"என்னுடைய மகளை வாழ வைங்கன்னு வந்தால் ஆடு, மாட்டோட கயிற்றைக் கழட்டுற மாதிரி என் மகள் தாலியை அத்துக் கொடுத்திட்டீங்களே'' என மகளின் வாழ்க்கைக்காக பெற் றோர்கள் மன்றாடிய நிலையில், சாதியை வைத்து இழிவாகப் பேசியதோடு மட்டுமில்லாமல், "உன்ன நாய அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டிடுவேன்...'' என பதிலுக்கு புகார்தாரரை பேசிய பெண் போலீஸ் எஸ்.ஐ.யின் வீடியோவும், ஆடியோவும் தூத்துக் குடி மாவட்ட காவல்துறையில் வைரலாகியுள்ளது.
"என்னுடைய மகள் தனலெட்சுமிக்கும், கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தினை சேர்ந்த முத்துக்குட்டி நாராயணனுக்கும் 2020-ல் திருமணமானது. சிறிது நாட்களிலேயே மாப்பிள்ளை போதையில் மிதந்ததால் பெரியவங்க சேர்ந்து கூப்பிட்டுக் கண்டித்துப் பார்த்தோம். பலனில்லை. சண்டையும் சச்சரவுமாக போய்க் கிட்டிருந்ததால் மகளோட நிலைமையை நினைத்து நெல்லை நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு போட வேண்டியதாயிற்று. இனிமேல் நல்லபடியாக பார்த்துக்குவேன்! வழக்கு வேண்டாம்! சேர்ந்து வாழ்வோம் என மாப்பிள்ளை எழுதிக்கொடுத்த தால் வழக்கை வாபஸ் வாங்கிட்டோம்.
வழக்கை வாபஸ் வாங்கிய நாளிலிருந்து இன்னைக்கு வரை அவர் என்னுடைய பெண்ணைக் கூட்டிட்டுப் போக வரலை. வேறுவழியில்லாமல் 16-11-2022 அன்று கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நிலைமையை எடுத்துக் கூறி என் மகளை வாழவைங்கன்னு புகார் கொடுத்தோம். அவங்களும் மனு ரசீது கொடுத்தாங்க. அதன்பின் 30-11-2022 அன்று எங்களை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வரச்சொன்னாங்க. எங்களுடைய தரப்பில் யாரையும் உள்ளே விடாமல் மாப்பிள்ளையோட சொந்தக்காரங்களை மட்டும் உள்ளே அனுமதித்து மகளை மட்டும் வரச்சொன்னாங்க. இதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இந்த கேஸை இந்த ஸ்டேஷன்ல எடுக்கமாட்டோம். நீ திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போ.. வில்லங்கமா பேசுனா, உன்னை நாய அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டி விட்ருவேன். நீ கோர்ட்டுக்குப் போனாக்கூட உன்னால ஒண்ணும் செய்ய முடியாது'' "பிணத்தை தூக்கிட்டு திரியவறனு பார்த்தால் ஒரு நன்றி விசுவாசம் கிடையாது. நகையை வாங்கிருவியா' என விரட்டுனாங்க எஸ்.ஐ. மகேஸ்வரி'' என நடந்த சம்பவத்தைப் பகிர்ந்தார் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை பிணவறையில் பணிபுரியும் கந்தசாமி.
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த இச்சம்பவத்தை பெண் தரப்பிலிருந்து யாரோ ஒருவர் வீடியோவாக பதிவுசெய்ய அது வாட்ஸ் அப்பில் வைரலானது. இதுகுறித்து காவல்துறையிலுள்ள அதிகாரி ஒருவர், "வீடியோ உன்னுடைய வேலையையே பாதிக்கும். அதனால சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு மொபைலில் போன் செய்து நான் செய்துகொடுத்தது சரிதானே? என்பது போல் பேசி வாக்குமூலமாக ரிக்கார்டு செய்துகொள். உயரதிகாரியிடம் இதனைக் காண்பித்து தப்பித்துக் கொள்ளலாம்'' என மகாயோசனையை பெண் எஸ்.ஐ.க்கு கூற, அவரும் 19-12-2022 அன்று கந்தசாமிக்கு மொபை லில் போன் செய்து, "ஏம்பா.! நான் உனக்கு செய்தது சரியாக இருந்துச்சா?'' என்பதுபோல் கேட்ட நிலையில், கந்தசாமியிடமிருந்து மொபைல் போனை வாங்கிப் பேசிய பெண்ணின் தாயான தாயம்மாளோ, "ஏம்மா..? ஆடு, மாட்டோட கயிற்றைக் கழட்டுற மாதிரி என் மகளோட தாலியைக் கழட்ட வச்சுட்டீங்களே. வாழ வைங்கன்னு பெட்டிஷன் கொடுத்தால் இப்படித்தான் செய்வீங்களா..?'' என ஏகத்துக்கும் எகிற, "நான் செய்தது தப்புத்தான்'' எனக் கூறி எஸ்.ஐ. மகேஸ்வரி லைனை கட் செய்திருக்கிறார். இதுவும் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகின்றது.
தமிழ்ப்புலிகள் கட்சியின் மா.செ. வீரபெருமாளோ, "பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கந்தசாமி முன்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிணவறைத் தொழிலாளியாகப் பணியாற்றினார். இப்பொழுது ஸ்ரீவைகுண்டத்தில் வேலை பார்க்கிறார். பெண் வீட்டாரான எங்களுக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம்தான் எல்கையே. அதைவிடுத்து, இந்த கேஸை இந்த ஸ்டேஷனில் எடுக்கமாட்டோம் என்கிறார் எஸ்.ஐ. என்ன நியாயம்..? கட்டப் பஞ்சாயத்து செய்வதற்குதான் இந்த ஸ்டேஷனா? பிணவறையில் பணி என்பது எங்களது தொழில். அதை ஏன் சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்? குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் ஸ்டேஷனுக்கு புகாரளிக்க வரவேண்டுமா? சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. மகேஸ்வரிமீது பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்ய முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு புகாரளித்துள்ளோம்'' என்றார் அவர்.
இதுகுறித்து கருத்தறிய குற்றச்சாட்டுக்குள்ளான எஸ்.ஐ. மகேஸ்வரியை தொடர்பு கொண்டோம்... பதிலில்லை.
சம்பந்தப்பட்ட கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷோ, "துறைரீதியாக விசாரணை நடத்தி, அறிக்கையாக எங்களுடைய மேலதிகாரிக்கு சமர்ப்பித்துள்ளோம்'' என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.
காவல்துறை பணி என்பது போற்றுதலுக்குரிய பணி. புகார்தாரரை அரவணைத்துப் பணியாற்ற வேண்டுமே தவிர, தங்களுடைய கோபத்தை அவர்கள் மீது திணிக்கக்கூடாது. இதை பொறுப்பான பணியிலிருக்கும் போலீசார் என்றுதான் உணர்வார்களோ!
-ஆதித்யா