புரோக்கர்களை வைத்து ஆள் பிடித்து, பெண்களுக்கு சட்டவிரோதக் கருக் கலைப்பை நடத்தி, அவர்களின் உயிரோடு விளையாடி வந்த ஒரு பகீர் கும்பலை காவல்துறை மடக்கி இருக்கிறது.
இந்தக் கும்பல் சிக்கியது எப்படி தெரியுமா?
கடந்த மாதம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தாங்க முடியாத வயிற்று வலியோடு வந்து ஒரு பெண் அட்மிட் ஆனார். பரிசோதனையில், அந்தப் பெண்ணின் வயிற்றில் ஒரு சிசுவின் தலை துண்டிக்கப் பட்ட உடல்பகுதி மட்டும் இருப்பது தெரிய வந்தது.
வயிற்றில் இருக்கும் சிசு, கொஞ்சம் வளர்ந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு அரைகுறையாக கருக்கலைப்பு நடத்தப்பட்டிருக்கிறது என்பதை யறிந்து, மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவின் உடலை நீக்கி, அவரைக் காப்பாற்றி இருக்கிறார்கள். கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அந்தப் பெண் உயிரிழந்திருப்பார்.
இந்த பகீர் விவகாரம், மருத்துவமனை ஊழியர் ஒருவரின் மூலம் வெளியே வர, ஏரியாவே பதட்டமானது. இதுகுறித்து நாமும் விசாரணை யில் இறங்கினோம். அப்போது...
அந்தப் பெண், காவேரிபட்டிணத்தை அடுத்த செட்டிமரப்பட்டியைச் சேர்ந்த ராகவன் என்பவரின் மனைவி வனஜா என்பது தெரியவந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக வனஜா கர்ப்பம் தரித்துள்ளார்.
ஆண் குழந்தையை விரும்பிய இந்தத் தம்பதியினர், கர்ப்பத்தில் உள்ளது ஆணா என்பதை அறியத் துடித்திருக்கிறார்கள். இதற்காக ஒரு தனியார் மருத்துவமனையை அவர்கள் அணுகியபோது, திருப்பி அனுப்பிவிட்டனர். இதையடுத்து வனஜாவும் அவர் அம்மாவும், தர்மபுரி அரசு மருத்துவமனை அருகேயுள்ள ஸ்கேன் சென்டரை நாடியுள்ளனர். அப்போது அங்கே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஒரு பெண் “"கருவில் இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? என்பதை ஸ்கேன் செய்து சொல்கிறோம். வேண்டாத கரு என்றால் பிரச்சினை இல்லாமல் ரகசிய மாக நீக்கிவிடலாம்''’என்று, வனஜாவையும் அவர் அம்மாவையும் தர்மபுரி அரசு மருத்துவ மனை அருகில் இருந்து, ஒரு காரில் ஏற்றிக் கொண்டாள். அவர்களின் கண்களைக் கட்டி, தன் டீமோடு அழைத்துச் சென்றிருக்கிறாள்.
அந்த கார், ஆள் நடமாட்டமில்லாத ஒரு வீட்டுக்குச் சென்றிருக்கிறது. அங்கு ஆட்டோவில் வந்த சிலர், ஸ்கேனிங் மிஷினை எடுத்து வந்து செட் செய்து, வனஜா மற்றும் ஏற்கனவே வந்திருந்த இரண்டு பெண்களின் கருவை ஸ்கேன் செய்துவிட்டு, மூன்று பேருக்குமே பெண் குழந்தை என தெரிவித் துள்ளனர். அதில் ஒரு பெண் மட்டும் கருக்கலைப்பு செய்ய மறுக்கவே அவரைத் தவிர்த்துவிட்டு, வனஜாவுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் அந்தக் கும்பல், தலா 20 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஆயுதங் களை வைத்துக் கருக்கலைப்பு செய்துள்ளது. இதில்தான், வனஜாவின் வயிற்றில் சிசுவின் தலையில்லாத முண்டம் சிக்கிக்கொண்டது. இதனால் மயங்கிய வனஜாவை, அரைகுறை மயக்கத்திலேயே அவரது வீட்டில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இதன்பின் வனஜாவுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட, அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்துக்குப் போக, மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் உத்தரவின் பேரில் களமிறங்கிய போலீஸ் டீம், அந்த சட்டவிரோதக் கும்பலை ராஜா பேட்டை ஏரிக்கரை பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது அங்கே சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள வந்திருந்த சில பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த கருக்கலைப்புக் கும்பலைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுதாகர், கார் டிரைவர் சதீஷ்குமார், இந்த விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்ட தனியார் மருத்துவமனை நர்ஸ் கற்பகம், ஜோதி, சரிதா மற்றும் குமார், வெங்கடேசன் ஆகிய ஏழு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. கலைச்செல்வனிடம் நாம் கேட்டபோது, “"கடந்த 2 வருடங்களாக இந்தக் கும்பல் சட்டவிரோதமாக கருக் கலைப்பு செய்து வந்திருக்கிறது. மேலும் இவர்கள் இதே குற்றத்திற்காக திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்று வந்திருக்கிறார்கள்'' ’என்றார்.
தற்போது கைதாகியுள்ள கும்பல் ஏற்கனவே, இதே குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சுகுமார் மற்றும் வேடியப்பன் ஆகியோரின் தொடர்பிலும் இருந்திருக் கிறார்கள். மேலும் இவர்கள் ஸ்கேன் கருவியை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இந்த கொடூரக் கும்பல் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான சட்டவிரோத கருக்கலைப்பைச் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.
"இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்தால், பல மருத்துவமனை ஊழியர்களும், முக்கிய பிரமுகர்களும் சிக்குவார்கள். ஆனால் காவல்துறை, யாரையோ காப்பாற்ற விசாரணையை அவசர கதியில் முடிக்கிறது' என்கிறார்கள் பலரும்.
இதற்கு போலீஸ் என்ன சொல்லப்போகிறது?