தவு வச்ச ஒரு வீடும், டிகிரி படிக்க உதவியும் செய்தால் மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை பாதுகாப்பாக வைத்து காப்பாற்றுவேன் என்ற மாணவி சத்தியா பற்றி, மக்கள் பாதை தோழர்கள் மூலம் தகவல் அறிந்து அந்த மனதிடமிக்க சிறுமியை காண நினைத்தோம்.. அந்த சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கி நம் செல்போனில் பதிவு செய்த போது வாட்ஸ் ஆப் புரஃபைலில் வைத்திருந்த ஆங்கில வார்த்தைகள் மனதை ரொம்பவே கனக்க செய்தது..

ss

பசித்த வயிறு...

Advertisment

பணமில்லாத பாக்கெட்...

உடைந்த இதயம்...

இவைதான் வாழ்க்கைக்கான சிறந்த பாடத்தை கற்றுத் தருகிறது.’’

Advertisment

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, கந்தர்வகோட்டை தாலுகா, பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்திற்கு நண்பருடன் சென்றோம்..

நாம் சென்ற நேரத்தில் சிறுமி சத்தியா வீட்டில் இல்லை ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் ஒரு தோட்டத்தில் கடலைச்செடி பறித்துக் கொண்டிருப்பதாக தகவல் அறிந்து சிறுமியை வீட் டிற்கு வரச் சொன்னோம். செடி கொடிகள் அடர்ந்த ஒத்தையடிப் பாதையில் சென்றால் 10 அடி நீளம், 7 அடி அகலத்தில் ஒரு மண் குடிசை. பல வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட தென்னங்கீற்று, சூரியன் அந்த வீட்டுக்குள் நேரடியாக ஆட்சி செய்தது.

""வாங்கண்ணா...'' என்று அழைத்த சகோதரி சொன்ன அடுத்த வார்த்தை நம்மை ரொம்பவே பாதித்தது. ""வந்தவங்களை வீட்ல உக்கார வச்சு தண்ணி கொடுத்து அப்பறம்தான் பேசத் தொடங்கனும். ஆனால் எங்க வீட்ல உக்கார இட மில்லை’அண்ணா'' என்று கண்கள் கலங்கியபடியே சொல்லும் போது நம்மை ரொம்பவே பாதித்தது.

வீட்டுக்குள் சென்ற போது சாப்பாட்டு பாத்திரங்கள், தண்ணீர் குடங்கள் வைப்பதற்கே இடம் சரியாக இருந்தது. சில குச்சிகளை அடுக்கி செல்ப்பாக வைத்து அதன் மேல் கரையான் தின்ற அவரது புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒற்றை மின் விளக்கு இருந்தது. இது தான் சத்தியாவின் மாளிகை.

ss

தொடர்ந்து சத்தியா பேசினார். ""எங்க அப்பா ராமையா கஜா புயல் முடிந்து சில மாதங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துட்டார். அம்மா செல்வமணி எங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். நான்தான் குடும்பத்தை சுமக்கிறேன். இருக்கிற இந்த குடிசைக்கும் பட்டா இல்லை. இந்த வீட்டில் இருந்துதான் படித்து 10 ம் வகுப்பில் 500க்கு 403 மார்க் வாங்கினேன். அடுத்து அப்பா இறந்த பிறகு அம்மாவையும் பார்த்துக் கொண்டு லீவு நாட்களில் விவசாய கூலி வேலைக்கு போய் அதில் கிடைக்கும் சம்பளத்தில் வீட்டுச் செலவுகளையும் என் படிப்பு செலவையும் பார்த்துக் கொண்டேன். அதனால ப்ளஸ் 2வில் 323 மார்க்தான் வாங்கினேன்.

மேலும் படிக்க ஆசையாக உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன். அம்மாவை தனியா விட்டுட்டு எங்கேயும் போக முடியாது. வீட்டில் கதவு இல்லை. அதனால எனக்கும் எங்க அம்மாவுக்கும் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பிற்காக இரவில் நானும் எங்க அம்மாவும் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் படுத்துக் கொள்வோம். எங்களுக்கு என்று “சின்ன தாக கதவு வச்ச ஒரு வீடும் எனக்கு படிக்க உதவியும்’ கிடைத்தால் போதும்'' என்று கண் கலங்கி சொன்னவர், ""அண்ணா வேலை செய்ற இடத்துல தேடுவாங்க நான் கிளம்புறேன்'' என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.

st

அப்போது அங்கு வந்த மக்கள் பாதை பெருங்களூர் பகுதி பொறுப்பாளர் ராஜேஷ்கண்ணன் நம்மிடம்... ""இந்தப் பக்கம் ஒரு வீடு இருப்பதை கொரோனா ஊரடங்கு நிவாரணம் கொடுக்க வந்த போதுதான் பார்த்தோம். அப்பதான் இந்த சகோதரியிடம் விசாரித்த போது அவரது நிலைமையை சொன்னார். ரொம்ப கஷ்டமாக இருந்தது. சத்தியாவிற்காக தாராள மனம் படைத்தவர்களிடம் மக்கள் பாதை மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறோம் விருப்பமும், உதவி செய்யும் மனமும் கொண்டவர்கள் தாராளமாக உதவலாம்'' என்றார்.

