கடந்த காலங்களில் தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், உட்கட்சி பூசல்களால் வலுவிழந்து வருகிறது தி.மு.க. கோட்டை. தளபதிகளாக இருந்த மன்னை, கோ.சி.மணி ஆகியோரின் மறைவுக்கு பிறகு, ஒருங்கிணைந்த தஞ்சை மீதிருந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கி விட்டார்கள் என்று புலம்புகிறார்கள் தஞ்சை மூத்த உ.பி.க்கள்! இளரத்தம் பாய்ச்ச வேண்டுமென்று இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்சிப் பதவிகளாலும், ஆட்சிப் பதவிகளாலும் அவர்கள் தான் வளர்கிறார்களே தவிர, கட்சியை வளர்க்கவில்லையென்று குற்றம்சாட்டுகிறார்கள்.
தஞ்சை தி.மு.க. நிலை குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தோம்.
கலைஞரின் சோழ மண்டலத் தளபதியாக இருந்த கோ.சி.மணிக்கு வயதான நிலையில், எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் தனக்கென கோஷ்டியை உருவாக்க, திருவையாறில் தொடங்கி பேராவூரணி வரை தி.மு.க.வில் உடைப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் டி.ஆர்.பாலு சொந்த மாவட்ட அரசியலுக்குள் வர, மீண்டும் பிளவு ஏற்பட்டது. அதனால் தி.மு.க. தோல்வியையும் சந்தித்தது. டி.ஆர்.பாலு மீண்டும் சென்னைக்கே திரும்ப, அவரது அணியிலிருந்தவர்களும், திருவையாறு துரை.சந்திரசேகர், டி.கே.ஜி நீலமேகம் ஆகியோருமாக ஓர் அணியை உருவாக்கினர். மா.செ. ஆக்கப்பட்டார் துரை.சந்திரசேகர். ந.செ. ஆனார் நீலமேகம். பழநிமாணிக்கத்தின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்தது.
இந்நிலையில், தி.மு.க.வில் இளரத்தம் புகுத்த வேண்டுமென்று முடிவெடுத்த தி.மு.க. தலைமை, மாநகர தேர்தலில் கலைஞர் குடும்பத்துடன் நெருக்கமான டாக்டர் அஞ்சுகம் பூபதிக்கு கொடுக்கப் பட்ட வாய்ப்பை உட்கட்சிப் பூசல்களால் இழந்தார். மீண்டும் மாநகர மேயர் பதவிக்காக நீலமேகம் காய் நகர்த்தும்போது, மா.செ.வான சந்திரசேகரன், இளைஞரான சண்.ராமநாதனை மேயராக்கலாமென்று சென்னைவரை அழைத்துச் சென்று வாங்கிக்கொடுத்தார். துணை மேயராக அஞ்சுகம் பூபதி தேர்வு செய்யப்பட்டார். நீலமேகம் போட்டி வேட்பாளரைத் தயார் செய்ய, தலைமை கண்டித்ததால் அமைதியானார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய சண்.ராமநாதன், நீலமேகத்திடமிருந்த ந.செ. பதவி, மாநகர செயலாளர் பதவியானபோது அதனைத் தனதாக்கிக்கொண்டதால் நீலமேகம் டம்மியாக்கப்பட்டார். இதனால் இருவருக்குமான மோதல் உச்சமடைந்துள் ளது. அதேபோல, மாநகராட்சியில் வரக்கூடிய ஒப்பந்தங்களை நான் சொல்லும் ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கிக் கொடுங்கள் என்று மா.செ. துரை.சந்திரசேகர் மேயரிடம் சொல்லியும், அத னைப் புறக்கணித்தார் சண்.ராம நாதன். இதனால் மா.செ. -மாநகர மேயர் (மாநகரச் செயலாளர்) மோதல்கள் அதிகரித்துள்ளது. கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நான் செலவு செய்யணும், மாநகர வருமானம் மட்டும் ஒரே ஆளுக்கு போகுது என்று ஆதங்கப்பட்டு வருகிறார் மா.செ.
