தஞ்சை பெரிய கோயிலுக்குள் சென்றால் பதவி பறிபோய்விடும் அல்லது உயிர் போய்விடும் என்ற சென்டிமெண்ட் விவகாரத்தால் அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் கோயிலுக்கு உள்ளே செல்லாமல் புறக்கணிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வந்து வழிபடுவதோடு, தமிழனின் கட்டடக் கலையையும் ரசித்துச் செல்கின்றனர். பெரிய கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாக புள்ளி விவரங்களே கூறுகின்றன. ஆனால் பெரியகோயில் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவரும் அரசியல் பிரமுகர்கள், கோயிலுக்குள் செல்லாமல் வாயிலோடு திரும்பிவிடுகின்றனர் என்கிற பார்வை பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்துவருகிறது.’ சமீபத்தில் வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கூட, பெரிய கோயிலுக்கு உள்ளே செல்லாமல் தவிர்த்துவிட்டு வாசலோடு சென்றதற்கும் அதுதான் காரணம்” என்கிறார்கள் கோயிலுக்கு அருகில் இருப்பவர்கள்.
இதுகுறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில்...
"தஞ்சாவூர் பெரிய கோயிலின் கலையழகிற்கும், கட்டுமானத்திற்கும் உலகில் இணைசொல்ல ஈடு இல்லை. அரசியல்வாதிகள் கோயிலுக்குள் வந்தால் தங்களுடைய பதவி பறிபோய்விடும் என்கிற சென்டிமெண்ட் விவகாரத்தால் வரத் தயங்குறாங்க. ஆனால் யாரோ எதற்காகவோ பரப்பிவிட்ட பொய்க்கதை பல காலமாக நிலவிவருகிறது. இந்திராகாந்தி வந்தார், அவரது பதவி போனது. கலைஞர் வந்தார், அவரது ஆட்சி போனது எனக்கூறி கலர், கலராக கிளப்பிவிடுறாங்க. கலைஞர் ஆட்சி பறி போகவில்லை என்பதை தி.மு.க.வினரே கூறத் தயங்குறாங்க. 2ஜி வழக்கு, மின்வெட்டு, ஈழப் படுகொலை என மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் மீதிருந்த மக்களின் கோபம், கூட்டணியில் இருந்த தி.மு.க.வின்மீது விழுந்தது, தேர்தலில் தோற்றார். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்தான். இதை வைத்து எப்படி ஆட்சி பறிபோனது என கூறமுடியும்? சிதம்பரம் நடராஜர் கோயிலைப் போல் தஞ்சாவூர் கோயிலையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிராமணர்கள் கிளப்பிவிட்ட வதந்தியாக இருக்கும்''’என்கிறார் ஆதங்கமாக.
கும்பகோணத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெரிய கோயில் சார்பாக நடைபெறும் சிவராத்திரி விழாவுக்கு இடம் தேர்வு செய்வதற்காக வந்திருந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்திருந்தனர். பெரிய கோயில் சுற்றுச்சுவரை ஒட்டியிருக்கும் பெத்தண் ணன் கலையரங்கத்தைப் பார்வையிட்டவர், கோயிலில் உள்ள உள்வளாகத்திற்குக்கூட செல்லவில்லை. பெரிய கோயில் வாசல்வரை வந்தவர் கோயிலுக்குள் செல்லாமல் திரும்பினார். அதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிறகு சென்னைக்குத் திரும்பிவிட்டார்.
எதற்கும் துணிந்தவர் எனப் பெயரெடுத்த இவரே போகவில்லையே. இதே போல, ஐப்பசி மாதம் நடந்த ராஜ ராஜசோழன் சதய விழாவின்போது கோயி லுக்கு வெளியே இருக்கும் ராஜ ராஜசோழன் சிலைக்கு அரசு சார்பிலும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதில் கலந்துக்கல. அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கவருகிறார் என செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் மாலையுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வருவதைத் தவிர்த்துவிட்டார்.
அரசு விழாவாக நடந்த சதயவிழாவில் கலந்துகொள்ளாத அமைச்சர்கள், கும்ப கோணம் உடையாளூரில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ராஜராஜ சோழன் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதையெல்லாம் பார்க்கும் பொழுது தி.மு.க. அமைச்சர்களிடம் ஆழமாகவே சென்டிமெண்ட் இருக்கிறது என்பது தெரிகிறது. அதனாலேயே கோயிலுக் குச் செல்வதையும், பெரிய கோயில் தொடர் பான நிகழ்ச்சிகளைத் தவிர்க்கின்றனர். இது தி.மு.க.வில் மட்டுமல்ல, கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில்தான் குடமுழுக்கு நடந்தது. கும்பாபி ஷேகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும், அமைச்சர் களும் வருகிறார்கள் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இறுதிநேரத்தில் தவிர்த்துவிட்டனர். தஞ்சாவூரிலே சுழன்றடித்த வைத்திலிங்கமும், காமராஜும்கூட போகவில்லை. ஓ.எஸ்.மணியன் மட்டும் குடும்பத்தோடு கலந்துகொண்டார். குடமுழுக்குக்குப் போகாமல் தவிர்த்ததால் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்துவிட்டதா? இல்லை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக ஆகிவிட்டாரா? கோயிலுக்கு வராமல் புறக்கணித்ததால் ஆட்சி பறிபோன தோடு, அந்த கட்சியே சிதைந்து கிடக்கிறது'' என்கிறார்.
திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரனிடம் கேட்டோம். "அமைச்சருக்கு ஒருநாள் பயணத் திட்டம்தான். காலையில் சென்னையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இங்குவந்தார். சிவராத்திரி நடத்துவது குறித்து மூன்று இடங்களை அமைச்சர் பார்வையிட்டார், கோயிலுக்குள் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதால் அவர் செல்லவில்லை அதோடு நேரமும் போதவில்லை. இதை அப்படியே திரித்துச் சொல்பவர்கள்தான் மூடர்கள். இந்தச் செய்திக்குப் பின்னால் உயர் ஜாதியினரின் சதியும் இருக்கிறது'' என்கிறார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சென்று வந்தால் பதவி பறிபோகும் அல்லது உயிர் போகும் என சொல் லப்படுவது உண்மையா? வரலாற்றில் அப்படியே ஏதாவது நடந்திருக்கிறதா? என வரலாற்றுப் பேராசிரியர் ஜெயராமனிடம் கேட்டோம்.
"வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. கல்வெட்டு களும் கூட இல்லை. அந்தக் கோயிலை கட்டிய ராஜராஜசோழன் மிகப்பெரிய பேரரசையே கட்டி ஆளுமைசெய்தவன். அந்தக் கோயிலுக்கு பலமுறை சென்றுவந்த ராஜேந்திர சோழன் இந்தியாவில் இதுவரை அதற்கு சமமான பேரரசைக் கட்டியது இல்லை என்கிற அளவுக்கு தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட வங்காளம் வரைக்குமான ஒரு பேரரசை உருவாக்கினான். 36 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடற்பரப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அதற்கு சமமாக இன்றைய இந்திய அரசிடம்கூட இல்லை. அசோகப் பேரரசிடம்கூட இப்படி ஒரு கடற்பரப்பு, கடற்படை இல்லை. இது ஏதோ ஒரு வகையில் திட்டமிட்ட சதி. இதை முறியடிக்க மூடநம்பிக்கை களுக்கு எதிரான தற்போதைய அரசின் உறுப் பினர்கள் முன்வர வேண்டும்''” என்கிறார் ஆர்வமாக.
சூரியனார்கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரி சுவாமி கூறுகையில், “"தஞ்சை பெருவுடையார் கோயிலை தரிசனம் செய்வதால் நல்ல பலன்கள்தான் கிடைக்கும். பெருவுடையாரை தரிசனம் செய்தால் சிவபுண்ணியம் கிடைக்கும், பணம் புகழ் செல்வம் எல்லாம் கிடைத்து இறுதியில் முக்திநிலை சித்திக்கும். அதுல மாற்றுக்கருத்தே இல்லை. இவங்க எல்லாரும் பயப்படுவது அர்த்தமற்றது'' என்கிறார்.
திருவருள்குடி சுவாமிகளிடம் கேட்டோம்,”"இது ஒருவகை மனரீதியான பயம்கலந்த நம்பிக்கை என்றுதான் சொல்லணும். உதாரண மாக, சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கும். அங்கு ஏதோ ஆவி இருக்குன்னு பேச்சு இருக்கும், அதேநேரம் அந்த பகுதியில் ஆபத்தான இடம் கவனமாக செல்லவும்னு போர்டு வச்சிருப் பாங்க. அறிவியலாக யோசித்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கினால் விபத்து குறையும் என்பதை யாரும் உணர மறுக்கிறோம், பட்டுக்கோட்டையார் வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு எழுதி மூடநம்பிக்கைக்கு வேட்டு வைத்திருப்பார். ஆக வேப்பமரம் அம்மனுக்கு உரியது, அதுல பேய் வருமா தம்பி என யோசிக்கச் சொல்கிறார். அதுபோலதான் இந்த கோயிலைக் கட்டியவன் பெரும் நிலப்பரப்பையே ஆண்டிருக்கிறான். நீதியின்பால் கட்டப்பட்டிருக்கிறது. அங்கு சென்றால் ஏதாவது நடந்துடுமோன்னு தயங்குறாங்க. இது முறியடிக்கப்பட வேண்டும்''’என்கிறார்.
-க.செல்வகுமார்