தமிழக கவர்னரை மையப்படுத்தும் நிர்மலாதேவி விவகாரம் பிரதமர் அலுவலகத்தையும் உலுக்கி எடுத்திருக்கிறது. பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்ததால், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் விவகாரத்தை ஒப்படைத்திருக்கிறது பிரதமர் அலுவலகம்.
கர்நாடகத் தேர்தலை கவனிக்கும் பொறுப்பிலிருக்கும் ராஜ்நாத்சிங், தமிழக கவர்னர் விவகாரத்தை தனது துறையின் செயலர் ராஜீவ் கௌபாவிடம் கொடுத்துள்ளார். கவர்னரின் நடவடிக்கைகளையும் நிர்மலாதேவி விவகாரத்தையும் மிக உன்னிப்பாக கண்காணிக்கிறது மத்திய உள்துறை. முதல்கட்டமாக, சமீபத்தில் திடீரென காவல்துறை உயரதிகாரிகள் 5 பேரை அதிரடியாக மாற்றப்பட்டதிலுள்ள பின்னணிகளை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் உளவுத்துறையினர்.
இதுகுறித்து அவர்கள் தரப்பில் விசாரித்தபோது, ""ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டதில் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான ஏ.டி.ஜி.பி.மஞ்சுநாதா ஆகிய இருவரும் மாற்றப்பட்டதுதான் அதிர்ச்சியளிப்பவை. இந்த மாற்றலுக்கு உத்தரவுப் போட்டவர் கவர்னரின் (பன்வாரிலால் புரோகித்) செயலாளரான கூடுதல் தலைமைச்செயலர் அந்தஸ்திலிருக்கும் ராஜகோபால்.
நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம் அம்பலமானதுமே பதட்டமடைந்து அவசரம் அவசரமாக விசாரணைக் கமிஷன் அமைத்தார் கவர்னர். இதற்கான யோசனையைச் சொன்னவர் ராஜகோபால். கமிஷன் அமைக்கப்பட்டதன் உள்நோக்கத்தை அறிந்த முதலமைச்சர் பழனிச்சாமி, அதற்கு செக் வைக்கும் நோக்கத்தில் டி.ஜி.பி.ராஜேந்திரனிடம் ஆலோசித்து நிர்மலாதேவியின் வழக்கை சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு மாற்றினார். இதனை எதிர்பார்க்காத ராஜ்பவன் அதிர்ச்சியடைந்தது.
சி.பி.சி.ஐ.டி.யின் ஏ.டி.ஜி.பி. ஜெய்ந்த்முரளி மிக கறாரான அதிகாரி. நிர்மலாதேவி விவகாரத்தில் ராஜ்பவன் தொடர்புகளை ஆதாரங்களுடன் அவர் கண்டறிந்தால் தங்களுக்குச் சிக்கல் என உணர்ந்ததே ராஜ்பவனின் அதிர்ச்சிக்குக் காரணம். இதுகுறித்து கவர்னரிடம் தெரியப்படுத்துகிறார் ராஜகோபால். உடனே அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதனையடுத்து, தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டியை தொடர்புகொண்டு, ஜெயந்த் முரளியை மாற்றி அம்ரேஷ் பூஜாரியை நியமிக்கும்படி வலியுறுத்துகிறார் ராஜகோபால். இதனை முதலில் ஏற்க மறுத்த நிரஞ்சன்மார்டி, ராஜகோபால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே, "டி.ஜி.பி.யிடம் பேசுங்கள்' என தெரிவித்துவிடுகிறார். உடனே டி.ஜி.பி.யிடமும் இதே கோரிக்கையை வைத்து காரியத்தைச் சாதிக்கிறார் ராஜகோபால். இதனையடுத்து, ஜெயந்ந் முரளியை தூக்கிவிட்டு, அந்த இடத்தில் ராஜகோபாலின் நண்பரான அம்ரேஷ் பூஜாரியை நியமிக்கிறார் நிரஞ்சன் மார்டி.
