"திருமதி கீதா, திருமதி லதா ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் சுயாதீன மனநல மதிப்பீட்டிற்காக பேராசிரியர் காமராஜர் தாக்கல் செய்த மனுவிற்காக அவசர கோரிக்கையாக இந்த மனுவினை ஏற்று எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை விரைவில் அனுப்பவும்'' என கீழ்ப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் கோயம்புத்தூரிலுள்ள மனநல ஆணையத்திற்கு அனுப்ப, "குட்டு' வெளிப் பட்டுவிடுமோ? என சிக்கலில் இருக்கின்றார் ஈஷாவின் ஜக்கி வாசுதேவ்.
"கோவை ஈஷா யோகா மையத்தில் கட்டாயக் கட்டுப்பாடு, தேவையற்ற செல்வாக்கு, உளவியல் கையாளுதல், மனக் கட்டுப்பாடு, சிந்தனை சீர்திருத்தம் மற்றும் மூளைச் சலவை ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சூழ்ச்சிகரமான ஆன்மிக நடைமுறைகள், ஆன்மிக மற்றும் கவர்ச்சிகரமான அதிகார துஷ்பிரயோகம், உளவியல் சுரண்டல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களை சுரண்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் என் மகள்கள் சிக்கியுள்ளனர். 2016ஆம் ஆண்டில், எனது மகள்களின் சம்மதத்தின் அடிப்படையில் நான் தாக்கல் செய்த ஒரு ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2024ஆம் ஆண்டில், இதே போன்ற காரணங்களுக்காக ஒரு மனு போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தது. இதை ஈஷா SLP (Crl.) எண். 13992/2024 மூலம் உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்தது. காவல்துறை ஒப்புதல் அறிக்கைகளை மட்டுமே பதிவு செய்தது, அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை முடித்தது. இருப்பினும், உளவியல் மதிப்பீட்டை நடத்தத் தவறியது BNS/IPC-இன் பிரிவு 90இன் மீறலாகும். ஏனெனில், பயம் அல்லது தவறான நம்பிக்கையின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் செல்லாது என அக்டோபர் 18, 2024 அன்று, உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியது. இந்த நடவடிக்கைகளை மூடுவது, ஈஷா அறக்கட்டளையால் அடைய வேண்டிய வேறு எந்த ஒழுங்குமுறை இணக்கங்களையும் பாதிக்காது. எனது புகாரை காவல்துறையினர் தபால் மூலம் ஒப்புக்கொண்டாலும், இன்றுவரை எந்த எஒத பதிவும் செய்யப்படவில்லை, இது முறையான ஒப்புதல் அளித்த போதிலும் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காததைக் காட்டுகிறது'' என்கின்ற மனுவினை மீண்டும் முதலமைச்சர் தொடங்கி தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (சட்டம் & ஒழுங்கு), தேசிய & தமிழ்நாடு மாநில ஆணையங்கள் அல்லது மகளிர், தேசிய & தமிழ்நாடு மாநில மனித உரிமைகள், ஆணையங்கள், தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள், மாநில மனநல ஆணையம் (தமிழ்நாடு), மாவட்ட மனநல மறுஆய்வு வாரியம் (கோயம்புத்தூர்) மற்றும் மாவட்ட ஆட்சியர்வரை அனுப்பிய நிலையில் உத்தரவினை பிறப்பித்துள்ளது மாநில மனநல ஆணையம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/isha1-2026-02-12-16-18-35.jpg)
மனு அனுப்பிய ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜோ, "எனது மகள்கள் ஈஷாவில் சன்யாசம் (துறப்பு) எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். சட்டபூர்வமாக தங்கள் பெயர்களை மாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டிக்க அறிவுறுத்தப் பட்டனர். இதன்விளைவாக தனிமைப்படுத்தல், குடும்ப அந்நியப்படுத்தல், அடையாளத்தை அடக்குதல் மற்றும் கட்டாய மதமாற்றம் ஆகியவை ஏற்பட்டன. நீதிமன்ற நடவடிக்கை களின்போது, அவர்கள் என்னை ஒரு அந்நியன் என்று பகிரங்கமாக அடையாளம் காட்டினர். அதோடு இரு தாத்தா பாட்டிகளின் இறுதிச் சடங்குகளிலும் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். ஜூன் 15, 2024 அன்று, மையத்திற்கான ஆட்சேபனை களை வாபஸ் பெறுமாறு எனக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கட்டாய தொலைபேசி அழைப்பு வந்தது. இது சூழ்ச்சிகரமான ஆன்மிக நடைமுறைகள் மற்றும் குடும்பத்திலிருந்து வேண்டுமென்றே பிரித்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
