ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சோளிங்கர் நகராட்சி போல் மிக மோசமான நகராட்சி வேறு எங்கும் கிடையாது எனப் புலம்புகிறார்கள் மக்கள் பிரதிநிதிகளும், வியாபாரிகளும். இதுகுறித்து நம்மிடம் பேசிய சோளிங்கர் நகர ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிகள் சிலர், "நகராட்சி யில் கடந்த ஏப்ரல், மே என இரண்டு மாதமாக நகரமன்ற கூட்டமே நடக்கவில்லை. இதுபற்றி சேர்மனிடம் கேட்டால் காரணமே சொல்வ தில்லை. நகரப் பகுதியில் சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள், ஆட்டோக்கள், வெளியூரில் இருந்து பொருட்கள் ஏற்ற, இறக்க வருகை தரும் ஆட்டோக்கள், மினி லாரிகளிடம், காய்கறிக் கடைகளில் தினசரி சுங்கவரி கடைக்கு, வாகனங்களுக்கு தகுந்தாற்போல் 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
மார்ச் மாதம் 31ஆம் தேதியோடு குத்தகைக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் குத்தகை எடுத்த ஒப்பந்ததாரர் அருண் இப்போதுவரை சுங்கவரி வசூலித்துக்கொண்டே உள்ளார். ஏலம் விடாததால் பல லட்சம் அரசுக்கு நஷ்டம். சட்டவிரோதமாக சுங்கவரி வசூல் நடத்துவது குறித்து சேர்மன், கமிஷனரிடம் மக்கள் பிரதி நிதிகள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் முறையிட்டும் இருவருமே கண்டுகொள்ள வில்லை. நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளைக் கண்காணிக்க நகராட்சிப் பகுதியில் 120 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 32 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது, 2022 டிசம்பர் மாதம் அமைச்சர் காந்தி அதனைத் தொடங்கிவைத்தார். அடுத்த சில நாட்களில் மூடப்பட்ட மானிட்டரிங் அறை இப்போதுவரை திறக்கப்படவில்லை, நகராட்சியால் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களில் ஒன்றுகூட செயல்படவில்லை.
பொன்னையில் இருந்து சோளிங்கர் நகரத்துக்கு 5 குடிநீர் கிணறுகளில் இருந்து குடிநீர் வருகிறது. 20 கி.மீ. பயணமாகிவரும் அந்த பைப்லைன் பல இடத்தில் உடைந்துள்ளது, அதனை சரிசெய்யச் சொல்லி பலமுறை நகரமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சோளிங்கர் நகரத்தில் புறவழிச் சாலை கிடையாது. திருத்தணி, ஆர்.கே.பேட்டை செல்ல வேண்டுமென்றால் நகரத்தின் உள்பகுதி சாலை வழியாகத்தான் செல்லவேண்டிய நிலை என்பதால் போக்குவரத்து நெரிசலால் தினம், தினம் சிக்கித்தவிக்கிறது. சாலை களை ஆக்ரமித்து கடைகள் வைத்திருப்பதால் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மேற்கு போடின்பேட்டை முதல் வாலாஜா ரோடு காந்தி சிலை வரையுள்ள சாலை ஆக்ரமிப்புகளை அகற்றச் சொல்லி பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் திறந்தபின் காலை, மாலை நேரத்தில் இந்த நெரிசல் இன்னும் அதிகரித் துள்ளது'' என்றனர்.
8வது வார்டு கவுன்சிலர் காங்கிரஸ் கோபால் நம்மிடம், "அப்பங்கார குளத்தின் பெரும்பான்மை பகுதிகளை ஆக்ரமித்து சிலர் வர்த்தக ரீதியி லான கடைகளைக் கட்டிக்கொண் டுள்ளார்கள். பழனியப்பா காப்பகம் என்கிற பெயரில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிறுவர் பூங்கா மற்றும் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. இந்த ஆக்ரமிப்பை அகற்றச் சொல்லி நகராட்சிக் கூட்டத்தில் பலமுறை பேசிவிட்டேன், தாசில்தாரிடம் மனு தந்துவிட்டேன் இப்போது வரை நடவடிக்கை இல்லை. எது கேட்டாலும் அலுவலர்கள் இல்லை, பணியாளர்கள் இல்லை என்கிற பதிலே கிடைத்துவந்தது. அரசாங்கம் இப்போது புதிய பணியாளர்களை நியமனம் செய்துள்ளதால் இனியாவது நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதைப் பார்க்கவேண்டும்'' என்றார்.
குற்றச்சாட்டுகள் குறித்து சோளிங்கர் நகரமன்றத் தலைவர் தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, அவரது கணவரும் 14வது வார்டு கவுன்சிலருமான தி.மு.க. அசோகன் நம்மிடம், "சாலையோர ஆக்ரமிப்புகளை அகற்று வது தொடர்பாக நட வடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தேதி முடிந்தும் சுங்க வரி வசூலிப்பதாக எங்க ளுக்கு புகார்கள் வந்தன. இதன்மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி ஆணை யரிடம் கூறினோம். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்ததால் நகராட்சிக்கு வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே வந்தார். மற்ற நாட் கள் லீவு போட்டு விடுவார். இதனால் நகரமன்றக் கூட்டம்கூட நடத்தமுடியாமல் இருந் தது.
இப்போது அரக் கோணம் ஆணையர் இங்கு பொறுப்பு ஆணையராக நிய மிக்கப்பட்டுள்ளார். விரைவில் சுங்கவரி வசூலிப்பதற்கான டெண்டர் விடப்படும். எங்கள் நகராட்சியில் குரங்குகள் அதிகம், அவை சி.சி.டி.வி. கேமரா ஒயர்களை அறுத்துவிட்டன. இதனால் தடிமனான ஒயர்கள் வாங்கிப் பயன்படுத்தவும், பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம். இது பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக உயர்வு பெற்றது. இங்கு சுமார் 36 பணியிடங்களில் 3 பணியிடத்துக்கு மட்டுமே அலுவலர்கள் இருந்தனர்.
கடந்த ஓராண்டாக அவர்களை வைத்தே எல்லா பணிகளையும் செய்துவந்தோம். நகர்ப்புற அமைச்சர் நேருவை, எங்கள் மாவட்ட அமைச்சர் காந்தி மூலமாக மூன்று முறை சந்தித்து கோரிக்கை விடுத்தபின் இப்போது பாதி காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இனி பணிகள் வேகமாக நடைபெறும், பிரச்சனைகள் சரிசெய்யப்படும்'' என்றார். மக்களின் பிரச்சனைகள் தீர்ந்தால் சரி!