ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடுப்பு மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத நிலையில், விலைமதிப் பில்லா மனித உயிர்கள், ஆன்லைன் ரம்மி என்ற மோசடி வலையில் சிக்கிப் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.
நெல்லை மாவட் டத்தின் பணகுடி அருகேயுள்ள ஸ்ரீரகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயியான பாஸ்கரனுக்கு இரண்டு பெண்கள், ஒரு மகன். மகள்கள் இருவரும் திரு மணமாகி செட்டிலாகி விட, இன்னமும் திருமண மாகாத மகன் சிவன்ராஜ், ஆக்டிங் டிரைவராக யார் அழைத்தாலும் சென்று பணியாற்றிவந்தார். அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு பொழுதுபோக்காக ஆன்லைன் ரம்மியை விளையாடத் தொடங்கியிருக்கிறார். தொடக் கத்தில் சில ஆயிரங்களை வென்றதால் ஏற்பட்ட ஆர்வத்தில், பத்தாயிரம், இருபதாயிரமென்று கடன் வாங்கி விளையாடத் தொடங்கி யிருக்கிறார். அதில் பணத்தை இழக்க, கடனை அடைக்க அப்பாவிடம் நச்சரித்துப் பணத்தைப் பெற்று, அந்த பணத்தையும்வைத்து விளையாடியிருக்கிறார்.
ஒருமுறை, மூவாயிரம் ரூபாய் செலுத்தி விளையாடியதில் 7 லட்ச ரூபாய் கிடைத் திருக்கிறது. உடனே, பணத்தை லட்ச லட்சமாக அள்ளலாமென்ற வெறியில், அந்த ஆன்லைன் ரம்மி நிறுவனத்திலேயே கடன் பெற்று, லட்ச லட்சமாகக் கட்டி விளையாடி மொத்தத்தையும் இழந்திருக்கிறார். நிலைமை கைமீற, அவனது கடனடைப்பதற்காக அப்பாவிடம் தற்கொலை மிரட்டல்விட்டு, அப்பாவின் ஒரே சொத்தையும் விற்கும்படி செய்திருக்கிறான். விடாமல் ரம்மியைத் தொடர.. கடனும் அதிகரிக்க, கடந்த ஜனவரி 10ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனவன், மறுநாள், வீட்டருகேயிருந்த தோட்டத்தில் பூச்சி மருந்தை அருந்தி இறந்த நிலையில்தான் கிடைத்திருக்கிறான். தக வலறிந்துவந்த பணகுடி போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி யுள்ளனர். செல்லமாக வளர்த்த மகனை ஆன் லைன் சூதாட்டத்துக்குப் பறிகொடுத்து புலம்பிக் கொண்டிருக்கிறார் அப்பா.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடுத்தடுத்த பலியாக, தூத்துக்குடி அருகேயுள்ள தட்டப் பாறை கிராமத்தில், ஆவுடையப்பன் என்பவரின் மகன் பாலன் பலியாகியுள்ளார். இஞ்ஜினியரிங் பட்ட தாரியான இவர், தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர், மூன்று லட்ச ரூபாய்வரை முதலில் இழந்திருக் கிறார். பின்னர், விட்டதைப் பிடிக்க நினைத்தவர், வங்கி அக்கவுண்டில் செலுத்துவதற்காகத் தனது தந்தை கொடுத்த 50 ஆயிரம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்திருக்கிறார். மனமுடைந்த பாலன், 'ஆன்லைன் ஆட்டத்தில் எல்லாம் இழந்து விட்டேன். என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன்' என்ற குறுஞ்செய்தியை நண்பனுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி நடத்திய விசாரணையில், ஆன்லைன் ரம்மியால் இந்த தற்கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இந்த தற்கொலைகளுக்கு என்ன பதிலிருக்கிறது ஆளுநரிடம்?
-செய்தி, படம்: ப.இராம்குமார்