ஜக்கி வாசுதேவால் ஈஷாவில் நடத்தப்படும் "சம்யமா தியான திட்டம்' பங்கேற்பாளர்களை தொடர்ச்சியான மனக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறது, இதில் தனிமைப்படுத்தல், கண் தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் கடுமையான மேற்பார்வையின் கீழ் நீடித்த சுவாசக் கண்காணிப்பு ஆகியவை அடங்கும். வழிகாட்டப்பட்ட படங்கள், கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம், மீண்டும் மீண்டும் தாள இசை மற்றும் உணர்ச்சிவசப்பட்ட தூண்டு தல் பேச்சு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இறுதி நாளில் (தீக்ஷா), ஜெகதீஷ் வாசுதேவ் வெகுஜன ஹிப்னாஸிஸை நடத்துகிறார். இது வேண்டுமென்றே உளவியல் சுரண்டல், கட்டாயக் கட்டுப்பாடு, பாதிப்பு துஷ்பிரயோகம், அறிவாற்றல் சிதைவு, கட்டாய சார்பு மற்றும் நீண்டகால உளவியல் தீங்குக்கு சமம். இது ஒரு வகையான உளவியல் சுரண்டலே.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/isha2-2026-02-12-16-18-48.jpg)
ஆக, ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் மீது பொருந்தக்கூடிய இந்திய சட்டங்களின்கீழ் கடத்தல், பாலியல் சுரண்டல், கட்டாயக் கட்டுப்பாடு, தவறாக அடைத்து வைத்தல், கட்டாய உழைப்பு தொடர்புடைய குற்றங்களுக்காக வழக்குத் தொடரவும், மனநல சுகாதாரச் சட்டம், 2017 (பிரிவு 89 & 90)இன்படி, மாவட்ட மனநல மறுஆய்வு வாரியத்தின் மேற்பார்வை யின் கீழ் குறைந்தபட்சம் 10 நாள் சேர்க்கை உட்பட, எனது மகள்களுக்கு கட்டாய மனநல மதிப்பீட்டை நடத்தவேண்டும் என்பதே என் கோரிக்கையாக இருந்தது. அது மாநில மனநல ஆணையம் மூலம் தற்பொழுது ஆய்விற்கு வந்திருக்கின்றது'' என்கிறார் அவர்.
முன்னதாக மனுவில், "ஈஷா ஹோம் பள்ளியின் ஒரு மாணவரின் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் மாணவர் ஒருவர், ஆன்லைனில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். இருப்பினும், எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ரமேஷ் பாலகுரு என்பவர் 2011 முதல் ஈஷா யோகா மையத்தில் ஹிப்னாடிசத்தின் கீழ் உள்ளார், எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. SLP (Crl.) எண். 13992/2024இல், ஈஷா அறக்கட்டளை போலீஸ் விசாரணையைத் தடுக்க முயன்றது. போலீஸ் பதிவுகளில் ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள், ஆறு காணாமல் போனவர்கள் மற்றும் மையத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறிப்பிடப் பட்டுள்ளன.
மனநல ஆணையத்தால் சுதந்திரமாக ஆய்வு நடத்தப்பட்டால், மதத்தை தவறாக பயன்படுத்துகின்றார் சத்குரு என்ற ஜக்கி (அ) ஜெகதீஷ் வாசுதேவ் மீது IPC 295A நம்பிக்கை துரோகம் IPC 409,, மோசடி IPC 420, மருத்துவர்கள் பயன்படுத்தும் ஹிப்னாடிசத்தை பயன்படுத்தி நிரந்தர மனநல பாதிப்பை ஏற்படுத்தியது IPC 328,, ஹிப்னாடிசம் மூலம் ஒரு நபரை தன்வயப்படுத்தி அடிமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்து வேலைசெய்ய வைத்தல் IPC 370 & IPC 374, மற்றும் Drugs and magic remedies act 154 போன்ற சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்கலாம் என்கின்றது இந்திய தண்டனை சட்டங்கள்.
பேராசிரியரின் போராட்டம் நிறை வேறினால், ஜக்கியால் தியானம் எனும் ஹிப்னாடிசத்தில் சிக்கிய பல ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்படுவார்கள். தமிழ்நாடு அரசு இதற்கு முதன்மையாக ஒத்துழைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டோரின் கோரிக்கை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/isha-2026-02-12-16-18-24.jpg)