Manjolai

மாஞ்சோலை பி.பி.டி.சி. தேயிலை கம்பெனி ஜூன் 17 முதல் மூடப்படுகிறது. 95 வருடங்கள் நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.டி.சி. கம்பெனிக்கு விசுவாசமாய் உழைத்தவர்கள். அப்படிப்பட்ட மக்கள் அடுத்தவேளை சோற்றுக்கு, என்ன செய்வார்கள் என்ற நன்றி உணர்வு இம்மியளவுகூட இல்லாமல், 25 சதவிகிதம் ஓய்வூதியத் தொகை தருவோம். வீட்டைக் காலி செய்து சாவியை ஒப்படைத்தால்தான் மீதமுள்ள தொகை என்று அறிவித்துவிட்டது.

Advertisment

""எங்களின் நிலை உணர்ந்து உதவுங்கள். நேரமே கொடுக்காமல் வெளியிட்ட அறிவிப்பால் சுருண்டு கிடக்கிறோம்'' என்று கார்ப்பரேட்டிடம் மன்றாடிய தொழிலாளர்களுக்கு நிறுவனத்திடமிருந்து பதிலில்லை. இந்த 3000 தொழிலாளர் குடும்பங்களின் நிலைமைகளை அரசு வரை கொண்டுசென்ற அரசியல் கட்சியினர், அம்மக்களின் நெருக்கடிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்களும் தங்கள் நிலைமையை அரசிடம் தெளிவாக்கினர்.

அரசும் உரிய நடவடிக்கையிலிறங்கியது. தாமதிக்காமல் இம்மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் அத்தனை குடும்பங்களுக்கும் உதவும் வகையில் இருப்பதற்கு வீடு, நிலம், வேலை, கல்வியைத் தொடர்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கிற வகையில் அத்தனை பேருக்கும் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மூலம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்து, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தியிருக்கிறார். முதல்வரின் நடவடிக்கைகள் அம்மக்களின் நம்பிக்கையை வலுவாக்கியிருக்கிறது.

Advertisment

ஆனாலும் தற்போதைய சூழலில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுகிற வகையில் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். அதுவே எங்களின் குடும்பங்களை மேம்படுத்தும் என்று கோரிக்கை வைத்ததுடன், முதல்வர் தங்களுடைய இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இன்னமும் அம்மக்களின் மனதில் நிலைகொண்டிருப்பதை அறியமுடிந்தது.

வனத்துறையினர் மூலம் விநியோகிக்கப்பட்ட அந்த விண்ணப்பப் படிவத்தில், தேயிலை பறிப்பவரா, மேற்பார்வையாளரா அல்லது மற்ற வேலை பார்ப்பவரா, அவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள், எந்தப் பஞ்சாயத்தில் வசிப்பவர், குடும்ப அட்டை எண், எந்த வருடத்தில் தேயிலை தோட்டத்திற்கு இடம்பெயர்ந்தார், குழந்தைகளின் எண்ணிக்கை கல்வியின் நிலை, விருப்ப ஓய்வூதியத் திட்டத்தில் கையெழுத்திட்டவரா, அரசிடமிருந்து எந்த விதமான உதவியை எதிர்பார்க்கிறார், நிலமாக உதவியா, அரசு ஒதுக்கீடு செய்யும் வீடா? இங்கிருந்து வெளியே சென்றபிறகு எந்த ஊரில் அல்லது கிராமத்தில் குடியேற விரும்புகிறார் என்பது உட்பட அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்து தரக் கேட்கப்பட்டுள்ளது. அம்மக்களின் புனர்வாழ்வே முக்கியம் என்று அதிகாரிகளின் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

நாம் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மனநிலை பற்றி கேட்டறிந்தோம்:

தொழிலாள மக்களின் மனதில் இனம்புரியாத அச்சமும் பதட்டமும் இருப்பதைக் காணமுடிந்தது. கம்பெனியின் திட்டவட்ட அறிவிப்பின்படி பல தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களைக் காலிசெய்து கண்ணீரோடு நின்றுகொண்டிருக்கின்றனர்.

"எதிர்பார்க்காத அறிவிப்ப சொல்லிருச்சி கம்பெனி. பித்துப்புடிச்சுப் போயி நிக்கோம்யா. இத்தன வருஷமா இதே வேலையச் செஞ்சு பழக்கப்பட்ட நாங்க வேற தொழில செய்ய முடியுமா? மனசும் ஒடம்பும் ஒத்துழைக்குமா தெரியல. ஆனைமுடி, வால்பாறை எஸ்டேட்டுக்கு வாங்கன்றாக. அங்க அத்தன சுலபமா குடிபெயர முடியாதுய்யா. அதனாலதாம் இத அரசு ஏத்து நடத்துனா எங்களுக்கு உசுரு கெடச்ச மாதிரின்றோம்'' என்றார் தளர்ந்த குரலில் குதிரைவெட்டி எஸ்டேட் தொழிலாளியான துரைப்பாண்டியன்.

மாஞ்சோலையின் சமுத்திரக்கனியோ, "நா பொறந்தது வளர்ந்தது வால்பாறை எஸ்டேட்லதான். அங்க கல்யாணம் முடிஞ்சி 23 வயசுல இங்க வந்தேம்யா. 24 வருஷமா இங்க வேல பாத்து வாரேன். எங்க பூர்வீகம் கடையநல்லூர். வால்பாறையிலயும் இங்கயும் ஒரே மேனேஜ்மெண்ட்தான. காலி பண்ணுங்கன்னு கம்பெனி திடீர்னு சொன்னதுனால இனிமே என்ன பண்றதுன்ற தவிப்பில இருக்கோம். கம்பெனிகூட எங்க கிராஜூட்டி கணக்க சரியா சொல்லல. இனிமே எங்க புள்ளங்க வாழ்வாதாரம் என்னாகுமோ தெரியல. ஏற்கனவே நடக்குற தேயில தொழில்தான. அரசாங்கம் என்னயப் போல தொழிலாளிகளுக்கு எது அவசியம்னு நல்ல முடிவு எடுக்கும்ற நம்பிக்கை மட்டும் எங்கள விட்டுப் போவல'' என்றார் திடமாக.

ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிற புதிய சூழலை உருவாக்குவதைவிட பழகிப்போன சூழலை சரிசெய்து கொடுப்பதே மேல் என்பதே மாஞ்சோலையின் மனவோட்டமாக இருக்கிறது.