மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில், வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற முழக்கத் துடன், மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மதுரை வண்டியூர் மகாத்மா காந்தி மைதானத்தில், அமைக்கப்பட்டிருந்த மாநாட்டு நுழைவு வாயிலில், ஒரு பக்கம் எடப்பாடி பழனிச் சாமி படமும், மறுபக்கம் எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் படமும், மற்றும் அண்ணா, காந்தி படங்களுடன், பேரறிஞர் அண்ணா நுழைவாயில் என்ற முகப்புடன், வழியெங்கும் எடப்பாடி படங்களுடன் காட்சியளித்தது.
மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவரை திறந்த ஜீப்பில் நிற்க வைத்து மேடைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நெல்லை முபாரக் தனது தலைமையுரையில், "எடப்பாடி பழனிச்சாமியை போல் இஸ்லாமிய மக்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. பா.ஜ.க.வுடனான கூட்டணியிலிருந்து விலகி தமிழ்நாட்டின் அரசியல் சூழலையே மாற்றிக்காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி'' என்று புகழாரம் சூட்டினார். இதனைத் தொடர்ந்து, தவத்திரு திருவடிக்குடில் அடிகளாரும், ஆசிய கத்தோலிக்க மன்றத் தலைவரும், தூத்துக்குடி. கத்தோலிக்க மறைமாவட்ட முன்னாள் பேராயருமான பேராயர் யுவான் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, "மதுரை ராசியான மண். தொட்டது துலங்கும். அ.தி.மு.க. சிறுபான்மையினரை அரண்போல காத்துவருகிறது'' என்று சொல்லிக் கொண்டே வந்தவர் திடீரென, "நான் முதலமைச்சராவேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்துதான் இந்த உயர்வுக்கு வந்தேன்'' என்று சொன்னதும் கூட்டத்தில் சிரிப்பலை எழ... சுதாரித்துக்கொண்ட எடப்பாடி, "ஆமாம், என்னுடைய வளர்ச்சியை ஸ்டாலின் கொச்சைப் படுத்துகிறார். நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச்செயலாளரிலிருந்து பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் வந்தேன்'' என்று நீண்ட விளக்கமளித்தார்.
தொடர்ந்து, "அ.தி.மு.க.வும் எஸ்.டி.பி.ஐ.யும் இணைந்து மக்கள் பணி செய்வதற்கு இக் கூட்டத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல கட்சிகள் வர உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் வெல்லும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சரி, பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை எனத் தெளிவு படுத்துகிறேன்'' என்றார்.
கூட்டத்தில் முதல்வரிசையிலிருந்த எஸ்.டி. பி.ஐ. கட்சியின் முக்கிய பொறுப்பாளரிடம் பேச்சு கொடுத்தோம். "மாநாடு குறித்து அன்வர்ராஜா, சி.விஜயபாஸ்கர், வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர்தான் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாநாட்டுச் செலவையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இரண்டு சீட் உறுதி. என்ற பிறகுதான் இவ்வளவு பெரிய மாநாடே. அவர்கள் போட்ட ஸ்கெட்சை நாங்கள் பயன்படுத்தி கொண்டோம்''" என்றார்.