ட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அச்சுறுத்திய கொரோனா இரண்டாவது அலையை 50 நாட்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது தி.மு.க அரசு. முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கடும் உழைப்பு இதன் பின்னணியில் இருக்கிறது. நக்கீரனின் பிரத்யேகப் பேட்டிக்காக அவரை சந்தித்தோம்.

முதல் முறையாக அமைச்சர் வாய்ப்புப் பெற்ற உங்களுக்கு மிகவும் சென்சிட்டிவான மருத்துவத்துறையை ஒதுக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மிகப்பெரிய சவாலான இத்துறையை கையாண்ட அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?

masu

மக்களோடு தினமும் தொடர்புடையது மருத்துவத் துறை. அதனால் மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த பெரும் வாய்ப்பாக இதை கருதுகிறேன். அதேசமயம், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் இத்துறைக்கு அமைச்சராக்கப்பட்டதால் இனம்புரி யாத ஒருவித பயமும் இருந்தது. முதலமைச்சரை சந்தித்து நான் வாழ்த்துகள் பெற்றபோது, ’மிகச் சவாலான காலகட்டத்தில் பெரும்பொறுப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. உங்களால் திறம்பட இதை சமாளிக்க முடியும். உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது'' என்று வாழ்த்தினார். அது எனக்கு உந்துதலையும் ஆற்றலையும் தந்தது. இரவு-பகல் பாராமல் உழைத்ததில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தியிருக்கிறோம். அதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Advertisment

குறுகிய காலத்தில் எப்படி கட்டுப்படுத்தினீர்கள்?

மே மாதம் 7-ந் தேதி தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றபோது தமிழகத்தின் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 25,485 ஆக உச்சத்தில் இருந்தது. படிப்படியாக மே 21-ந் தேதி 36,184 ஆக அதி உச்சத்துக்குச் சென்றது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங் களில் தினசரி பாதிப்பு 70,000, 80,000 என கடகடவென உயர்ந்துகொண்டே சென்ற நிலையில், ஒருவித பதட்டம் எங்களுக்கு இருந்தாலும், முதலமைச்சரின் ஆலோசனை யுடன் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 36,000-த்தை கடந்து விடாமல் அந்த எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து இன்றைக்கு தினசரி பாதிப்பு 3,367 என்றளவில் கட்டுப்படுத்தியிருக் கிறோம். குறிப்பாக, நோய்த் தாக்குதலை கண்டறிய 100 சதவீத ஆ.டி.பி.சி.ஆர். பரிசோதனை, நோய் கட்டுப்பாட்டு பகுதி மேலாண்மை, நோயாளிகளை சரியாக வகைப்படுத்தி நோய் தீவிரத் தன்மைக்கேற்ப சிகிச்சை அளித்தல், ஒன்றிய அரசிடம் தேவையான ஆக்சிஜன், தடுப்பூசி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை பெற உரிய நடவடிக்கைகள், ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் நடமாடும் காய்கறி அங்காடிகள், அதிக அளவிலான சிறப்பு காய்ச்சல் முகாம்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவச கொரோனா சிகிச்சை வசதிகள் ஆகிய வழிமுறைகளை கையாண்டோம். இதனால் கொரோனா பரவல் சங்கிலிகள் துண்டிக்கப்பட்டன. கொரோனாவின் பாதிப்பும் தாக்கமும் குறைந்தது. இதனைப் பற்றி விரிவாக பதிவு செய்து தமிழக அரசை பாராட்டியுள்ளது கேரளாவின் பிரபல பத்திரிகையான மலையாள மனோரமா. முதல் அலையின் போது கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவை பாராட்டினர். இரண்டாம் அலையில் தமிழகத்தை பாராட்டுகின்றனர்.

கொரோனா பேரிடரை கையாள்வதில் பல சிரமங்களை நீங்கள் சந்தித்ததாக சொல்லப்படுகிறதே?

Advertisment

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற மே-7 ந்தேதி தமிழகத்தின் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன். ஆனால், தேவையோ 500 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியா முழுவதும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தன. இதனால் தமிழகத்தில் அந்த பயமும் பதட்டமும் அதிகரித்தது. 200 நோயாளிகள், 100 நோயாளிகள், 80 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடுகிறார்கள். ஆக்சிஜனை உடனே அனுப்புங்கள். இல்லையெனில் இறந்து போவார்கள் என தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து 24 மணி நேரமும் எனக்கு போன் கால்கள் வந்து கொண்டே இருந்தன. ஒரே அவலக் குரல்கள். போனை எடுக்கவே பயந்த நாட்கள் அவை. ஆனாலும் தைரியத் துடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டோம். முதலமைச்சரின் முயற்சியில் ரூர்கேலா, துர்காபூர், ஜாம்ஷெட்பூர் நகரங்களிலிருந்து விமானம், கப்பல், ரயில் என அனைத்து வழிகளிலும் ஆக்சிஜனை கொண்டு வந்தோம். ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஜெனரேட்டர்கள், சிலிண்டர்கள் ஆகியவைகளை தந்து பலரும் உதவினார்கள். ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து போனார்கள் என்ற சோகம் நிகழாமல் பார்த்துக் கொண்டோம். 15 நாட்கள் தூங்கா இரவுகள்தான்! இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.