நாம் பார்த்து அறிந்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றோம். ""சத்தியாவிற்கான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் நாளையே தொடங்கும்'' என்றார் நம்பிக்கையாக.

ஆட்சியர் சொன்னபடியே அடுத்த நாள் காலையிலேயே வருவாய் துறை அதிகாரிகள் சத்தியா வீட்டிற்கு சென்று விசாரணை செய்த பிறகு அவர்கள் குடியிருக்கும் மண் குடிசை இருப்பது மேய்ச்சல் நிலம் என்பதால் மாற்று இடம் தேடி அந்த இடத்தை சுத்தம் செய்து அளவீடு செய்துபட்டா வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அதே போல மனநலம் குன்றிய சத்தியாவின் தாயாருக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைக்க அதற்கான அதிகாரிகள் வந்து பார்த்து மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் வழங்கி உதவித் தொகைக்காக விண்ணப்பம் பதிவு செய்து கொண்டு சென்றனர்.

சத்தியாவின் தாயாருக்கு மனநல சிகிச்சை அளிக்க போரம் கிராமத்திற்கே வந்த மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வ நாயகம் 2 மணி நேரம் அவர்களிடம் பேசிவிட்டு சில நாட்கள் மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று தனி வேனில் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார். மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க சத்தியாவிற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் நக்கீரன் இணையத்தில் சத்தியா பற்றிய செய்தி மற்றும் வீடியோவை பதிவு செய்த சில மணி நேரத்தில் இருந்து அவருக்கு உதவிகள் செய்ய பலரும் முன்வந்து வங்கி கணக்கு எண் கேட்டனர். தொடர்பு எண் கேட்டனர். பலரும் ஆறுதல் சொன்னார்கள். உதவிகள் வந்து கொண்டே இருக்கிறது.

ss7 ந் தேதி மாணவி சத்தியாவை அலுவலகத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் அவரிடம் வீட்டு மனைப் பட்டாவை கொடுத்து ""உனக்கு உதவிகள் செய்ய நாங்கள் இருக்கிறோம். படித்து நல்ல நிலையில் வரவேண்டும். அம்மாவுக்கான சிகிச்சை தொடர்ந்து நடக்கும்''' என்று அறிவுரைகள் கூறி அனுப்பினார். அடுத்து சத்தியாவிற்கு அரசு வீட்டிற்கான ஆணை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நம்மிடம் பேசிய சத்தியா... ""நக்கீரன் செய்தியால் உதவிகள் வருகிறது. மாவட்ட ஆட்சியர் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல உதவிகள் செய்து கொடுத் திருக்கிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார் படிப்புக்கு உதவிகள் செய்கிறார். ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பலரும் துணையாக இருக் கிறார்கள். மக்கள் பாதை சகோதரர்கள் தொடர்ந்து கூடவே இருந்து உதவிகள் செய்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக் கிறேன். என்மீது நம்பிக்கை வைத்து உதவிகளை செய்த அனைவருக்கும் நான் ஒரு அதிகாரியாகி நன்றிக்கடன் செலுத்துவேன்'' என்றார்.

நம் கோரிக்கையை ஏற்று மாணவி குடும்பத்திற்கு உதவிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் அதிகாரிகள், பல நாடுகளில் இருந்தும் தொடர்ந்து உதவிகள் செய்து கொண்டிருக்கும் நல் உள்ளங்களுக்கும் நம் கவனத்திற்கு கொண்டு வந்த மக்கள் பாதைக்கும் நக்கீரன் சார்பிலும் நன்றிகள்.

-இரா. பகத்சிங்

நெகிழ்ந்த எஸ்.பி.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திடீரென போரம் கிராமத்திற்கு சென்று சத்தியாவை சந்தித்து உணவுப் பொருட்கள், காய்கறி, பழங்கள், சிறு பண உதவி என அனைத்தையும் வழங்கியவர், சத்தியாவின் மன தைரியத்தைப் பாராட்டியதோடு, அவருக்கான புத்தகங்கள் தந்து, போட்டித் தேர்வுக்கு சென்னையில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். நம்மிடம் அவர், நக்கீரன் செய்தி மற்றும் வீடியோவைப் பார்த்த போது கண்கள் கலங்கியது. அதன் பிறகு என்னால் அலுவலகத்தில் இருக்க முடியவில்லை. அதனால் உடனே கிளம்பி வந்து உதவி செய்தேன்“ என்றார் நெகிழ்ச்சியாக.

-செம்பருத்தி