"ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து தூக்கிவிட்டவனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்? திண்ணை எப்ப காலியாகும்கிற நினைப்போட, சமயம் பார்த்து கட்சித் தலைமைகிட்ட ஒட்டி உறவாடுறதும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு சொல்லுற மாதிரிதான் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வுல நடந்துக் கிட்டிருக்கு'”என சலித்துக் கொண்டனர் அந்த அருப்புக் கோட்டை நிர்வாகிகள்.

"கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுறதுதானே?''’என்று கேட்டதும் கழகப் பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர்.

eps

அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரான யோக வாசுதேவன், முன்பு கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ஆரின் தீவிர ஆதர வாளராகவும், அருப்புக்கோட்டை யூனியன் சேர்மனாகவும் இருந்தார். ம.தி.மு.க. பிரமுகர் முருகன் கொலை வழக்கின் தாக்கத்திலிருந்து வெளிவர, மா.செ. ராஜேந்திர பாலாஜி மூலம் அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். கடந்த 6ஆம் தேதி ஆத்திபட்டியில் நடந்த யோக வாசுதேவன் மகன் அஜய்யின் திருமண வரவேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்ட இவ்விழா மேடையில் விருதுநகர் மேற்கு மா.செ. ராஜேந்திர பாலாஜியும், விருதுநகர் கிழக்கு மா.செ. ரவிச்சந்திரனும் மிஸ்ஸிங். மா.செ.க்கள் இருவரும் வராதது கட்சியினரிடையே சலசலப்பை உண்டாக்கியது. சகோதரியின் இறப்பு காரணமாக ரவிச்சந்திரன் வரவில்லை என்று காரணம் சொல்லப்பட, ராஜேந்திரபாலாஜி வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார் என்பது உறுதியானது. அதே நாளில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு எடப் பாடி பழனிசாமி வந்தபோது ஒப்புக்குச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, புகைப்படம் எடுத்தபோதெல்லாம் முறைத்தபடி சற்று தள்ளியே நின்றார். இருவருக்கு மிடையே உள்ள பிணக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.

Advertisment

"யோக வாசுதேவன் இல்ல திருமண வரவேற்பில் ராஜேந்திரபாலாஜி கலந்துகொள்ளாத தற்கு, உரிய மரியாதை தரவில்லை' என்பதும் ஒரு காரணம். எடப்பாடி பழனிசாமியை வரவேற்று யோக வாசுதேவன் வைத்திருந்த பேனர்களிலும், போஸ்டர்களிலும் ஒன்றில்கூட ராஜேந்திரபாலாஜி போட்டோ இல்லை. கிழக்கு மா.செ. ரவிச்சந்திரனின் படமும் இடம்பெறவில்லை. "என் போட்டோவைத் தவிர வேறு யார் போட்டோவும் வரவேற்பு பேனரிலோ, வால்போஸ்டரிலோ இருக்கக்கூடாது'’ என்று எடப்பாடி பழனிசாமியே யோக வாசுதேவனிடம் கறாராகச் சொல்லிவிட்டதாக திருமண வீட்டார் தரப்பிலிருந்தே விளக்கம் தந்தனர். "அன்று கொலை வழக்கில் சிக்கித் தவித்தபோது எனது முயற்சியில் கட்சியில் சேர்க்கப்பட்ட யோக வாசுதேவனுக்கு இன்று நான் வேண்டாதவனாகிவிட்டேன். எனக்கு எதிரான சூழ்நிலையை கட்சித் தலைமையே உருவாக்கி யிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு நான் ஏன் போகவேண்டும்?’என்றுதான் ராஜேந்திரபாலாஜி புறக்கணித்திருக்கிறார்'’என்று கூறியவர்களிடம்...

‘"விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தனக்கு அடங்கியே நடக்கவேண்டும். யாரும் தன்னைக் காட்டிலும் வளர்ந்துவிடக் கூடாது என நினைப்பவர் ராஜேந்திரபாலாஜி என்கிறார்களே?''’ எனக் கேட்டோம்.

"தமிழ்நாட்டில் எந்தக் கட்சியிலும் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத நல்ல காரியங்களை யெல்லாம் ராஜேந்திரபாலாஜி இன்றுவரையிலும் செய்துவருகிறார். அப்போது அவர் அமைச்சராக இருந்தார். விருதுநகர் மாவட்டத்தில், யார் யாரெல்லாம் கட்சியின் தீவிர விசுவாசிகளாக இருக் கிறார்கள் என்று பட்டியலிட்டார். அவர்களுக்கு ஹோண்டா ஷைன், ஆக்டிவா டூவீலர்கள் வாங்கிக் கொடுத்தார். சிலருக்கு கார்கூட பரிசளித்தார். சொந்தப் பணத்தை கட்சிக்காரர்களுக்கு அள்ளி யிறைக்க யாருக்கு மனது வரும்? ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பாதித்தாரோ? அமைச்சராக இருந்து சம்பாதித்தாரோ? என்றெல்லாம் கேள்வி வருமென்றும் கவலைப்படாமல் கட்சிக்காரர்களைத் தன் குடும்பத்தினர் போல் கவனித்துக்கொண்டார்.

