந்த அறிக்கையில், ‘’கட்டுப் படுத்த முடியாத நீரிழிவு நோய் பாதிப்பின் காரணமாகவே மருத்துவ மனையில் ஜெயலலிதா சேர்க்கப் பட்டார். ரத்தத்தில் பாக்டீரியா முழுமையாக பரவி இருந்தது. மூளை மற்றும் இதயம் முழுமையாக செய லிழந்ததால் மரணம் நிகழ்ந் துள்ளது. ஜெயலலிதாவுக்கு உயரிய மருத்துவச் சிகிச்சை கொடுக்கப் பட்டுள்ளது. அவருக்கான மருத்துவ சிகிச்சை யில் எந்தத் தவறும் நடக்கவில்லை” என்று நிறைய விபரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது எய்ம்ஸ் மருத்துவக்குழு.
இந்த அறிக்கை அ.தி.மு.க.வில் பரபரப்பாக விவாதிக்கப்படும் நிலையில், சசிகலாவுக்கு சாதகமாக இருக்கிறது அந்த அறிக்கை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான அரசியல் விமர்சகர்களிடம் நாம் பேசிய போது,”நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வோடு ஒட்டும் உறவும் இருக்கக்கூடாது என்கிற திட்டத்தில் இருக்கும் எடப்பாடி, தேர்தலுக்குள் அ.தி.மு.க.வை தன்வசமாக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், எடப்பாடியின் இந்த திட்டத்தை பா.ஜ.க. தலைமைக்கு சிலர் போட்டுக் கொடுத்தனர். அதன்பிறகுதான் பா.ஜ.க.வும் எடப்பாடிக்கு எதிராக யோசிக்க ஆரம்பித்து காய்களை நகர்த்துகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையைப் பொறுத்த வரை தங்கள் தலைமையில் கூட்டணி அமையவேண்டும் என எதிர்பார்க்கிறது. ஆனால், அதற்கு எடப்பாடி உடன்பட மாட்டார் என்பதை மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
எடப்பாடியை வீழ்த்த புதிய வியூகங்களை வகுத்து வருகின்றனர் டெல்லி தலைவர் கள். அதாவது, ஓ.பி.எஸ். தலை மையில் அ.தி.மு.க.வை கொண்டு வருவது, சசிகலாவை அ.தி.மு.க. வில் இணைப்பது ஆகியவை முதல் வியூகம். ஓ.பி.எஸ்.ஸுக்கு அனைத்து ஆதரவையும் சசிகலா தரப்பு தரவேண்டும்; ஒத்துழைக்க வேண்டும் ஆகியவை இரண்டா வது வியூகம். எடப்பாடியை தனிமைப்படுத்திவிட்டு, ஓ.பி.எஸ். -சசிகலா தலைமையிலான அ.தி. மு.க.வை இணைத்துக்கொண்டு பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைப்பது மூன்றாவது வியூகம். தினகரனை அ.தி.மு.க.வில் சேர்த் துக்கொள்வது அல்லது அ.ம. மு.க.வை பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக வைத்துக்கொள்வது நான்காவது வியூகம். தவிர பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ப்பது ஐந்தாவது வியூகம். இவைதான் மோடி-அமித்ஷாவின் டெல்லி கணக்கு ‘’ என்கிறார்கள்.
மேலும் நம்மிடம் பேசிய அவர்கள்,”சசிகலாவுக்கு முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்கு இருந்தாலும் அவர் மீதான ஊழல் வழக்கு, சிறை சென்றதால் நெகட்டிவ் இமேஜ், ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா மீது உள்ள சந்தேகங்கள் இன்னமும் அ.தி.மு.க. தொண்டர் களிடம் இருக்கிறது.
அந்த வகையில், ஆறுமுகச்சாமியின் விசாரணை கமிசன் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்போது, அதில் சசிகலாவுக்கு எதிரான வைகள் இருக்கக்கூடாது என யோசிக்கின்றனர். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாவும் காரணம் என்பதாக ஆணையத்தின் அறிக்கையில் எதிர்மறையான விசயங்கள் இருந்தால், ஜெயலலிதாவை உணர்வுபூர்வமாக நினைக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சசிகலாவின் இமேஜ் சரிந்துவிடும். எடப்பாடி பழனிச்சாமியும் அதனை ஊதிப் பெரிதாக்குவார். சசிகலாவுக்கு எதிரான அரசியல் பெரிதாகும்.
இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கேற்ப ஆணையத்தில் அறிக்கையும் தாக்கலாகியிருக்கிறது. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்த டி.டி.வி. தினகரனை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும் வகையில் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம் பெறவில்லை. டெல்லியின் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
அதேபோலதான், சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தின் அறிக்கை இருக்குமென எதிர்பார்க் கப்பட்ட நிலையில், "ஜெ.வின் மருத்துவச் சிகிச்சையில் தவறில்லை' என்று எய்ம்ஸ் மருத்துவ குழு தற்போது அறிக்கை கொடுத்திருப்பதன் மூலம், சசிகலாவுக்கு எந்த சிக்கலும் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது டெல்லி. ஆக, நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி இப்படிப்பட்ட ரகசிய அரசியல்களை கட்டமைக்கிறது பா.ஜ.க. தலைமை''‘என்று விவரிக்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமான அரசியல் விமர்சகர்கள்.
எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கையை அறிந்து உற்சாகமாக இருக்கிறார் சசிகலா. அவரது முகாம் அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது, "முன்னாள் அமைச்சர் பொன்னையன், சசிகலாவை ஒருமுறை சந்தித்தார். அப்போது, ’ஆறுமுகச்சாமி கமிசனின் முடிவுகள் உங்களுக்கு எதிராக வந்துவிடக்கூடாது. எதிராக வந்தால் அ.தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கையை உங்களால் பெற முடியாது. அதனால் அதில் எந்த சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் ஆறுமுகச்சாமி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப் பட்டார். எனக்கு அவர் தெரிந்தவர்தான். என்னால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா என பார்க் கிறேன்'' என்று சொன்னார். அப்போதிலிருந்தே தனக்குள்ள டெல்லி லாபிஸ்டுகள் மூலமாக முயற்சிகளை எடுத்தபடி இருந்தார் சசிகலா. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தபோது, ஆறுமுகச்சாமி கமிஷன் பற்றி சில யோசனைகளை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, டெல்லியிடம் மீண்டும் அழுத்தமான முயற்சிகள் சசிகலா தரப்பில் எடுக்கப்பட்டது. அதன் பலன் இப்போது தெரிகிறது. அதனால் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா''’என்கிறார்கள்.
இதற்கிடையே ஜோதிடர்கள் சிலர் சமீபத்தில் சசிகலாவை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில், "உங்களின் ஜாதக பலன்களை ஆராய்ந்தபோது அரசியலில் இனி உங்களுக்கு யோகமான சூழல் உருவாகப்போகிறது. ஜனவரியி லிருந்து உங்களுக்கு பொங்கு சனி ஆரம்பமாகிறது. பொங்கு சனியில் உங்களுக்கு எல்லாமே நல்லது நடக்கும். அதேசமயம், அ.தி.மு.க.வில் நீங்கள் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்படாதீர்கள். அந்தப் பதவி ராசியில்லாதது. உங்களுக்குத் துரோகம் செய்தவர் (எடப்பாடி) ஜெயிலுக்குப் போவது உறுதி. அப்போது, அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்களெல்லாம் உங்களைத் தேடி ஓடி வருவார்கள்''’என்று சொன்னதில் மகிழ்ந்து போயிருக்கிறாராம் சசிகலா.
இந்தச் சூழலில், தனது அறிக்கையை தி.மு.க. அரசிடம் விரைவில் ஒப்படைக்கவிருக்கிறார் ஆறுமுகச்சாமி. அதில் சசிகலாவுக்கு எதிராக எதுவும் இல்லை என தெரிந்ததும் எடப்பாடியை ஆதரித்து நிற்கும் மாஜிக்கள் எல்லோரும் அவரை விட்டு விலகத் தயாராக இருப்பதாக அ.தி.மு.க. தரப்பில் பரவி வருகிறது. இந்த நிலையில், தனக்கு சாதகமாக ஏதேனும் அதிசயம் நடக்காதா என நீதிமன்றத்தை மட்டுமே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.