அதே நேரத்தில், மாநகராட்சியில் ஏற்படும் பிரச்சனைகளை சில தி.மு.க. கவுன்சிலர்களே கட்சித்தலைமை வரை புகார் மனுக்களாக அனுப்பியுள்ளனர். மேலும், தற்காலிகப் பணியிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பணி நிரந்தரம் வாங்கித்தருவதாக முன்பிருந்த ஒரு மாநகர அதிகாரி மூலம் மேயரை சந்திக்க வைத்து, இதுவரை அவர்களுக்கு நிரந்தரப் பணி கொடுக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஒரு பெட்டிசன் தலைமைச் செயலகம்வரை சென்று, விசாரணை முடக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. கவுன்சிலர்களே குற்றம்சாட்டுகின்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர் களோ, "எங்க ஆட்சி வரட்டும், புகார்களை தூசிதட்டி எடுப்போம்' என்கின்றனர்.
மற்றொரு பக்கம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பழநிமாணிக்கத்திற்கு எதிரான மனநிலையை கட்சித்தலைமை வரை உருவாக் கிய மா.செ. டீம், பழநிமாணிக்கம் உறவினரான முரசொலியையே எம்.பி. வேட்பாளராக்க அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலம் தலைமையை அணுகி சாதித்தது. வெற்றிபெற்ற முரசொலி, நகரிலிருந்த அம்மா நூலகத்தில், உதயநிதியை அழைத்துவந்து தனது பாராளு மன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். மாஜி பழநிமாணிக்கத்தால் வெளியேற்றப்பட்ட பலர், முரசொலியின் அலுவலகத்தில் தஞ்சமடைந்து, எம்.பி.யை பார்க்க வருவோரைத் தடுத்து வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத் தில், "நீங்க கலந்துகிட்டால் எங்கள் கோரிக் கைகளை நிறைவேற்றவும், பாராளுமன்றம்வரை கொண்டு போகவும் வசதியாக இருக்கும். கூட்டத்துக்கு வாங்க'' என்று எம்.பி.யை விவசாய சங்கங்கள் அழைத்தும் கண்டுகொள்ளாத கோபத்தில் விவசாயிகள் உள்ளனர். அதேபோல "மாவட்ட ஊராட்சி பதவிக்காலம் முடியப் போகுது, எங்க கூட்டத் துக்கு வாங்க''ன்னு மாவட்ட கவுன்சிலர்கள் அழைத்தும் எம்.பி. கண்டுகொள்ளவில்லை. ஆனால் மீண்டும் அன்பில் மகேஷ் மூலமாக மேலிடத்தை அணுகி, சந்திரசேகரிடமுள்ள மா.செ. பதவியை வாங்கிடக் காய் நகர்த்தி வருகிறார்.
மா.செ. துரை.சந்திரசேகரோ, தன்னால் அடையாளம் காட்டப்பட்டவர்களே தனக்கு எதிராகத் திரும்பியது குறித்து புலம்புவதோடு, தனது பதவியைத் தக்கவைக்கப் போராடுகிறார். அதே நேரத்தில் மாஜி பழநிமாணிக்கம், மீள்எழுச்சி பெறும்விதமாகத் தற்போது உதயநிதியை பிடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த மாதம் தஞ்சை வந்த உதயநிதி, "என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் அண்ணன் பழநிமாணிக்கம்தான்'' என்று பேசி அவரைக் குளிர்வித்தார். இதனால் எதிர்வரும் தேர்தலில் தனக்கான ஒதுக்கீட்டைப் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் அவர்.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி தஞ்சாவூருக்கு வருகைதந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சிக் கூட்ட அரங்கிற்கு சென்றபோது, மேடைகூட சரிவர அமைக்கப்படாமல், ஏனோதானோ வென்று அரங்கம் கைவிடப்பட்ட நிலையில் கிடந்ததாம். அதேபோல் உதயநிதி பேசுவதற் கான மைக் கூட இல்லையாம். இதையெல்லாம் பார்த்து கடுப்பான உதயநிதி, மேடைக்குகூடச் செல்லாமல், முக்கிய நிர்வாகிகளோடு மேடைக்கு கீழே நாற்காலிகளைப் போட்டமர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு கோபத் துடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாராம்.
