வேங்கைவயலின் வீர்யம் இன்னும் கனன்று கொண்டிருக்கும் நிலையில், போலீஸாரின் அலட்சியத்தால் மதுரை மாவட்டத்தில் தீண்டாமைக்கொடுமை நடப்பதாக அம்பலப்படுத்தியுள்ளது, ஓர் விசாரணை அறிக்கை!

பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவானது. 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம், 1976ஆம் ஆண்டு பி.சி.ஆர். சட்டமாகவும், பின்னாளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டமாகவும் திருத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. எனினும் இதன் பயன் பூஜ்யமே! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருடந்தோறும் சுமார் 3000-திற்கும் அதிகமான புகார்கள் வந்தாலும், அதில் 800 வழக்குகள் வரை மட்டுமே பதிவு செய்யப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட இவ்வழக்குகளின் புகார் பொய்யானது என முடித்துவிடுகின்றனர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.க்கள். இதனைத் தாண்டி நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், அங்கே சமாதானம் பேசி வழக்குகளை முடித்து விடுகின்றனர் என்கிறது புள்ளிவிபரம்.

dd

Advertisment

கட்டாரப்பட்டி, கரிசல்பட்டி மற்றும் பழையூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பழையூர் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பைச் சேர்ந்த வித்யாவோ, "பழையூர் ரேசன் கடை முன்புள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கழித்தது, அதே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பைப் லைன்களை அறுத்தது, சாதியைச் சொல்லித் திட்டியது, ஊராட்சி மன்ற வாசலில் மலம் கழித்தது, கிராமசபைக் கூட்டம் நடத்த விடாமை, குளியல் தொட்டியில் 15 தடவை மலம் கழித்தது எனப் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவரான என்னைப் பணி செய்யவிடாமல் சாதிய ரீதியாகத் தடுக்கின்றனர். அவர்கள் மீது, வன்கொடுமை திருத்தச்சட்டம் 2015ன் கீழ் வழக்குப் பதிவு செய்து வன்கொடுமை கும்பலை கைது செய்ய வேண்டும். மேலும், அத்துமீறல்களை விசாரணை செய்வதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்'' எனக்கூறி, அரசிற்கு புகார் அனுப்பியுள்ளார்.

04-03-2023, 07-03-2023 அன்று மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவின் டி.எஸ்.பி. கருப்பையா விசாரணை நடத்தி, 14-03-2023 அன்று 20 ஆவணங்களை இணைத்து, 17 பக்க விசாரணை அறிக்கையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தாக்கல் செய்திருக்கின்றார். அதில், "பழையூரில் குறிப்பிட்ட இரு சமூகத்தினருக்கு பிரத்யேக சமுதாயக்கூடம் உள்ளது. இந்நிலையில், அனைத்து சாதி மக்களுக்கும் பொதுவான சமுதாயக்கூடம் ஒன்று அரசின் சார்பாகக் கட்டப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்ட இரு சமூகத்தினருக்கான சமுதாயக்கூடத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்பதால், பஞ்சாயத்துத் தலைவருக்கு இடைஞ்சல் செய்து வருகின்றனர். அதுபோல் ஊராட்சிமன்ற உப தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது'' எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisment

dd

"பிரச்சனையின் ஊற்றுக்கண்ணே போலீஸ் தான் என்றும், சாதியைக் கூறித் திட்டி பணிசெய்ய விடாமல் தடுப்பதாக 22-02-2020 அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றார் வித்யா. ஆனால் வெறும் மனு ரசீது மட்டும் கொடுத்துவிட்டு இரு தரப்பையும் சமாதானம் செய்துள்ளது போலீஸ். இப்படியான புகார்களில் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிந்து, வழக்கினை விசாரித்து முடிவு செய்ய வேண்டும். அந்த வழக்கு பொய்யானது என்றால், அதனை ஆதிதிராவிடர் நல ஆணையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். அதைவிடுத்து, போலீஸே பொய்யான புகாரென்று வழக்கை முடிக்கக்கூடாது என்கிறது வன்கொடுமை திருத்தச்சட்டம் 2015. ஆனால், எதிர்த்தரப்பிடம் பணத்தை வாங்கிக்கொண்டும், புகார்தாரரை மிரட்டியும், எப்.ஐ.ஆர். போடாமல் விட்டுவிடுவார்கள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமை தடுப்பு டி.எஸ்.பி.யாக பணியாற்றுபவர்களின் சொத்துப்பட்டியலைப் பார்த்தாலே தெரியும். வேங்கைவயல் சம்பவத்திலும் அப்படியே. தீயத்தூர், திருப்புனவாசலிலும் இதுபோலவே நடக்கிறது'' என்கிறார் காவல்துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்.

சமூகநீதி அமைப்பின் ஆறுமுகமோ, "புகார் பெறப்பட்டதும், பதிவு செய்தல், தொடர் சட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் தான் போலீஸாரின் செயல். இது நடக்கின்றதா என்பது கேள்விக்குறியே! வன்கொடுமைப் புகார்களை பொய்ப் புகார்கள் என்று போலீஸாரே தீர் மானிக்கிறார்கள். தீண்டாமை வன் கொடுமைப் புகார்களை, உண்மையல்ல என்று தீர்மானிக்கிற அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்குத்தான் உண்டு. அதுவும் மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட அதிகாரம் அல்ல'' என்கிறார்.

"சாதி ரீதியாக தீண்டாமையும், பாகுபாடுகளும் இன்றும் அதிகளவில் தொடர்வது வேதனை தருகிறது. மிகச் சிக்கலான, சவாலான இந்த படிநிலைகள் அகற்றப்பட வேண்டும். கலப்புத் திருமணம் அதிக அளவில் நடைபெற வேண்டும். பள்ளி, கல்லூரிகள் சமத்துவத்தை போதிக்கும், நடை முறைப்படுத்தும் இடமாக மாற வேண்டும். அரசு, தனியார் வேலை வாய்ப்புகளில் சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதோடு, அவர்களை சாதி யற்றோராக அறிவிக்க வேண்டும்'' என்கிறார் பழங்குடி செயற்பாட்டாள ரான தன்ராஜ். சமூக நீதிக்கான அரசு, இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலொழிய தீண்டாமை ஒழியாது.