ராஜ்பவனின் இந்த கோரிக்கைக்கு டீல் போட்டார் முதல்வர் பழனிச்சாமி. தங்களுக்கு எதிராக இருக்கும் ராஜகோபாலின் நண்பரான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் மஞ்சுநாதாவை இடம்மாற்றிவிட்டு அந்த இடத்தில் ஜெய்ந்த்முரளியை கொண்டு வந்துவிட்டார். இதற்கு காரணம், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஊழல்களில் எடப்பாடி அரசை சிக்க வைப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையை கவர்னரும் ராஜகோபாலும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான். ஆக, பாலியல் குற்றச்சாட்டுகளில் கவர்னருக்கு எதிரான ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்காகவே சி.பி.சி.ஐ.டி.யின் உயரதிகாரியை மாற்ற வைத்திருக்கிறார் ராஜகோபால். இதன் பின்னணிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் அதிகாரிகள் மாற்றம் நிகழவில்லை எனில், ராஜ்பவனுக்கு சாதகமாக விசாரணைக் கமிஷனும், எதிராக சி.பி.சி.ஐ.டி.யும் தங்களின் ரிப்போர்ட்டுகளை கொடுக்கும்பட்சத்தில் கவர்னருக்கு எதிராக சிக்கல் அதிகரிக்கும். அந்த நிலை வராமல், நிர்மலாதேவி விவகாரத்தில் இரண்டு விசாரணை அமைப்புகளின் புலனாய்வும் ஒரே மாதிரியாக இருந்தால்தான் பாலியல் குற்றச்சாட்டில் ராஜ்பவனுக்குத் தொடர்பில்லை என்பது நிலை நிறுத்தப்படும்''’என்கிறார்கள் உளவுத்துறையினர்.
இதற்கிடையே, நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னருக்கும் ராஜகோபாலுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி தலைமைச் செயலகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. கவர்னரின் அபிலாஷைகளுக்கு ராஜகோபால் உடந்தையாக இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இந்தச்சூழலில், உள்துறைச்செயலாளராக ராஜகோபால் இருந்தபோது நடந்த விசயங்களையும் இப்போது அசைபோடுகிறது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரம்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ""ஜெயலலிதா 2011-ல் முதல்வரானதும் உள்துறை செயலாளராக ராஜகோபாலை நியமித்தார். நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே உள்துறையில் முக்கிய கோப்புகளின் தேக்கம், தலைமைச்செயலர் மற்றும் டி.ஜி.பி.யோடு முரண்பாடுகள் என ராஜகோபாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் கச்சைக்கட்டின. ஆனால், ஜெயலலிதாவின் செயலாளர்களில் ஒருவராக இருந்த வெங்கட்ரமணனின் ஆசி ராஜகோபாலுக்கு இருந்ததால், அவரை தொந்தரவு செய்யாமல் அமைதிக்காத்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில்தான் ஜெயலலிதாவை சந்தித்தார் ராஜகோபாலின் மனைவி மீனாட்சி ராஜகோபால். இவரும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிதான். ஜெயலலிதாவை சந்தித்த மீனாட்சி ராஜகோபால், , தனது கணவரின் மற்ற தொடர்புகளால் வீட்டுக்கே வருவதில்லை எனவும் புகார் கொடுத்தார். உடனடியாக, புகாரின் உண்மைத்தன்மையை அறிய உளவுத்துறையினருக்கு ஜெ. உத்தரவிட்டார். விசாரணையில் புகார் உண்மை என அறிந்த ஜெயலலிதா, தலைமைச்செயலக வளாகத்திலேயே ராஜகோபால் இருக்கக்கூடாது என முடிவு செய்து பவர் ஃபைனான்ஸ் மற்றும் உள்கட்டமை வளர்ச்சிக் கழகத்தின் எம்.டி.யாக டம்மி போஸ்டிங்கிற்கு தூக்கி அடித்தார். அப்படிப்பட்டவர்தான் தற்போது கவர்னருக்கு ஆல் இன் ஆல்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஒருபுறம் தங்களுக்குத் தோதான விசாரணைக் கமிஷன், மற்றொருபுறம் தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் உயரதிகாரி மாற்றம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்தியிருக்கிறது ராஜ்பவன்!
-இரா.இளையசெல்வன்
----------------------------------------
அமைச்சர்கள் தொடர்பு!
நிர்மலாதேவி செல்வாக்காக உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக கெஸ்ட் அவுசில், தமிழக அமைச்சர்கள் அரசு நிகழ்ச்சிக்காகவோ சொந்த வேலை காரணமாகவோ மதுரை செல்லும்போது தங்குவார்கள். மாதத்திற்கு இரண்டு முறை சென்னை வந்துபோகும் நிர்மலா, சேப்பாக்கத்திலுள்ள ஸ்டேட் கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் தற்போது மத்திய உளவுத்துறை ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சர்களின் பாலியல் லீலைகள் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் பரபரப்பை உண்டாக்கவே அவரிடம் பேசினோம். ""நான்கு அமைச்சர்களின் பாலியல் லீலைகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் இருப்பது உண்மைதான். அந்த அமைச்சர்கள் யார், யார்? என்ன மாதிரியான லீலைகள்? அதில் சம்மந்தப்பட்ட பெண்கள் யார்? என்பதெல்லாம் நேரம் வரும்போது வெளிப்படுத்துவேன்''’என்கிறார். "18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததும் வெற்றிவேலிடம் இருக்கும் ஆதாரங்கள் வெளியாகும்' என்கிறது தினகரன் தரப்பு.