பிரம்மாண்ட கிரானைட் ஊழலை வெளிக் கொண்டுவந்த முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாள ரான சகாயம், தன் 29 ஆண்டு பணிக்காலத்தில் 26 முறை இடமாற்றம் செய் யப்பட்டவர். "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து!' என்ற கொள்கையை முன்னிறுத்தி செயல்பட்டவர். தன் பணி ஓய்வுக்குப் பின் அரசியல் பாதைக்கு வருவார் என இளைஞர்கள் பலரை எதிர்பார்க்க வைத்தவர். அவர் தற்போது "நீதிமன்றம் செல்ல எனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகமுடியாது' என்று சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் நாம் பேசியபோது...
கிரானைட் ஊழல் வழக்கில் போதிய பாதுகாப்பு இல்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறியிருந்தீர்கள். தற்போது பாதுகாப்பு வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்களே?
அவங்க பாதுகாப்பு கொடுப்பதாக சொல்லியிருப்பது சாட்சி சொல்ல நீதிமன்றம் போறப்ப மட்டும்தான். இது ஒருநாள் பாதுகாப்பு. நீதிமன்றம் போறதோட எல்லாம் முடிந்துபோறதில்லை. எனக்கு இருப்பது நிரந்தர அச்சுறுத்தல். நிரந்தரப் பிரச்சினைக்கு நிரந்தர பாதுகாப்பு வேண்டும். இந்தப் பிரச்சினையின் பிரம்மாண்டம் நமக்குத் தெரியும். நாட்டினுடைய மிகப்பெரிய கிரானைட் ஊழல் இதுதான். அதை வெளிக்கொண்டு வந்தோம். அதில் பாதிக்கப்பட்டவர்கள் சக்தியானவர்கள், வலிமையானவர்கள், அவர்களின் தொடர்புகள் எப்படி என்பதெல்லாம் தெரியும். இப்படியான நிலையில் சாட்சி சொல்கிற நேரத்தில் மட்டும் பாதுகாப்பு கொடுப்பது என்பது எவ்வளவு விவரமற்றது.
உங்களுக்கு அவர்களால் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதா?
ஏற்கனவே 2014-ல் நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் உள்ள அபாயத்தை புரிந்துகொண்டுதான் உத்தரவு போட்டது. அதன்பிறகு நீதிமன்ற விசார ணையின்போது "உன்னையும், உன் குடும்பத்தையும் வெட்டிப் போட்டுடுவோம்' என்று கடிதம் வந்திருக்கு. 3-வது முறை உளவுத்துறை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செய்தி வந்திருக்கு. "உங்கள் அலுவலகத்தை கொளுத்தப்போறதா செய்தி வந்திருக்கு, பாதுகாப்பாக இருங்கள்' என்று தகவல் கொடுத்தார்கள். ஆனால் அந்த மிரட்டல் யார் கொடுத்தது, பின்னால் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடந்ததாகத் தெரியவில்லை. முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவானதே தவிர யாரும் கைது செய்யப்படலை.
இதற்கிடையில் 2020-ல் நான், தன் விருப்ப ஓய்வு மனு கொடுத்த 20 நாளில் பாதுகாப்பு விலக்கப் பட்டது. விருப்பு ஓய்வுபெற்றவருக்கு ஏன் பாதுகாப்பு என்று விலக்கிக்கொண்டிருக்க லாம். நான் பணி யில் இருக்கிறேன்,… இல்லையென்பது கேள்வியில்லை. ஒரு பணி செய்த தன் தாக்கம் இருக் கும்வரை அச்சுறுத்த லும் இருக்கும்.
அன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு செய்தி வருவதைப் பார்த்து, நீதிமன்றம் "யாரைக் கேட்டு பாதுகாப்பை விலக்குனீங்க?'னு கேள்வி எழுப்பியதும் பாதுகாப்பு போட்டதா இப்ப சொல்றாங்க. இது என்ன தார்மீகம்? என் பாதுகாப்பை நீதிபதிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
இப்ப பாதுகாப்பு கொடுக்கப்பட்டுவிட்டதா?
இல்லை. நீதிமன்றம் போறப்ப மட்டும் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் அவ்வளவுதான். நாம கேட்பது முழுமையான பாதுகாப்பு. திருமயம் ஜகபர் அலி சம்பவத்தில், ஜனவரி 17-ஆம் தேதி போராடுவேன் என்று சொன்னார். அன்றே அவர் லாரி ஏற்றிக் கொல்லப்படுகிறார். அந்த சம்பவத்திலும் சில போலீஸ்காரங்க இருப்பதா சொல்றாங்க. நிச்சயமாக பெரிய குவாரி ஓட்டுற இது போன்றவர்களுக்கு உள்ளூர் காவல்துறை, வருவாய்த் துறையினர் தொடர்பு இருக்கும். எங்க ஊர்ல முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குவாரி ஓட்டுறார். வெடி போடுறது எங்க ஊர்வரை பாதிக்குதுனு... எங்க ஊர் மக்கள் இப்ப வரை என்னிடம் சொல்றாங்க.
நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வாய்ப்புள்ளதா?
இல்லை... முழுமையான பாதுகாப்பு இல்லையென்கிற போது எப்படி ஆஜராக முடியும்? நீதிமன்றத்தில் மட்டும் பிரச்சினையா? உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 10 பக்கம் கடிதம் எழுதியிருக்கிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்துக்கும் கடிதம் எழுதுவேன், இன்னும் தேவைப்பட்டால் நானே ஆஜராகுவேன்.
நீங்கள்தான் முக்கிய சாட்சி. அரசு முழுமையான பாது காப்பு கொடுப்பதாக உறுதியளித்தால் ஆஜராக வாய்ப்பு உள்ளதா?
எனது அறிக்கைதான் முதல் தகவல் அறிக்கையாக பதிவுசெய்யப்பட்டு வழக்கு நடக்கிறது. அரசு முழுமையான பாதுகாப்பு கொடுக்கட்டும், அப்புறம் பார்ப்போம். என்றைக்கும் நான் கடமையை செய்யத் தவறியதே இல்லை. இப்படி எல்லாம் வருமென்பதை அன்றே உணர்ந்துதான் இந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வந்தோம். பாதுகாக்க வேண்யது அரசு. அதில் தவறக்கூடாது. நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தேன். இந்தியாவின் மிகப்பெரிய கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தேன். என்னையே இந்த அரசு இப்படி நடத்துகிறதென்றால், சாதாரண விவசாயி, ஜகபர் அலி தன் ஊரைக் காப்பாற்ற களத்தில் நின்று மாண்டுபோன எளிய மனிதன். அதேபோல கரூர் ஜெகநாதன், நெல்லை ஜாகிர் உசேன், வாடிப்பட்டி ஞானசேகரன், முகிலன் இவர்களாக இருக்கட்டும்… இவர்களுக்கு கிடைத்த பாதுகாப்பு என்ன? அவர்களின் குரலாக நிற்கும் எங்களுக்கே இப்படியென்றால்.... சாமானிய மக்களுக்கான நிலை என்ன?