"ஹலோ தலைவரே, நீட் தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை, இந்தமுறை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கவர்னர் ரவி ஒருவழியா சம்மதிச்சிருக்கார்.''”

"ஆமாம்பா, மாநிலத்தின் உணர்வை மதிக்காத கவர்னர் ரவியை, திரும்பப் பெறணும்னு டி.ஆர்.பாலு மூலம் நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஃபோர்ஸ் பண்ணுச்சே?''”

rang

Advertisment

"ஆமாங்க தலைவரே, தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா உட்பட 7 மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதியளிக்காமல் கால தாமதம் செய்ததால்தான், தி.மு.க.வின் கோபம் எரிமலையாய் டெல்லியில் வெடித்தது. அகில இந்திய அளவில் தனது பெயர், ரிப்பேர் ஆகி வருவதை கவர்னர் உணர ஆரம்பிச்சிட்டார்னு ராஜ்பவன் தரப்பே சொல்லுது. அதனால்தான், அந்தக் கோரிக்கையோடு கவர் னரை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம், நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க சம்மதம் தெரி வித்திருக்கிறார் கவர்னர். அதனால் நடப்பு கல்வியாண்டி லேயே இதற்கான பலன் இருக் கும்னு தி.மு.க. அரசு நம்புது.''”

"ரெய்டுக்குப் போன லஞ்ச ஒழிப்புத் துறைக்கே ஷாக் கிடைச்சிருக்கே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. மாஜி மந்திரிகளைக் குறிவைத்து அண்மைக்காலமாக ரெய்டுகளை நடத்திவந்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, ஒரு சீக்ரெட் தகவல் கிடைச்சிருக்கு. அதன்படி அவர்கள் போக்குவரத்துத் துறையின் கீழ் உள்ள சில அலுவலகங்களைச் சோதனை செய்து சில லட்சங்களை அள்ளினர். அப்போது கிடைத்த துப்பின் அடிப்படையில், சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை உதவி கமிஷனர் நடராஜன் அலுவலகத்துக்குள் திடீரென அதிகாரிகள் நுழைந்தனர். அங்கும் கத்தை கத்தையாக கரன்ஸிகளை அள்ளி, ஏரியாவையே அதிரவிட்டனர்.''”

rr

“"அப்புறம் அந்த அதிகாரி அதிரவிட்டாரா?''”

’"அதேதாங்க தலைவரே, கையும் களவுமாகப் பிடிபட்ட போக்குவரத்துத் துறை உதவி கமிஷனர் நடராஜனை மடக்கி, அதிகாரிகள் வாக்கு மூலம் கேட்டபோது, கொஞ்சமும் அசராத அவர், ‘இந்தப் பணமெல் லாம் எனக்காக வசூலிக்கப் பட்டது இல்லை. துறையின் அமைச்சரான கண்ணப்பன் தரப்பில் சொல்லித்தான் வசூல் செய்கிறேன். இப்போது கூட துறையில் இருக்கும் 35 காலி இடங்களை நிரப்ப, பலரிடமும் வாங்க வேண்டி யதை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தெனா வெட்டாகவே சொல்லி இருக் கிறார். இதைக் கண்டு ஷாக்கான அதிகாரிகள், இது குறித்து மேலே தெரிவிக்க, அமைச்சர் தரப்பு பதட்டமானதாம். அடுத்து என்ன நடந்ததோ, "நான்தான் வசூலித்தேன். எனக்காகத்தான் வசூலித்தேன்'’என்று அந்த நடராஜன் வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லி, அவரை மட்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னரே அமைச்சர் தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டதாம்.''”

rr

"செய்தித் துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக செய்தித்துறை தான் வெளியிடும் அரசு சார்ந்த செய்திகளை, அதற்கான வெப்சைட் மற்றும் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வெளியிடுவதற்கான காண்ட் ராக்ட்டை, ’கே.எஸ்.மார்ட் சொல்யூசன்’ என்ற கம்பெனியிடம் கொடுத்திருக்கிறது. இந்த நிறு வனம்தான், முதல்வரின் அறிக்கையாக இருந் தாலும், அரசுத் திட்டங்களாக இருந்தாலும் அதை வெளியிட்டுப் பரப்புகிற வேலையைச் செய்கிறது. அண்மையில் விசாரணை ஒன்றிற்காக அங்கே சென்ற ஒரு காவல்துறை உயரதிகாரி, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்டோரின் படங்களும் அங்கு இருந்ததைக் கண்டு ஷாக் ஆகியிருக்கிறார். கொஞ்சம் கவனித்த போதுதான், அதே நிறுவனம், அ.தி.மு.க. கட்சி செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக வெளியிட்டுக் கொண்டு இருந்தது தெரிந்ததாம். கடைசியில் விசாரித்த போதுதான், அந்த நிறுவனம் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணியின் சகோதரர் அன்பரசனு டையது என்று தெரியவந்திருக்கிறது. துறை அமைச்சர் நட வடிக்கை எடுப்பார்னு எதிர்பார்க்கப்படுது.''”