Advertisment

விருதுநகர் மாவட்டத்தில் முக்குலத்தோர், நாயுடு மற்றும் நாடார் சமுதாயத்தினர் மெஜா ரிட்டியாக இருக்கிறார்கள். ஆனாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் நல்ல தொடர்பிலிருந்த மைனாரிட்டியான ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். அப் போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந் தார். தெலுங்கு பேசும் சமுதாயம் என்பதால், அவரை மெஜாரிட்டியான நாயுடு சமுதாயமும் ஏற்றுக்கொண்டது. அதனால், தி.மு.க.விலும் மாவட் டச் செயலாளராக, அமைச்சராக கே.கே.எஸ். எஸ்.ஆரின் அரசியல் செல்வாக்கு தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. ராஜேந்திரபாலாஜி மைனாரிட்டியான விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளராகத் தொடர முடிகிறதென்றால், சாதி கடந்து அவ ருடன் கட்சியினர் வைத்திருக்கும் பிணைப்புதான்.

eps

‘எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா போன்ற வர்கள் மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பிரபலங்கள் என்பதால் தலைவர்களாக ஏற்றுக்கொண்டார்கள். ராஜேந்திரபாலாஜிக்கு அப்படியொரு செல்வாக்கு உண்டா? முக்குலத்தோரும், நாயுடு சமுதாயத்தினரும் மெஜாரிட்டியாக உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜி ஏன் மாவட்டச் செயலாளராக நீடிக்கவேண்டும்? தனிப்பட்ட முறையில் வள்ளல் இமேஜை வளர்த்துவருகிறார்’ என ஆர்.பி.உதய குமார், கடம்பூர் ராஜு போன்றவர்கள் தூபம் போட, கட்சித் தலைமை ராஜேந்திரபாலாஜியை ஒதுக்க ஆரம்பித்திருக்கிறது. எடப்பாடி பழனி சாமிக்கு ராஜேந்திரபாலாஜி மீது இன்னொரு கோபமும் இருக்கிறது.

"விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரால் 15.66 சதவீத வாக்குகளைப் பெற முடிந்ததென்றால், அதற்கு வலுவான காரணமாக இருப்பது, அ.ம.மு.க. கூட்டணி மூலம் கிடைத்த முக்குலத்தோர் வாக்கு கள்தான். வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ் வொரு கிராமத்திலும் இந்தக் கணக்கைப் பார்க்க முடிந்தது. சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தை யும் நிரந்தரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஆதரவை அ.தி. மு.க. பக்கம் திருப்புவதோ, வெற்றி பெறுவதோ எடப்பாடி பழனிசாமியால் இயலாத காரியம் என்பதை ராஜேந்திரபாலாஜி போன்றவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியே பொதுச்செயலாளராக இருந்து கொள்ளட்டும். சசிகலாவையும், ஓ.பன்னீர்செல் வத்தையும் கட்சிக்குள் கொண்டுவரவேண்டும். டி.டி.வி. தினகரனைக் அ.தி.மு.க.வுக்குள் இழுக்க வேண்டாம். அவரைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம்'’என்றெல்லாம் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் போன்றவர்கள் தனியாகச் சந்தித்துப் பேசிவருகிறார்கள். இச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு போன்றோரின் எண்ணவோட்ட மும் இதுவாகத்தான் இருக்கிறது. ‘பிரிந்தவர்களை இணைத்து கட்சியையும் வலுப்படுத்தவில்லை. நல்ல கூட்டணியையும் அமைக்கவில்லை’ என்னும் அதிருப்தி ராஜேந்திர பாலாஜியிடமிருந்தும் வெளிப் படவே, விருதுநகர் மாவட்டத்தில் அவருக்கு எதிராகக் குட்டையைக் குழப்பும் வேலை, எடப்பாடி பழனிசாமியின் ஆசியுடன் நடக்கிறது. தனக்கு ஜால்ரா அடிப்பவர்களிடம் "அடுத்த மா.செ. நீங்கதான்'’என்று முக்குலத்தோர் தரப்பிலும், நாயுடு தரப்பிலும் தன்னைச் சந்திப்பவர்களைக் குஷிப்படுத்து கிறார்.

‘கட்சி நல்லா இருக்கணும்னு நினைக்கிறது ஒரு குத்தமா? தேர்தல் தோல்விகள் தந்த கசப்பான அனுபவத்தால் பாடம் கற்று, கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொள்ளணும்னு பேசுறது ஒரு பாவச் செயலா? எடப்பாடி பழனிசாமி என்னமும் பண்ணிட்டுப் போறாரு..’ என்று ராஜேந்திரபாலாஜி ஒதுங்கியிருப்பதால்தான், அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார்.

அ.தி.மு.க.வில் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்த பலரும், தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் தங்களது நிலைமை என்னவாகும் என்ற எதிர்காலக் கணக்கோடு, கட்சி மேடைகளிலோ, தேர்தல் பிரச்சாரங்களிலோ, தி.மு.க. தலைமையைக் கடுமையாக விமர்சித்ததில்லை. கட்சிக்கு விசுவாசமாக, தொண்டர்களின் வெளிப்பாடாக ராஜேந்திரபாலாஜி அப்போது அதிரடியாகப் பேசியதையும், அதன் பலனாக, தி.மு.க. ஆட்சியில் பொய் வழக்கில் சிக்கி, சிறைவரை சென்றதையும் நாடே அறியும். அப்படிப்பட்டவரையே கட்சித் தலைமை தூக்கி எறிகிறதென்றால்..? இதே நிலை தொடர்ந்தால், எடப்பாடி பழனிசாமியால் என்ன சாதித்துவிட முடியும்?

"அ.தி.மு.க.வுக்கு எஜமானன் நான் மட்டுமே. சசிகலா, ஓ.பி.எஸ். போன்றவர்களைத் திரும்பவும் கட்சிக்குள் கொண்டு வருவது, கட்சிக்கு பலம். தனிப்பட்ட முறையில் நான் பலவீனமாகிவிடுவேன். இதற்கு எப்படி சம்மதிப்பேன்?’இந்த சுயநல சிந்தனை மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது'’என்றனர் பொரும லுடன்.

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. கோஷ்டி அரசியலால் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது!