அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. பிரமுகரான பிரிதிவிராஜ் வீட்டில் ரூ.2,60,000 கொள்ளைபோன வழக்கில், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் மாணிக்கம் என்பவர் கைது செய் யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வீட்டில் அவருடைய மகன் கர்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதும், உடலை வாங்குவதற்கு காவல்நிலைய வாகனத்தில் சென்ற மாணிக்கம் மனைவி தேவி கீழே குதித்து, தலையில் பலத்த காயத்துடன் உயிரைவிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கர்ணனின் சித்தப்பா தெய்வேந்திரன், "அருப்புக்கோட்டை டவுண் போலீஸ் ஸ்டேஷன்லதான் விசாரணை நடந்திருக்கு. மொதல்ல அப்பா மாணிக்கத்தை அரெஸ்ட் பண்ணிருக்காங்க. அப்புறம் மகன் கர்ணனை விசாரிச்சிருக்காங்க. ஸ்டேஷன்ல வச்சு கர்ணனை என்ன பண்ணுனாங்கன்னு தெரியல. மாணிக்கத்தை என்னமாதிரி விசாரிச்சாங்கன்னு தெரியல. அப்பாவுக்கு மாத்திரை எடுத்துட்டு வர்றேன்னு வீட்டுக்குப் போனவன் தூக்குல தொங்கிட்டான். விசாரணை நடந்தப்ப ஸ்டேஷன்ல இருந்த தேவி, மகனை தனியா வீட்டுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லியும் போலீஸ் கேட்கல. கர்ணன் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு, பேங்க் எக்ஸாம் எல்லாம் எழுதிருக்கான். விசாரிக்க வீட்டுக்குப்போன போலீஸ் அவன் படிச்ச சர்டிபிகேட் எல்லாத்தயும் எடுத்து வச்சிக்கிருச்சு. மாணிக்கம் திருடிய பணத்துல இருந்து ரூ.70000-ஐ மீட்டுட்டு, மீதி பணம் ரூ.2 லட்சம் எங்கேன்னு கேட்டு, இப்பவே தந்தாகணும்னு கர்ணனை டார்ச்சர் பண்ணிருக்காங்க. கர்ணனோட தங்கச்சிய அந்த இன்ஸ்பெக்டரம்மா கழுத்தப் பிடிச்சு, உண்மையச் சொல்லு.. இல்லன்னா உன் மேலயும் கேஸ் போடுவேன்னு மிரட்டிருக்காங்க. கர்ணன் உடலை வாங்க எங்க கார்ல தேவியைக் கூட்டிட்டு வர்றோம்னு சொன்னதுக்கு, அதெல்லாம் வேணாம், போலீஸ் கார்ல எங்ககூட வரட்டும்னு வற்புறுத்தி கூட்டிட்டு போனாங்க. விருதுநகர் ஜி.எச்.சுக்கு போற வழில, பாலவநத்தம் பக்கத்துல கார்ல இருந்து கீழே விழுந்து தேவி இறந்துட்டாங்க. போலீஸ் காருக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல..''” என்று கலங்கினார்.
அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய சார்பு ஆய்வா ளர் ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டோம். "விசாரணை நடந்தப்ப நானும் கூட இருந்தேன். ஆனா.. நான் விசாரிக்கல. பிறகு பேசுறேன்''’என்று லைனைத் துண்டித்தார். அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமியிடம் பேசினோம். "சென்னைல இருந்து தமிழ்நாட் டுல பல ஊர்லயும் மாணிக்கம் மேல 48 திருட்டு கேஸ் இருக்கு. இதெல்லாம் போலீஸே கண்டு பிடிச்சது. கண்டுபிடிக்காத கேஸ் எத்தனை இருக்கோ? அந்த தெய் வேந்திரன் சொல்லுறது எல்லாமே பொய். எங்ககூட வரும்போது யாருகிட்டயோ தேவி தொடர்ந்து போன்ல பேசிக்கிட்டிருந்தாங்க. சிவப்புத்துண்டு போட்ட ஒரு ஆள், பையன் செத்ததுக்கு பணம் கிடைக்கும்கிற மாதிரி பேசி, தூண்டி விட்ட மாதிரி தெரியுது''’என்றார்.
திருடுபோன ரூ.2 லட்சத்தை காவல்துறை மீட்கும் முயற்சியில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது கொடுமையிலும் கொடுமை!