ர்வதேச தொண்டு நிறுவனமான "யுனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்', ஆண்டுதோறும் "அமைதிக்கான தூதர்' விருதுகளை வழங்கி வருகிறது. லண்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, நடப்பாண்டிற்கான "அமைதிக்கான தூதர்' விருதுக்கு நக்கீரன் ஆசிரியரைத் தேர்வு செய்தது. யுனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங்காவலரான டாக்டர் அப்துல்பாசித் சையத், "நீதியை நிலைநாட்டவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டவும், துணிச்சலான முயற்சிகளை மேற்கொண்டு, அச்சமின்றி உண்மையை அம்பலப்படுத்திய நக்கீரன் ஆசிரியர்' குறித்து "யுனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்' அமைப்பின் செயலாளர் ரோபின் மார்ஷிடம் தெரி வித்திருந்தார்.

awardforpeace

அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள "யுனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்' தொண்டு நிறுவனத்தின் தலைமை யிடத்தில் மார்ச் 23 அன்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. பி.பி.சி. -ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான திருமதி ரீதா பெய்ன் இவ்விருதை நமது ஆசிரியருக்கு வழங்கினார்.

"யுனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்' உலக அமைதிக்காகப் பாடுபடும் சர்வதேச அமைப்பாகும். இனம், மதம், தேச எல்லைகள் கடந்து கூட்டுறவின் மூலம் அமைதியை இலக்காகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு 2005-ல் தொடங்கப்பட்டது. அதன் தற்போதைய தலைவராக மைக்கேல் பால்காம்பும் செயலாளராக ரோபின் மார்ஷும் திகழ்கிறார்கள்.

விருது பெற்றபின் ஆசிரியர் தமிழில் பேச, அவரது மகள் சாருமதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். “"இந்த அமைதிக்கான தூதர் விருதைப் பெறுவது பெரிய கௌரவம். இந்தியாவில் லண்டனுக்குப் போய்வருவதே பெரிய விஷயம். அங்கே போய் விருதுபெற்று வருவது இன்னும் பெரிய சாதனை! இந்த விருதைப் பெற செய்த தியாகங்கள் அதிகம்.

Advertisment

awardforpeace

ஒரு சிக்கலான கடத்தல் விவகாரத்தில் இந்தியாவில், இரண்டு மாநிலங்களுக்கான தூதுவராக ஒரு பத்திரிகை யாளர் அமர்த்தப்பட்டது முன்பும் கிடையாது, இனியும் நடைபெறுமா எனத் தெரியாது. கர்நாடகாவில் தமிழர்கள் 65 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். ராஜ்குமார் கடத்தலால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது. இரு மாநில முதல்வர்களும் "நீங்கதான் தூதுவரா வீரப்பனிடம் போகணும்'னு கேட்டாங்க.

நான் பயப்பட்டேன். காரணம், வீரப்பன் 132-க்கும் அதிகமான நபர்களைக் கொன்றவர். மிகவும் சிக்கலான பணி. வீரப்பன் என்ன மனநிலையில் இருக்கான், என்ன கோரிக்கை வைப்பான் எனத் தெரியாமல் போவது எப்படி? தமிழகத்திலும் கர்நாடகத்திலுமாக அமைந்த 16,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடு அவனது ராஜ்ஜியம்.

ராஜ்குமாரைக் காப்பாத்தப் போய் ஏதாவதொரு தவறு நடந்தால், கர்நாடகத் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கும்? அப்படி ஏதும் நடந்தால் இரண்டு அரசும் என்னைத்தான் பொறுப்பாக்கும். இந்தச் செய்தியைக் கேட்டதும் நான் தலைமறைவாகி விட்டேன். அன்று மாலை, "நான் தூது போகாவிட்டால், தமிழ்மக்கள் 1 லட்சம் பேர் கொல்லப்படலாம் என ஒரு செய்தி வருகிறது.

Advertisment

awardforpeace

தமிழன் ஒருவன் ராஜ்குமாரைக் கடத்தியிருக்கிறார். இன்னொரு தமிழனோ தூது போக மறுக்கிறார்… என்பது போன்ற மனப்பதிவு ஏற்படக் கூடாது, ஒரு லட்சம் தமிழர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக நான் இந்தத் தூதுப் பணியை ஒப்புக்கொண்டேன். பின் 108 நாட்கள் காட்டுக்குள் சென்று வீரப்பனிடம் பேசிப் பேசி ராஜ்குமாரை மீட்டுவந்தேன். இத்தனை சிரமத்துக்கு, போராட்ட வலிகளுக்குக் கிடைத்த ஒத்தடம்தான் இந்த விருது. நான் பெரியவர் களாகக் கருதும் அப்துல் பசித் செய்யத், ரீதா பெய்ன் முன்னிலையில் மைக்கேல் கையால் இந்த விருதை வாங்குவது பெருமை

நக்கீரன் வீரப்பனை மட்டுமல்ல, பல விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆட்டோ சங்கர் சுயசரிதை எழுதத் தடைவந்த போது, உச்சநீதிமன்றத்தை அணுகி ஒரு தீர்ப் பைப் பெற்றோம். அந்தத் தீர்ப்பு இன்றுவரை பத்திரிகையாளனுக்கு ஒரு வேதப் புத்தகம்போல் இருக்கிறது. அதிகார அமைப்பில், அரசின் தடையை எதிர்கொள்பவர்களுக்கு இந்த தீர்ப்பு இன்றும் உதவியாக இருக்கிறது.

awardforpeace

நான் "சித்ரவதை' என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் சிறப்பு தேடுதல் படை, அங்கிருந்த மலைவாழ் மக்களைத் துன்புறுத்தி னார்கள். பெண்களை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கினார்கள். சொல்லொணாக் கொடுமை களுக்கு ஆளாக்கினார்கள். அந்தக் கொடுமை களை ஆதாரத்துடன் மனித உரிமை ஆணையத் துக்குக் கொண்டுபோனோம். ஆதாரங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் சதாசிவா கமிஷனை அமைத்தார்கள். அந்த கமிஷனின் உத்தரவின் அடிப்படையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார்கள்.

awardforpeace

மலைவாழ் மக்கள் சித்ரவதைக்கு ஆளான விஷயத்தில் நக்கீரன் தலையிட்ட பிறகே, அவை யெல்லாம் முடிவுக்கு வந்தன. அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அதுதான் எங்களுக்குக் கிடைத்த பெருமை. இந்த "சித்ரவதை' நூலில், அன்று நடந்தவற்றை ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறோம். வீரப்பன் கடத்தலில் இரு மாநிலத் தூதுவராகச் சென்றதற்கு, ஆட்சி மாறிய பிறகு பொடா வழக்கு, 3 கொலை வழக்குகள், 4 கடத்தல் வழக்குகள், ஆயுதப் பதுக்கல் வழக்குகள் எனப் பரிசுகள் கிடைத்தன. நான் ஒன்பது மாதத்துக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டேன்.

எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மனிதாபிமானச் செயலில் ஈடுபட்டால், அதற்கான பலன் கிடைக்கும் என்பதற்கு 22 வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த விருதே சாட்சி''’என்று பேசி முடிக்க... அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. விரைவில் ஆங்கிலத் தில் வரவிருக்கும் "சித்ரவதை' புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பை ரோபின் மார்ஷ், அப்துல் பாசித் ஆகியோரிடம் அளித்தார் ஆசிரியர்.

(யுனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் விழாவில் பேசிய முக்கிய ஆளுமைகளின் உரைகள் வரும் இதழில்…)

-தொகுப்பு: க.சுப்பிரமணியன்