dd

மூன்றாவது அலை வரப்போவதாக மருத்துவ உலகம் எச்சரித்திருக்கிறதே, எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

தமிழகத்தில் இதுவரை 30 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பெரியளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம். இன்னும் 7 மாவட்டங்கள்தான் பாக்கி. இந்த ஆய்வுக் கூட்டங்களில் ஏதோ கலெக்டர்களுடன் பேசிவிட்டு வந்ததாக நினைக்கக்கூடாது. கிராமங்களில் இருக்கும் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் என அனைத்து வகையான 160-க்கும் மேற்பட்ட மருத்துவமனை களையும், தடுப்பூசி மையங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட மையங்களையும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டு மென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆங்கில மருத்துவத்தோடு தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகியவையும் இணைந்த மருத்துவ முறைகளை கையாளவும் உத்தரவிடப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் புதிதாக 80,000 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மை படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை. மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுவதால் குழந்தைகளுக்கென ஒவ்வொரு மருத்துவமனை யிலும் 100 படுக்கைகள் தனியாக ஏற்படுத்தப் பட்டுள்ளன.

கொரோனாவுக்கு பிந்தைய நோயின் தாக்கத்தை கண்டறிய தனி சிகிச்சை மையத்தையும் முதலமைச்சர் உருவாக்கியிருக்கிறார். அதேபோல, கரும்பூஞ்சை நோயாளிகளை பாதுகாக்க 7,000 தனி படுக்கைகளும் தனி மையங்களும் உருவாக்கப்பட்டு, மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் அலையின் போது ஏற்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்பை நோயின் தாக்கம் குறைந்ததும் முந்தைய அ.தி.மு.க. அரசு அதனை பிரித்து எடுத்து விட்டது. அதனால் இரண்டாம் அலையில் அதனை உருவாக்க மிகுந்த சிரமம் இருந்தது. இரண்டாம் அலையில் நாங்கள் ஏற்படுத்தியுள்ள மருத்துவக் கட்டமைப்பை அப்ப டியே பாதுகாக்கிறோம். இப்போது ஆக்சிஜன் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. மூன்றா வது அலை வரக்கூடாது. வந்தாலும் பயமும் இல்லை; பதட்டமும் இல்லை. அந்தளவுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் பற்றாக்குறை என ஒன்றிய அரசை நீங்களும், தடுப்பூசிகளை வீணடிப்பதாக உங்களை அவர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகிறீர்கள். தடுப்பூசி விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?

இதுவரை ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு கிடைத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,57,76,860. போடப்பட்டது 1,59,30,132 தடுப்பூசிகள். கிடைத்ததை விட கூடுதலாகப் போட்டிருக்கிறோம். அதா வது, உலக சுகாதார மையம் அங்கீகரித்த தன்படி, 5 எம்.எல். மருந்து இருக்கும் ஒரு தடுப்பூசி குப்பியிலிருந்து ஒருவருக்கு 0.5 எம்.எல்.மருந்து வீதம் 10 பேருக்கு போடப்படும். சில குப்பியில் 5 எம்.எல்.லுக்கு பதிலாக 5.8 அல்லது 6 எம்.எல். என கூடுதலாக இருக்கிறது. அதனை கவனமாகவும் சாதுரியமாகவும் பயன்படுத்தி ஒரு குப்பியிலிருந்து 12 பேர் வரைக்கும் என 15 லட்சம் பேருக்கு கூடுத லாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசில் 8 சதவீதம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டன. நாங்கள் 1 சதவீதம் கூட வீணாக்கவில்லை. தடுப்பூசி களை விரைந்து அனுப்புவதில் ஒன்றிய அரசு கால தாமதம் செய்கிறது. குறைவாகவும் அனுப்புகின்ற னர். நடப்பு மாதத்தில் 71 லட்சம் தடுப்பூசிகள் தேவை. கிடைத்ததோ 10 லட்சம்தான். மீதியுள்ள 61 லட்சம் தடுப்பூசிகளை 11-ந்தேதிதான் கிடைக்கும் என சொல்கின்றனர். அதனால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆக, தடுப்பூசிகள் கையிருப்பை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிப்பது எங்களின் கடமை. அதைத்தான் செய்கிறோம். ஒன்றிய அரசை குற்றம்சாட்டுவதற்காக அல்ல.