"வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' திரைப்படத்தில் கமல்ஹாசன், மார்க்கபந்து என்பவரை தனக்காக தேர்வு எழுத வைப்பார். அதே பாணியில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கரன், இளைஞர் ஒருவரை வைத்து தேர்வெழுதி கைதாகிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தொலை தூரப் படிப்பிற்கான பருவத் தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி முதல் துவங்கி நடந்துவருகிறது. இந்த தேர்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமை பொலிடிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வந்தவர்களிடம் வழக்கம்போல அடையாள அட்டை மற்றும் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை கண்காணிப்பாளர் பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது பாஸ்கர் என்று சொல்லிக்கொண்டு தேர்வு எழுதவந்த நபருக்கும், அடையாள அட்டை மற்றும் தேர்வு அறை நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், அடுத்த நிமிடமே தேர்வு நடத்தும் அலுவலருக்கு தகவல் கொடுத்ததோடு அவரிடமிருந்த அனைத்து ஆவணங் களையும் கைப்பற்றினார்.
அந்த நபரிடம் கண்காணிப்பாளரும், தேர்வு நடத்தும் அலுவலரும் நடத்திய விசாரணையில், தேர்வு எழுத வந்த நபர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பதும், திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கருக்காக தேர்வு எழுத வந்ததும், திவாகர் மாதவன் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே முடித்து விட்டு பீஃப் கடை நடத்திவருவதாகவும், பா.ஜ.க. கல்விப் பிரிவு மாவட்டச் செயலாளர் கூடூர் ரமேஷ் என்பவர் ஆறாயிரம் பணம் கொடுத்து தன்னைத் தேர்வு எழுத அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர் நாகரத்தினம் தாலுகா காவல்துறையில் புகார் அளித்தார். ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீசார், ஆள்மாறாட்டம் செய்யவைத்து தேர்வு எழுத அனுப்பிய பா.ஜ.க. மாவட்ட கல்விப் பிரிவு செயலாளர் ரமேஷ் மற்றும் தேர்வு எழுதிய திவாகர் மாதவனை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி திருவாரூர் பா.ஜ.க. மாவட்ட தலைவரான பாஸ்கரனை விசாரணைக்கு அழைப்பதற்காக கூத்தாநல்லூர் அடுத்துள்ள தோட்டச்சேரி கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆள்மாறாட்ட விவகாரத்தை அறிந்த பாஸ்கரன் அங்கிருந்து தலைமறைவானார். எனினும், திருவாரூர் மடப்புரம் பகுதியிலுள்ள கட்சிப் பிரமுகர் ஒருவரது வீட்டில் பாஸ்கர் இருப்பதாக கிடைத்த தகவலின்படி கைது செய்துள்ளனர்.
திருவாரூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்லப்பட்ட பாஸ்கரனிடம் திருவாரூர் டி.எஸ்.பி. சிவராமன் தலைமையிலான போலீசார் விசாரணையைத் துவங்குவதற்குள்... திரைப்பட பாணியில் நெஞ்சு வலிப்பதாக நெஞ்சைப் பிடித்துள்ளார். கோபமான போலீசார், “"உன்னோட நாடகம் எல்லைமீறிப் போகுது, மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வச்சுக்கிறோம்'’என கூறி சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையிலிருந்த பாஸ்கரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயம் சீரான முறையில் இயங்குவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தனக்கு நெஞ்சுவலி குறையவில்லை எனக்கூறி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்க கேட்க, அங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தோம். "திருவாரூர் மாவட்ட கல்விப் பிரிவுச் செயலாளராக இருக்கும் ரமேஷ்குமார் இன்ஸ்டிடியூட் நடத்திவருகிறார். அதில் மாவட்டத்தின் முக்கிய புள்ளிகளை வளைத்து டிகிரி படிப்பதற்கான வேலையைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். முக்கிய புள்ளிகளிடம் லட்சக்கணக்கில் பணத் தைப் பெற்று அவர் களுக்குப் பதிலாக திவாகர் மாதவனைப் போல சில இளைஞர்களை வைத்துக் கொண்டு தேர்வெழுத வைப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். அப்படித்தான் பாஸ்கர னும் படிக்காமல், தேர்வு எழுத பணம் கொடுத்திருக்கிறார். ரமேஷ்குமாரையும், திவாகர் மாதவனையும் கைதுசெய்து நன்னிலம் சிறையில் அடைத்திருக்கிறோம். பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கரன் நெஞ்சுவலி என ஒரு பொய்யைக் கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிறைக்கு அனுப்பப்படுவது நிச்சயம்'' என்றார்.
மேலும், "திருவாரூரிலிருந்து மும்பைக்குச் சென்று "அயன்' பட பாணியில் தங்க மாத்திரைகளைக் கடத்திவந்த புறா விஜய் என்பவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளின் பாதுகாப்புக் கூடாரமாக பா.ஜ.க. மாறிவிட்டது'' என்கின்றனர் ஆதங்கமாய்.
இதற்கிடையில் அவசர அவசரமாக திருவாரூர் தனியார் ஹோட்டலில் பத்திரிகை யாளர்களை சந்தித்த கருப்பு முருகானந்தம், "இந்த பிரச்சனைக்கும் மாவட்ட தலைவர் பாஸ்கரனுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது, திட்டமிட்டே அவரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த வேலையைச் செய்துள்ளனர்'' என்றார்.
அவரிடம், “தேர்வு எழுத ஏற்பாடு செய்தவரும் பா.ஜ.க. பிரமுகர்தானே” என்ற கேள்விக்கு, “"விசாரணைக்குப் பிறகு எல்லா விஷயங்களும் தெரியவரும்''’என முடித்துக் கொண்டார்.