காஷ்மீரில் 8 வயது சிறுமி பா.ஜ.க.வினரால் பாலியல் பலாத்காரத்தில் பலியாக்கப்பட்ட விவகாரத்தின் ஈரம் இன்னும்கூட காயவில்லை. அதற்குள் கேரளாவில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் மர்மமாக கொல்லப்பட்ட விவகாரம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக சூடுபரத்துகிறது.

lica-murder

லாத்வியா நாட்டைச் சேர்ந்த லிகா தனது கணவர் மற்றும் சகோதரியுடன் ஆயுர்வேத சிகிச்சைக்காக மார்ச் மாதம் 4-ஆம் தேதி கேரளாவுக்கு வந்தார். 35 வயதான லிகா சோரியாசிஸ் நோய்க்கு சிகிச்சை பெறவும், யோகா கற்றுக்கொள்ளவும் விரும்பினார்.

திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போத்தன் காட்டில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார். மார்ச் 14-ஆம் தேதி கோவளம் பீச்சில் சூரிய குளியலுக்காக கணவர் மற்றும் சகோதரியுடன் ஆட்டோவில் சென்றார்.

Advertisment

இரண்டு மணிநேரம் சூரியக் குளியலுக்குப் பிறகு சாப்பிடச் சென்ற போது, லிகாவை காணவில்லை. கணவரும் சகோதரியும் கோவளம் முழுக்க தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கோவளம் போலீஸில் புகார் கொடுத்தார்கள். போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஒருவாரம் போலீஸ் நிலையத்தில் காத்திருந்த லிகாவின் கணவரும் சகோதரியும், போத்தன்காடு போலீஸில் புகார் கொடுத்தார்கள், அங்கு புகாரை வாங்க மறுத்தனர். டிஜிபி லோக்நாத் போஹ்ராவை சந்திக்க முயன்று தோற்றனர். முதல்வரும் இவர்களைச் சந்திக்க நேரம் தரவில்லை. எனவே, கடைசி முயற்சியாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

lica""நாங்கள் எங்கள் பொருளைத் தொலைத்துவிட்டு புகார் கொடுக்கவில்லை. பெண்ணைத் தொலைத்துவிட்டுப் போயிருக்கிறோம். ஆனால், எங்கள் வேதனையையும் பெண்ணின் உயிரையும் பற்றி போலீஸ் கவலையேபடவில்லை. பினராயி நல்ல ஆட்சி நடத்துகிறார் என்று நம்பிப் போனோம். ஆனால், அவரையும் பார்க்க முடியவில்லை. இனி நாங்களே தேடப்போகிறோம்''’என்று கூறினார்கள்.

அதன்பிறகு, லிகாவின் புகைப்படத்துடன், அவரை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்தார்கள். ஒரு மாதம் கேரளா முழுக்கவும் தேடினார்கள். ஆனால், ஏப்ரல் 26-ஆம் தேதி கோவளத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ஒரு காட்டுக்குள் அழுகிய நிலையில் லிகாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சுற்றுலாப்பயணிகளை அச்சம்கொள்ளச் செய்தது. ஆனால், லிகா கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. அதேசமயம் கற்பழிப்பு முயற்சி நடந்ததில் லிகாவின் அங்கங்கள் சிதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

லிகா உடல் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் பினராயி விஜயன் அதிர்ச்சியடைந்தார். டி.ஜி.பி. லோக்நாத்திடம் காட்டம் காட்டிய பினராயி, அலட்சியம் காட்டிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த கொலைச் சம்பவத்தை தங்களுடைய அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸும் பா.ஜ.க.வும் தவறவில்லை. லிகாவின் சகோதரியை நேரில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும், பா.ஜ.க. தலைவர் கும்மனம் ராஜசேகரும் ஆறுதல் தெரிவித்தனர். அத்தோடு, மாநில அரசின் அலட்சியப்போக்கை கடுமையாகக் கண்டித்தனர். கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் கேரளாவில் இருப்பவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பாதுகாப்பில்லை. லிகாவை கொலைசெய்தவர்களை காப்பாற்ற பினராயி முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினர்.

lica-sister

""உலகநாடுகள் மத்தியில் இந்தச்சம்பவம் கேரளாவை தலைகுனிய வைத்துள்ளது. இதற்கு பினராயி விஜயன் பதில்சொல்லியே தீரவேண்டும். இந்த விஷயத்தை கையிலெடுத்து பா.ஜ.க. தொடர்ந்து போராடும்'' என்று ராஜசேகர் கூறினார்.

""லிகா விவகாரத்தில் மூன்றுபேர் போலீஸின் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். அவர்கள் குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது'' என்று டி.ஜி.பி. லோக்நாத் கூறினார்.

மக்களுடன் நெருக்கமான முதல்வர் என்று பெயரெடுத்த பினராயி, வெளிநாட்டினரிடம் மாட்டிக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் கும்மாளம் போடுகின்றன.

-மணிகண்டன்