கடந்த வியாழனன்று, தங்களைத் தாங்களே பிளேடால் கிழித்துக் கொண்டும், சோதனையிட்ட வார்டர்களை தாக்கியும் அதகளம் செய்தனர் கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள விசாரணைக் கைதியினர். இதில் வார்டர்கள் உள்ளிட்ட சிறைக்காவலர்கள் 4 பேரும், கைதிகள் 7 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், வெறும் பீடிக்காக கலவரம் நடந்தது என்றும், கோடிகளில் புரளும் சிறை வர்த்தகத்தாலேயே இதுபோன்று நடக்கின்றது என்பதுமான அதிர்ச்சித் தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
பொதுவாக சிறைக்குள் மொபைல் போன் கள், ஆயுதங்கள் மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகள் வைத்திருப்பது சிறைத்துறை விதிகளின்படி குற்றம் என்றாலும், கோவை மத்திய சிறைக்குள் "அது' இல்லாமல் இருந்தால்தான் குற்றமே என்கின்றது சிறைத்துறை தகவல்கள்.
"கோவை மத்திய சிறைச்சாலை நான்கு அடுக்கு பாதுகாப்பினைக் கொண்டிருந்தாலும் மெயின் கேட், நேர்காணல் கேட், மனு கேட் ஆகிய மூன்று நிலைகளில் உள்ள காவலர்கள் சிறைத்துறை அதிகாரிகளின் விசுவாசிகளே.. சிறைத்துறை அதிகாரிகளின் கண்ணசைவில் செயல்படும் இவர்களே சிறைக்குள் நடைபெறும் கோடிக்கணக் கான வர்த்தகத்திற்கு அடித்தளம். கைதிகளைக் காணவரும் உறவினர்கள், நண்பர்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களை சிறைக்குள் அனுமதிக்க சட்டம் இருக்கின்றது. எனினும் இதனை சரியாக செய்வதில்லை. மேற்கண்ட மூன்று நிலை காவலர் கள். அவர்களிடமிருந்து பிடுங்கி தனியாக வைத்துக் கொண்டு அதனை பின்னாளில் விற்பனை செய்வது வழமையான ஒன்று. இதனையும் கடந்து சென் றால் சிறைக்கு வெளியில் இருக்கும் குறிப்பிட்ட சில பெட்டிக்கடைகளில் பணத்தைக் கொடுத்து உள்ளே கொடுத்துவிடச் சொல்வதும் நடைமுறையில் உள்ள வழிகளில் ஒன்று'' என ஆதங்கப்படுகிறார் முன்னாள் சிறைத்துறை காவலர் ஒருவர்.
மாநகர உளவுப்பிரிவு அதிகாரி ஒருவரோ, "கோவை மத்திய சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கெடுபிடிகளை மீறியும் உள்ளே செல்கின்றன என எங்களுக்கு தகவல் வந்தாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறைத்துறை அதிகாரம் வானளாவியது. அதையும் மீறி உள்ளூர் போலீஸார் சிறைக்குள் சென்றால், சோதித்துக் கொள்ளுங்கள் என சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே எங்களுக்கு நேரம் கொடுப்பார்கள். நாங்கள் என்ன சூப்பர்மேனா.? ஒரு மணி நேரத்தை வைத்துக்கொண்டு 2400க்கும் அதிகமான கைதிகள் தங்கியிருக்கும் அறைகளை எப்படி சோதனையிட முடியும்..? நாங்கள் உள்ளே செல்வதற்கு முன்பே பொருட்களை இடம் மாற்றி விடுவார்கள். அப்படியே சோதனையில் கிடைத்தாலும் பெரிதாக இருக்காது'' என்கிறார் அவர்.
இது இப்படியிருக்க, கோவை சிறைத்துறை அதிகாரிகள், சிறைச்சாலையை சுத்தம் செய்தல், மெயிண்டனென்ஸ் செய்தல் எனும் ஒரு வகையிலும், கைதிகளின் சாப்பாட்டில் கை வைத்தும் கல்லா கட்டுகின்றனர்.
"சாப்பாட்டில் மட்டும் கை வைத்தால் எந்தக் கைதியும் சும்மா இருக்கமாட்டான். தட்டை கவிழ்த்துவிட்டு போராட்டம் செய்ய ஆரம்பிச்சுடுவான். அதனால் பிரச்சனை பெரிசாயிடும். நாமளும் கல்லா கட்டணும், கைதிகளும் பிரச்சனை செய்யக்கூடாதென கைதிகளுக்கான பீடியை தாராளமயமாக்குகிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள். கோவை மத்திய சிறைச்சாலையைப் பொறுத்தவரை அரசு இடங்கள், அரசு அதிகாரிகள் வீட்டில் வேலை செய்வதற்கென 1 வார்டர் தலைமையில் 20 நபர்கள் குழுவைக் கொண்ட 10 கேங் உள்ளது. வேலைக்காக செல்பவர்களுக்கு சுமார் 45 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படும். கைதிக்கு நாங்கள் கொடுப்பது ரூ.15 மட்டுமே! வேலை செய்துவரும் வழியில் தலைக்கு 3 பீடிக்கட்டுக்களை வாங்கி சிறைக்குள் வருவார்கள். இதுபோல் ஒரு நாளைக்கு மூன்றுமுறை வேலை எனும் பெயரில் வெளியேறி 9-க்கும் அதிகமான பீடிக்கட்டுக்களை சிறைக்குள் கொண்டு வருகின்றனர். கைதிக்கு ஒரு கட்டு போக, மீதமுள்ள 8 கட்டு பீடிகளும் பீடி ஒன்று தலா ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் மட்டும் சிறை அதிகாரிகளுக்கு எவ்வளவு லாபம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சிறை அதிகாரிகளின் தற்போதைய சொத்துக் கணக்கை சோதித்தால் பல உண்மைகள் வெளியில் வரும்'' என்கிறார் அடையாளம் தவிர்க்கும் ஜெயிலர் ஒருவர்.
கோவை மத்திய சிறையைப் பொறுத்தவரை தங்களுக்கு ஒத்துழைக்காத கைதிகளின் மீது சோதனை எனும் பெயரில் வன்மத்தை புகுத்துவது வழக்கமான ஒன்று.! இதில் ஒன்றுதான் கடந்த வியாழனன்று நடந்த சம்பவம்.
மதுரையைச் சேர்ந்த தினேஷ்(எ) மண்டை தினேஷ், அய்யனார், அழகர்சாமி, ஹரிஹரன், கிஷோர்குமார், உதயகுமார், அரவிந்த் என்ற 7 கைதிகள் வால்மேடு பிளாக்கில் உள்ள அறைகளில் அடைக்கப்பட்டிருக்க, தங்களுக்கு ஒத்துழைக்கவில்லையென ராகுல், மோகன்ராஜ், பாபுஜான் மற்றும் விமல்ராஜ் ஆகிய 4 சிறைக் காவலர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் இரு தரப்பும் தாக்குதலை தொடங்கியது. " உனக்கு ஒத்து ழைக்கலைன்னா இப்படித்தான் செய்வியா..?" எனக் கேட்டுக் கொண்டே தங்களைத் தாங்களே பிளேடால் கிழித்துக்கொண்டு சிறைக்காவலர்களைத் தாக்கி யுள்ளனர் கைதிகள். அத்துடன் இல்லாமல் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி போராட்டம் மேற்கொண்ட னர்.
இதனையடுத்து இதர சிறைக்கைதிகளும் போராட் டத்தினை மேற்கொண்ட நிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்தி சிறைக் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சிறைத் துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை சூப்பிரண்டெண்ட் ஊர்மிளா ஆகியோர்.
சிறைத்துறையில் தொடர் விசாரணை நடத்தி, இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தாலொழிய சிறைத் துறையில் ஏற்படும் கலவரம் அடங்காது!