அதோடு, தஞ்சை தி.மு.க.வின் நிலை குறித்து தன்னுடைய உதவியாளரிடம் விசாரித்த போது, தஞ்சை மாநகர செய லாளர் சண்.ராமநாதன், மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகர் ஆகியோர்தான் காரணம் என் றும், தஞ்சையில் மட்டும் தி.மு.க. 4 பிரிவுகளாகப் பிரிந்து கிடக் கின்றனர். அவர்களுக்குள் ஏகப் பட்ட கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதில் தொழில் ரீதியாகவும், கட்சிப் பொறுப்பு ரீதியாகவும், பல முரண்பாடுகள் இருப்பதால், அவர்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் இணைந்து செயல்படுவதில்லை என்றும், யாராவது ஒருத்தரை கீழே தள்ளிவிட்டு மேலே வரவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவர் களுக்குள் மேலோங்கியிருக்கிறது என்ற தகவல் தலைமைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி.செழியன் பொறுப் பேற்றுக்கொண்டார். அவருக்கும் அந்த மாவட் டத்தில் மதிப்பில்லை. கட்சியிலுள்ள எந்த அணி பொறுப்பாளர்களையும், யாரும் யாரை யும் மதிப்பதில்லை. அமைச்சர் என்ற பதவிக் காகக்கூட தஞ்சை தி.மு.க. கட்சி சார்பில் மரியாதை கொடுக்கப்படவில்லையென்பதால் கட்சியின் நிலை குறித்து உதயநிதி உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளாராம். தஞ்சை மாவட்டப் பொறுப்பாளராக அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்த காலகட்டத்தில் இந்த கோஷ்டிப்பூசல் பெரிதாக வெளியே தெரியவில்லை. ஆனால் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், துரை.சந்திர சேகரின் கை ஓங்கியதோடு, அமைச்சர் என்ற பதவிக்கு உண்டான மரியாதையைக்கூட செலுத்த மறுப்பதாகக் கூறுகின்றனர்.
தஞ்சையைப் பொறுத்தவரை மேலிடமாவது, கீழிடமாவது, எங்களுக்குத் தேவை பதவி. அதற்காக நாங்கள் என்ன வேண்டு மானாலும் செய்வோம் என்று ஒருவருக் கொருவர் தலைமையில் போட்டுக்கொடுத்து நல்ல பெயரெடுத்து, பொறுப்பை வாங்க வேண்டுமென்பதில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துகிறார்களாம்.
இந்த கோஷ்டிப் பூசல் ஒருபக்கம் இருந்தாலும், தஞ்சைக்கு துணை முதல்வர் வருகிறாரென்று அறிந்து, அவருடைய வருகைக்கான பணியில் கட்சித் தொண்டர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டி ருந்தார். அப்போது கட்சிக் கொடியை கம்பத்தில் கட்டிக்கொண்டிருந்த போது மின்கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் அந்தத் தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு ஒரு இரங்கல் தீர்மானம்கூட தெரிவிக்காமல் எங்களுக் கென்னவென்று தி.மு.க.வினர் தங்களது வேலைகளைப் பார்த்துள்ளனர். இது தெரிந்து உதயநிதி கோபத்தின் உச்சிக்கே சென்றதாக விவரமறிந்தவர்கள் கூறினார்கள்.
இப்படி ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு தனித்தனியாக சுயலாப அரசியலில் முந்தத் துடித்துக் கொண்டிருப்பதால், டெல்டா தி.மு.க. கோட்டையில் தொடர்ந்து ஓட்டை விழுந்து வருகிறது.
இதனை இப்பவே கட்சித் தலைமை கண்டுகொண்டால் மட்டுமே எதிர்வரும் தேர்தலில் சாதிக்க முடியும் என்கின்றனர் மூத்த உடன்பிறப்புக்கள்!
-பகத்சிங், துரை.மகேஷ்