"ஹெச்சில் ஆரம்பிக்கும் தமிழக அரசுத் துறைகளின் ஐ.ஏ.எஸ்.கள் விரைவில் மாற்றப்படப் போறாங்கன்னு கோட்டைப்பக்கம் டாக் அடி படுதே?''”

ra

"உண்மைதாங்க தலைவரே, ஹெச்சில் ஆரம்பிக்கும் உள்துறையான ஹோம் டிபார்ட்மெண்ட்டின் செகரட்டரி பிரபாகர், தன்னை வேறு துறைக்கு மாற்றும்படி அரசிடம் விண்ணப்பிச்சிருக்காராம். அதேபோல் ஹெல்த் செகரட்டரி ராதாகிருஷ்ணனும், எனக்கு இலாகா மாறுதல் வேணும்னு கேட்கறாராம். ஹைவேஸ் செகரட்டரி தீரஜ்குமாருக்கும் துறை அமைச்சருக்கும் ஒத்துப்போகவில்லையாம். அதனால் அவரும் மாறுதல் பட்டியலில் இருக்கிறார். இதுபோல் ஹவுசிங் செகரட்டரி ஹிதேஷ்குமார் மக்வானாவுக்கும் துறை அமைச்சருக்கும் உரசல் என்பதால், அவரையும் மாற்றச் சொல்லி பிரஷராம். அதனால் இவர்கள் அனைவரும் பட்ஜெட் கூட்டத்துக்குப்பின் மாற்றப்படலாம் என்கிறது கோட்டைத் தரப்பு.''”

"சசிகலாவின் ஆன்மீக டூர் அ.தி.மு.க. தலைமையைப் பதட்டமாக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, முதல்ல தென்மாவட்ட கோயில்களுக்கு டூர் அடிக்கிறதாக் கிளம்பிய சசிகலா, அங்கங்கே அ.தி.மு.க. பிரமுகர் களை ரகசியமாகச் சந்திச்சார். அதிலேயே எடப் பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களுக்கு அதிரடி ஷாக் ஏற்பட்டுச்சு. இப்ப மறுபடியும் தஞ்சை, சேலம்ன்னு டூர் அடிக்கக் கிளம்பறார். அப்படிப் போகும்போது, தஞ்சை மாவட்ட விளார் கிராமத் தில் நடக்கும் தன் கணவர் எம். நடராஜனின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துக்கறாராம். அப்ப மாஜி மந்திரி வைத்திலிங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்களையும் அவர் சந்திக்க இருக்கிறார்ன்னு தகவல் கிளம்பி இருக்கு. அதேபோல் எடப்பாடியின் சேலத்திலும், ரவுசு காட்டி அவரைக் கதிகலங்க வைக் கப்போகிறாராம் சசிகலா.''”

"சசிகலா கணக்கு இப்படின்னா, அவரை நம்பிய சிலரின் கணக்கு வேறு மாதிரி இருக்குதேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, நீங்க எங்க வர்றீங் கன்னு புரியுது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, மனதளவில் சசிகலாவின் ஆதரவாளராகத்தான் இருந்தார். அவரே இப்ப மாறிவிட்டாராம். சமீபத்தில், புகழேந்தி, ஓ.பி.எஸ்.சின் தம்பி ராஜா, அன்வர் ராஜா, ஆவின் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் கூடி உரையாடி இருக்கிறார்கள். அப் போது, புகழேந்தி, இனியும் சசிகலாவை நம்புவதில் பலனில்லைன்னு சொல்லி இருக்கிறார். உடனே ராஜா, அவசரப்படாதீங்க. உங்க ஆதங்கத்தை சசிகலாவிடம் சொல்கிறேன்னு சொல்லி இருக்கார். அதற்கு புகழேந்தி யோ, இனி அரசியலுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார். அதனால் விரைவில் ஒரு நல்ல முடிவை நான் எடுக்க இருக்கி றேன்னு அழுத்தம் கொடுத்துச் சொல்லி இருக்கார்.''”

rang

"அது என்ன நல்ல முடிவாம்?''”

"புகழேந்தியின் நண்பர்களிடம் இது குறித்துக் கேட்டபோது, அவர் தி.மு.க.வில் இணையும் முடிவில் இருக்கிறார் என்றார்கள். அதற்குக் காரணம், சமீபத்தில் துக்ளக் பத்திரிகையாளர் ரமேஷ் வீட்டில் நடந்த ஒரு விசேஷத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் சொல்லியிருக்கிறார் புகழேந்தி. அவரை அன்போடு அருகில் அழைத்து நலம் விசாரித்த ஸ்டாலின், உங்கள் பேட்டியைப் பார்த்தேன். நல்லா பேசறீங்கனு சிக்னலோடு சொல்லி இருக்கிறார். அது புகழேந்திக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லும் அவரது நட்புத் தரப்பினர், விரைவில் அதற்கான எஃபெக்ட் இருக்கும்கறாங்க.''”

"காங்கிரஸ் தலைவர் சோனியா, அதிரடி நடவடிக்கையை ஆரம்பிச்சிட்டாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, அந்தந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரையும் ராஜினாமா செய்யும்படி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறாராம் சோனியா. கட்சியை ஒழுங்குபடுத்த இந்த நடவடிக்கை அவசியம் என்பது அவரது எண்ணமாம். அதன்படி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, ராஜினாமா கடிதத்தை சோனியவுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இந்த நிலையில், சில தலைவர்கள், ராஜினாமா செய்கிறோம். ஆனால், எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் உண்மையில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சோனியாவுக்கு செய்தி அனுப்பியுள்ளனராம்.''”

"இது தொடர்பாக எனக்குக் கிடைத்த சில தகவல்களை நான் சொல்றேன். காங்கிரஸிலேயே இருக்கும் அதிருப்தித் தலைவர்கள் எல்லோரும் கபில்சிபல் தலைமையில், ரகசியமாகக் கூடி ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அதில் சோனியா காந்தி குடும்பத்துக்கு எதிராக பல விசயங்களை விவாதித்துள்ளனர். அதேபோல் தங்களில் இருந்து ஒருவரே காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இல்லையேல் உட்கட்சித் தேர்தலை நடத்தி, ஜனநாயக முறையில் ஒரு தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம். ஒருவேளை, இவை எல்லாம் நடக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியே உடைபடலாம் என்கிறது டெல்லித் தகவல்.''