சேலம் தி.மு.க. வினருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா. கலைஞர் மறைந்த போது அவரது இறுதி நிகழ்ச்சிகளை அரசு சார்பில் மிகவும் பொறுப் போடு மேற்பார்வை செய்து, தி.மு.க.வினரின் பெருமதிப்பைப் பெற்ற அதே அமுதாதான் இவர்.

என்ன நடந்தது?

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், மொத்தம் உள்ள 13 வார்டு கவுன்சிலர் இடங்களில் அ.தி.மு.க. 6, தி.மு.க. 5, பா.ம.க. 1, இ.கம்யூ. 1 என கட்சிகள் இடங்களைப் பிடித்தன. பா.ம.க ஆதரவுடன் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகநாதன் ஒன்றியக்குழுத் தலைவராக ஆனார். இந்த ஒன்றியம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாகவும் இருந்து வருகிறது.

Advertisment

dd

இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்திருப்பதால், இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பல இடங்களில் அ.தி.மு.க. வசமிருந்த ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளை தி.மு.க.வினர் கைப்பற்ற முயன்று வருகின்றனர். இதற்காக, நம்பிக்கை இல்லா தீர்மானம், பேரங்கள், கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட அதிரடிக் காட்சிகளை அரங்கேற்றி வருகின் றனர்.

இந்த வரிசை யில், அ.தி.மு.க.வின் கோட்டையான பனமரத்துப்பட்டியை யும் குறிவைத்தது ஆளும் தி.மு.க. இதற்காக கடந்த ஜனவரியிலேயே ஒன்றியக்குழுத் தலைவராக இருக்கும் ஜெகநாதனுக்கு எதிராக, அப்போது தி.மு.க. ஒன்றியச் செயலாளராகவும், ஒன்றியக்குழு கவுன்சிலராகவும் இருந்த பாரப்பட்டி சுரேஷ்குமார், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

Advertisment

இதன் மீது வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில், பாரப்பட்டி சுரேஷ்குமாரின் திட்டத்தை உணர்ந்த ஜெகநாதன், தனது ஆதரவு கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா, நிவேதா, மஞ்சுளா, காவேரி சித்தன் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஜன. 20-ஆம் தேதி இரவு, ஒரு காரில் பவானி கூடுதுறைக்குச் சென்று கொண்டிருந்தார். குமாரபாளையம் அருகே பாரப்பட்டி சுரேஷ்குமாரின் ஆதரவுக் கவுன்சிலர்கள், அந்த காரை வழிமறித்து, அதில் இருந்த பூங்கொடி, சங்கீதா ஆகிய இரு பெண் கவுன்சிலர்களை மட்டும் கடத்திச்சென்றனர். இதனால் ஷாக்கான ஜெகநாதன், அப்போதே, குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார்.

எனினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, ஜனவரி 21 ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. தேர்தல் அலுவலர் வேடியப்பன் முன்னிலையில் நடந்த வாக்கெடுப்பில், ஜெகநாதனுக்கு எதிராக தி.மு.க., பா.ம.க., இ.கம்யூ. கவுன்சிலர்கள் மட்டுமின்றி அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூங்கொடி, சங்கீதா, நிவேதா உள்ளிட்ட 10 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பு முடிந்த பிறகு, கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகிய இருவரும் எங்களை யாரும் கடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பு கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக, அப்போதைய தேர்தல் நடத்திய அலுவலரான வேடியப்பன் அறிவித்தார்.

ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறவேண்டுமென்றால், மொத்த உறுப்பினர்களில் (13 பேர்) 5ல் நான்கு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கிறது உள்ளாட்சிச் சட்டம். அதன்படி அங்கே இந்த தீர்மானம் வெற்றியடைய 10.4 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. அதாவது 11 ஆவது நபர் ஒருவரின் ஆதரவும் தேவை. எனவே இது முறையான வெற்றி அறிவிப்பு அல்ல என்று அ.தி.மு.க. தரப்பு தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

அதன்பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து தி.மு.க. உடன்பிறப்புகள் நம்மிடம் விரிவாக பேசினர்.

dd

"சட்டப்படி எங்கள் தரப்பு வெற்றிபெற 11 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. ஆனாலும் தேர்தல் அதிகாரி, எங்கள் தரப்பு வென்றதாக அறிவித்துவிட்டார். இதன்பிறகு எதிர்த்தரப்பு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கோ வாய்தா மேல் வாய்தாவாக இழுபட்டது. இந்நிலையில், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத் துறை முதன்மைச் செயலர் அமுதா ஐ.ஏ.எஸ்., பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற, முழுமையாக 11 கவுன்சிலர்களின் கையெழுத்து தேவை என்றும், 10 கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்றும் உத்தரவிட்டார். ஜெகநாதன் தலைவராக தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவின் இந்த உத்தரவை, எங்கள் கட்சிக்குக் கிடைத்த சாட்டையடியாகப் பார்க்கி றோம்'' என்றார்கள்.

பனமரத்துப்பட்டி ஒன்றியக் குழுத் தலைவரான அ.தி.மு.க. ஜெகநாதனோ "எங்கள் தரப்பு கவுன்சிலர்களில் இருவரை பாரப்பட்டி சுரேஷ்குமார் கடத்திக்கொண்டு போனார். அவர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டதாக இப்போது உத்தரவு வந்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால், கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கூறியதால்தான் கூட்டத்தைக் கூட்ட வில்லை'' என்றார்.

வீரபாண்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.வா ராஜமுத்து "13 கவுன்சிலர்களில் 10 பேர் ஆதரித்தாலும் அது செல்லாது என்பது தி.மு.க.வினருக்கும் தெரியும். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம்.

அவர்கள் தரப்பில் யாருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதாவே, எங்கள் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் செல்லாது என்று சொல்லிவிட்டார். இனி நாங்கள் வழக்கம்போல் ஒன்றியக்குழுக் கூட்டத்தை நடத்துவோம்'' என்கிறார்.

இது தொடர்பாக, பாரப்பட்டி சுரேஷ் குமாரிடம் நாம் கேட்டபோது, "இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம். இப்போது எங்கள் ஆதரவு கவுன்சிலர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அவர் எப்படி கூட்டத்தை நடத்துகிறார் என்பதையும் பார்ப்போம்,'' என்றார் அழுத்தமாக.

தங்களுக்குப் பாதகமான நடவடிக்கைதான் என்ற போதும், ஜனநாயகத்தை காக்க அமுதா ஐ.ஏ.எஸ். மேற்கொண்ட அதிரடி ஆக்சனை, தி.மு.க.வினரே பாராட்டுவதுதான் ஹைலைட்.