"நீட் வேண்டாம்; நீர் வேண்டும்' என்ற முழக்கத்தோடு, அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்கியது திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தமிழ் உரிமைக்கான மாணவர்கள்-இளைஞர்கள் கூட்டமைப்பு.

காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமான கடலூர் வரை காவிரி நீர் வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கோடும், மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் "சாகர்மாலா' எனப்படும் கடற்கரை மேலாண்மை மண்டலத்திற்கான மையப்பகுதி என்பதாலும் போராட்டக்களமாக கடலூரைத் தேர்ந்தெடுத்ததாக கவுதமன் சொன்னார்.

protest-for-cavery

மத்திய அரசுக்கெதிரான "மக்கள் திரள் போராட்டத்தை கடலூரில் இருந்து சென்னை வரை மோட்டார் வாகனத்தில் முன்னெடுத்துச் செல்வதாக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஒரே இடத்தில் 3-5-18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. அந்த அனுமதியும் 2-ஆம் தேதி இரவுதான் கிடைத்திருக்கிறது.

Advertisment

03-05-18 வியாழன் காலை 11 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களும் இளைஞர்களும் திரண்டிருந்தனர்.

""நீட் வேண்டாம், நீர் வேண்டும். தண்ணீர் கொடு, இல்லையேல் தன்னுரிமை கொடு. அழிவுத் திட்டங்கள் வேண்டாம். காவிரிப் பாதுகாப்பு வேளாண் மண்டலம் வேண்டும்'' என்பன போன்ற முழக்கங்கள் வெய்யிலை விடச் சூடேற்றின. ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்த...

பெ.மணியரசன்: காவிரிப் பிரச்சினையை நாம் தண்ணீர்ப் பிரச்சினையாக பார்க்கிறோம். ஆனால் கன்னடர்களோ இனப்பிரச்சினையாக பார்க்கிறார்கள், தாக்குகிறார்கள். நம் முதலமைச்சர் எடப்பாடியே நம்மை ஏமாற்றும்போது மத்திய அரசு எப்படி நியாயமாக நடந்து கொள்ளும்?

Advertisment

தோழர் சி.மகேந்திரன்: கட்சிகளையும் இயக்கங்களையும் கடந்து தமிழர்களாக ஓரணியில் இணைந்தால்தான் தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

சீமான்: இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான சிந்தனையை வளர விடாதீர்கள். பகை நாடு எனும் பாகிஸ்தானோடு சிந்துநதியைப் பகிர்ந்து கொள்கிறீர்கள், ஆனால் பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர்விட முடியாது என்றால் ஒரே நாடு என்பதற்கு என்ன அர்த்தம்?

பாரதிராஜா: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என எழுப்பப்பட்ட தனிநாடு முழக்கத்தை தமிழ்த் தேசிய முழக்கமாக மீண்டும் எழுப்பும் நிலை வந்துள்ளது. ஆமாம் ஒரே கொடி தமிழ்நாட்டுக் கொடி. ஒரே தேசம் தமிழ்த் தேசம் என தமிழர்கள் முழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்களோடு நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., மீத்தேன் எதிர்ப்புப் பேராசிரியர் த.ஜெயராமன், சமூகநீதிக்கான மருத்துவர்கள் சங்க ரவீந்திரநாத், கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் தலைவர் கார்மாங்குடி வெங்கடேஷன், இயக்குநர்கள் வீ.சேகர், வேலுபிரபாகரன், வெற்றிமாறன், பேரரசு, சுரேஷ் காமாட்சி எனப் பலரும் பேசினார்கள்.

அனைவரின் பேச்சும் மாற்று அரசியலை முன்னெடுக்கும் தன்மையோடு அமைந்திருக்கிறது.

-சுந்தரபாண்டியன்