தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளை விசாரித்து வருகிறார் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ். கடந்த வாரம் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கிலிருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்ததுடன் மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தர விட்டார்.

இந்த நிலையில், பிப்ரவரி 28, 29, மார்ச் 5 ஆகிய மூன்று நாட்களும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்படும் என்று ஏற்கனவே பட்டியலிடப்பட்டது.

அதன்படி 28-ந் தேதி வழக்கின் விசாரணை நடந்தபோது தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷும், தங்கம் தென்னரசுவின் மனைவி சார்பில் டெல்லியின் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாரும் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கின் புலன் விசாரணை யின்போது கூடுதல் ஆதா ரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தனர் போலீசார். அதனையேற்று, இவர்கள் குற்றமற்றவர்கள் என விடு தலை செய்யப்பட்டனர். அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யத் தேவை யில்லை என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

tt

Advertisment

அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசும் அவரது மனைவியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, புலனாய்வு அதிகாரி பூமிநாதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு அந்த அதிகாரியே மேல்விசாரணைக்கு அனுமதி கேட்டிருக்கிறார். அதனால் அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. நாளை (பிப்ரவரி 29) பிற்பகல் அவர் நேரில் ஆஜராக வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார்.

புலனாய்வு அதிகாரி பூமிநாதன் ஆஜராக வேண்டுமென்கிற நீதிபதியின் உத்தரவு, அமைச்சர் தரப்பிலும் தி.மு.க. தரப்பிலும் ஒருவித பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், 29-ந் தேதி (வியாழன்கிழமை) பிற்பகலில் பூமிநாதன் ஆஜராவாரா? அல்லது ஏதேனும் காரணம் சொல்லி ஆஜராவதற்கு வாய்தா வாங்குவாரா? அல்லது ஆஜராகும்பட்சத்தில் அவரிடம் நீதிபதி எந்த மாதிரி கேள்விகளைக் கேட்பார்? என்கிற விவாதங்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் மத்தியில் 29-ந் தேதி காலை எதிரொலித்தபடி இருந்தது.

மார்ச் 5-ந் தேதி நடக்கும் இறுதி விசாரணையின் போதுதான் தங்கம் தென்னரசுவின் தலை தப்புமா? என்பது தெரிய வரும்.